அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Monday, September 29, 2008

அபூமூஸா (ரலி) அபூஆமிர் (ரலி) சிறப்புகள்..

1623. மக்காவுக்கும் மதீனாவிற்குமிடையே 'ஜிஃரானா' என்னுமிடத்தில் பிலால் (ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்தபோது நான் அவர்களிடம் இருந்தேன். அப்போது கிராமவாசி ஒருவர் (நபி -ஸல் - அவர்களிடம்) வந்து, 'நீங்கள் எனக்கு வாக்களித்ததைக் கொடுக்கமாட்டீர்களா?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'நற்செய்தியைப் பெற்றுக் கொள்'' என்று கூறினார்கள். அதற்கு அவர், 'இந்த நற்செய்தியைத் தான் எனக்கு நீங்கள் நிறையச் சொல்லி விட்டீர்களே!'' என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தவரைப் போன்று என்னையும் பிலால் (ரலி) அவர்களையும் நோக்கி வந்தார்கள். 'இவர் (என்னுடைய) நற்செய்தியை ஏற்க மறுத்து விட்டார். நீங்கள் இருவரும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். நாங்கள் இருவரும், 'நாங்கள் ஏற்றுக் கொண்டோம்'' என்று கூறினோம். பிறகு தண்ணீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதில் தம் இருகைகளையும் தம் முகத்தையும் கழுவி, அதில் உமிழ்ந்தார்கள் பிறகு (எங்களிடம்), 'இதிலிருந்து சிறிது அருந்திவிட்டு, 'உங்கள் முகங்களிலும் உங்கள் மார்புகளிலும் ஊற்றிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். எனவே, நாங்கள் இருவரும் அந்தப் பாத்திரத்தை எடுத்து அவ்வாறே செய்தோம். அப்போது (நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா (ரலி) திரைக்குப் பின்னாலிருந்து எங்கள் இருவரையும் அழைத்து, '(இறை நம்பிக்கையாளர்களான) உங்களின் அன்னை(யான என)க்காகவும் அதிலிருந்து சிறிது (தண்ணீரை) மீதி வையுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் இருவரும் அவர்களுக்காக அதில் சிறிது மீதி வைத்தோம்.
புஹாரி : 4328 அபூமூஸா (ரலி).

1624. நபி (ஸல்) அவர்கள், ஹுனைன் போரை முடித்துக் கொண்டு திரும்பியபோது, அபூ அமீர் அவர்களை (தளபதியாக்கி) 'அவ்தாஸ்' பள்ளத்தாக்கிற்கு ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். அப்போது அபூ ஆமிர் அவர்கள் (கவிஞன்) 'துரைத் இப்னு ஸிம்மா'வைச் சந்தித்தார்கள். (அவர்கள் இருவருக்குமிடையில் சண்டை நடந்தது. அதில்) துரைத் கொல்லப்பட்டான். அவனுடைய தோழர்களை அல்லாஹ் தோற்கடித்தான். அபூ ஆமிர் அவர்களுடன் என்னையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் போருக்கு) அனுப்பியிருந்தார்கள். அப்போரின்போது அபூ ஆமிர் அவர்களின் முழங்காலில் அம்பு பாய்ந்தது. ஜுஷம் குலத்தைச் சேர்ந்த ஒருவனே அந்த அம்பை எய்து, அதை அவர்களின் முழங்காலில் நிறுத்தினான். உடனே நான் அவர்களுக்கு அருகில் சென்று, 'என் தந்தையின் சகோதரரே! உங்களின் மீது அம்பெய்தவன் யார்?' என்று கேட்டேன். 'என் மீது அம்பெய்து என்னைக் கொன்றவன் இதோ!'' என்று (அவனை நோக்கி) என்னிடம் சைகை காட்டினார்கள். நான் அவனை நோக்கிச் சென்று, அவனை அடைந்தேன். என்னைக் கண்டதும் அவன் புறமுதுகிட்டு ஓடலானான். அவனைப் பின்தொடர்ந்து நானும் ஓடிக் கொண்டே, '(என்னைக் கண்டு ஓடுகிறாயே) உனக்கு வெட்கமில்லையா? நீ நிற்க மாட்டாயா?' என்று கேட்டேன். உடனே அவன் (ஓடுவதை) நிறுத்திக் கொண்டான். பிறகு நாங்கள் இருவரும் வாளினால் மோதிக் கொண்டோம். அப்போது அவனை நான் கொன்று விட்டேன். பிறகு நான் அபூ ஆமிர் அவர்களிடம் (சென்று), 'உங்களைக் கொல்ல முயன்ற ஆளை அல்லாஹ் (என் மூலம்) கொன்றுவிட்டான்'' என்று கூறினேன். பிறகு, (''என்னுடைய முழங்காலில் பாய்திருக்கும்) இந்த அம்மைப் பிடுங்கியெடு'' என்று அவர்கள் கூற, உடனே நான் அதைப் பிடுங்கினேன். அதிலிருந்து நீர் கொட்டியது. 'என் சகோதரரின் மகனே! நபி (ஸல்) அவர்களுக்கு (என்) சலாம் கூறி, எனக்காக (அல்லாஹ்விடம்) பாவ மன்னிப்புக் கேட்கும்படி கோரு'' என்று அபூ ஆமிர் (ரலி) கூறினார். பிறகு என்னைத் தம் பிரதிநிதியாக மக்களுக்கு நியமித்துவிட்டு, சிறிது நேரத்திற்குப் பின் அபூ ஆமீர் (ரலி) (வீர) மரணமடைந்தார்கள். பிறகு (அங்கிருந்து) நான் திரும்பி, நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் தங்களின் வீட்டில் (பேரீச்சம் நாரினால் வேயப்பட்ட) கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்கள். அதன் மீது விரிப்பு ஒன்று இருந்தது. (எனினும்) கட்டிலின் கயிறு நபி (ஸல்) அவர்களின் முதுகிலும், இரண்டு விலாப்புறங்களிலும் அடையாளம் பதித்திருந்தது. பிறகு அவர்களிடம் எங்கள் செய்தியையும், அபூ ஆமிர் அவர்களின் செய்தியையும் கூறி, தமக்காகப் பாவமன்னிப்புக் கேட்கும்படி ஆமிர் அவர்கள் வேண்டியிருக்கிறார்கள் என்பது பற்றியும் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரும்படிக் கூறி, அதில் உளூச் செய்தார்கள். பிறகு தம் இரண்டு கரங்களையும் உயர்த்தி, 'இறைவா! அபூ ஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக! மறுமை நாளில் உன் படைப்பினமான மனிதர்களில் பலரையும் விட (அந்தஸ்தில்) உயர்ந்தவராக அவரை ஆக்குவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களின் அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் பார்த்தேன். உடனே நான், 'எனக்காகவும் பாவமன்னிப்புக் கோருங்கள் (நபியே!)'' என்று கூறினேன். அதற்கவர்கள், 'இறைவா! அப்துல்லாஹ் இப்னு கைஸின் பாவத்தை மன்னித்து, மறுமை நாளில் கண்ணியம் நிறைந்த இருப்பிடத்திற்கு அவரை அனுப்புவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அபூபுர்தா (ரலி) கூறினார்: (நபி - ஸல் - அவர்கள் புரிந்த இரண்டு பிரார்த்தனைகளில்) ஒன்று அபூ அமீர் (ரலி) அவர்களுக்கும் மற்றொன்று அபூமூஸா (ரலி) அவர்களுக்கும் உரியதாகும்.
புஹாரி : 4323 அபூமூஸா (ரலி).

1625. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் அஷ்அரீ (குல) நண்பர்கள் இரவில் (தம் தங்குமிடங்களில்) நுழையும்போது அவர்கள் குர்ஆன் ஒதும் ஒசையை நான் அறிவேன். பகல் நேரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான்பார்த்திருக்கா விட்டாலும் இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். மேலும் அவர்களில் விவேகம் மிக்க ஒருவர் இருக்கிறார் அவர் குதிரைப் படையினரைச் சந்தித்தால் அல்லது எதிரிகளைச் சந்தித்தால் அவர்களைப் பார்த்து என் தோழர்கள் தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு உத்தரவிடுகின்றார் என்று (துணிவோடு) கூறுவார் என்று கூறினார்கள்.
புஹாரி : 4232 அபூமூஸா (ரலி).

1626. அஷ்அரீ குலத்தினரின் போரின்போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 2486 அபூமூஸா (ரலி).

Saturday, September 27, 2008

நபித்தோழர் ஹாத்திப் பின் அபீ பல்தஆ (ரலி) அவர்களின் சிறப்பு.

1622. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் அவர்களையும் மிக்தாத் அவர்களையும் 'நீங்கள் 'ரவ்ளத்து காக்' என்னுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் 'ரவ்ளா' எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), 'கடிதத்தை வெளியே எடு'' என்று கூறினோம். அவள், 'என்னிடம் கடிதம் எதுவுமில்லை'' என்று கூறினாள். நாங்கள், 'ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்'' என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போரிடையுள்ள பிரமுகர்கள் சிலருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'ஹாத்திபே! என்ன இது?' என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி), 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவரசப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாக இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக் கொண்டபடி இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாத்தைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை'' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'இவர் உங்களிடம் உண்மை பேசினார்'' என்று கூறினார்கள். உமர் (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விட என்னை அனுமதியுங்கள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், 'இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பார்த்து, 'நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்' என்று கூறி விட்டிருக்கலாம்'' என்றார்கள்.
புஹாரி : 3007 அலீ(ரலி).

Wednesday, September 24, 2008

தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவரின் மறுமை நிலை

அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தொழுகையை வலியுறுத்தும் அநேகமான இடங்களில் எல்லாம் கூடவே ஜக்காத்தையும் வலியுறுத்திக் கூறுவதை நாம் காண முடிகிறது. அந்த அளவிற்கு இன்றியமையாத கடமையாக இருக்கும் ஜக்காத் விஷயத்தில் நாம் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளில் சிலர் தங்க நகைகளை வாங்கி சேகரித்து வைத்துக் கொண்டு அதற்கு ஜக்காத் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல் இருக்கின்றனர். இவர்கள் பின்வரும் திருமறை வசனங்களையும் மற்றும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையையும் பற்றி சற்று சிந்தித்து அதன்படி செயல்பட கடமைப் பட்டுள்ளார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: -“யார் தங்கத்தை (அதற்குரிய பொருளாதாரத்தை)யும் வெள்ளியை (அதன் மதிப்பீடு பொருளை)யும் சேகரித்து வைத்து அல்லாஹ்வின் வழியில் அவற்றை செலவு செய்யாமல் வாழ்கிறார்களோ அவர்களுக்கு கடின வேதனை உண்டு என்று (நபியே!) நீர் எச்சரிக்கை செய்க. மறுமை நாளில் தங்கத்தையும், வெள்ளியையும் நரக நெருப்பிலிட்டு பழுக்கக் காய்ச்சப்பட்டு அவற்றைக்கொண்டு அவர்களின் முகங்களிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். (ஜகாத் கொடுக்காது) நீங்கள் சேகரித்து வைத்ததை இதோ சுவைத்துப் பாருங்கள் என்று கூறப்படும்” (அல்-குர்ஆன்).

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “தங்கம், மற்றும் வெள்ளியின் உரிமைகளை (ஜகாத்தை) நிறைவேற்றாதவனுக்கு மறுமை நாளில், அவை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்ட பாளங்களாக மாற்றப்பட்டு அதன் மூலம் அவனது முகத்திலும், விலாப்புறங்களிலும், முதுகிலும் சூடு போடப்படும். அந்நெருப்புப் பாளங்கள் குளிர்ந்து விடும் போதெல்லாம் மீண்டும் சூடேற்றப்படும். (மறுமையின்) அந்நாள்(இம்மையின்) ஐம்பது ஆயிரம் வருடங்களுக்கு நிகரானதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம், நஸாயி.

யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, ‘நானே உன்னுடைய செல்வம்” ‘நானே உன்னுடைய செல்வம்” ‘நானே உன்னுடைய புதையல்” என்று கூறும்.” இதைக் கூறிவிட்டு, ‘அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.” என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள். (ஆதாரம்: புகாரி)

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?’ எனக் கேட்டார். ‘நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

அல்லாஹ் நம்மனைவரையும் ஜகாத்தை முறைப்படி கொடுத்து வரக்கூடியவர்களாக ஆக்கியருள்வானாகவும்.

Article taken from சுவனத்தென்றல் ---நன்றி

Saturday, September 20, 2008

புனித ரமளானின் இறுதிப் பத்தில் ஓர் இனிய பிரார்த்தணை



இந்தப் புனித ரமளானில் தினமும் இறைஞ்சுவதற்குப் பொருத்தமான இந்தப் பிரார்த்தணை, சங்கைக்குரிய கமாலுத்தீன் மதனி அவர்கள் தொகுத்த ஹஜ் உம்ரா சியாரத் வழிகாட்டி என்னும் சிற்றேட்டிலிருந்து நன்றியுடன் எடுக்கப்பட்டது. மொழி நடையில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பிரார்த்தணை
யா அல்லாஹ்! எனது தீனிலும் துன்யாவிலும், குடும்பத்திலும், பொருளிலும் மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் தந்தருள உன்னை வேண்டுகிறேன். யா அல்லாஹ் எனது வெட்கத்தலங்களை மறைத்தருள்வாளாக! எனது பயங்களை விட்டும் என்னை நிர்ப்பயமான வனாக்குவாயாக! எனது முன்புறம் பின்புறம், வலப்புறம், இடப்புறம், மேல்புறம் கீழ்ப்புறம் எல்லா திசைகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! எனது கீழ்பாகத்திலிருந்து நான் தாக்கப்படுவதை விட்டும் உன் வலுப்பத்தைக் கொண்டு காவல் தேடுகிறேன்.


யா அல்லாஹ்! எனது உடலிலும், கேள்வியிலும் பார்வையிலும் ஆரோக்கியத்தைத் தந்தருள்வாயாக. வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. இறை நிராகரிப்பு, ஏழ்மை, மண்ணறை வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் காவல் தேடுகிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை.


யா அல்லாஹ்! நீயே என்னைப் படைத்து பரிபாலிப்பவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உனது அடிமை. என்னால் இயன்றவரை உனக்களித்த வாக்குறுதியையும், உன்னுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தையும் நிறைவேற்றக் கூடியவனாக இருக்கிறேன். நான் செய்த தீங்கிலிருந்து உன்னிடம் காவல் தேடுகிறேன்.எனக்கு சகல சௌபாக்கியங்களையும் அருளினாய் என நான் ஒப்புக் கொள்கிறேன். என் பாவத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். எனவே எனது பாவத்தை மன்னித்தருள்வாயாக. பாவங்களை மன்னிப்பவன் உன்னைத் தவிர யாரும் இல்லை. இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், முதலியவற்றிலிருந்தும், கடன் அதிகரிப்பதை விட்டும், மனிதர்கள் ஆதிக்கத்தை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.


யா அல்லாஹ்! இன்றைய தினத்தின் ஆரம்பத்தை நலவானதாகவும், பகுதியை வெற்றியானதாகவும், இறுதியை ஜெயமானதாகவும் ஆக்கியருள்வாயாக. ஈருலகிலும் நல்லவற்றைத் தருவாயாக. மரணத்திற்குப்பின் நல்வாழ்வையும். சங்கைக் குரிய உன் திருமுகத்தைக் கண்டு மகிழும் பாக்கியத்தையும், எவ்வித தங்கடங்கள் குழப்பங்களின்றி உன்னைச் சந்திக்கும் பெரும் பேற்றையும் தந்தருள உன்னை வேண்டுகிறேன்.


யா அல்லாஹ்! நான் பிறருக்கு அநீதி இழைப்பதிலிருந்தும், பிறரால் அநீதி இழைக்கப் படுவதிலிருந்தும், பிறரை நான் தாக்குவதிலிருந்தும், பிறர் என்னைத் தாக்குவதிலிருந்தும், தவறைச் சம்பாதிப்பதிலிருந்தும், மன்னிக்கப்படாத பாவத்திலிருந்தும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.

யா அல்லாஹ்! சோதனையான முதுமையை விட்டும், உன்னிடம் காவல் தேடுகிறேன். நற்குணங்களின் பக்கம் எனக்கு வழிகாட்டுவாயாயக. அவற்றில் நல்லவற்றைக் காண்பிப்பவன் உன்னைத் தவிர யாருமில்லை. தவறான செயல்கள், தவறான குணங்களை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக. தவறுகளை விட்டும் காப்பாற்றக் கூடியவன் உன்னைத் தவிர யாருமில்லை.
யா அல்லாஹ்! எனது மார்க்கத்தைச் சீர்ப்படுத்துவாயாக. எனது இருப்பிடத்தை விசாலப் படுத்துவாயாயக. எனது ரிஜ்கில் பரக்கத்தை ஏற்படுத்துவாயாக. முரட்டுத்தனம், பொடுபோக்கு, இழிவு முதலிய கெட்ட குணங்களை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக.


யா அல்லாஹ்! செவிடு, ஊமை, குஷ்டம், கொடு நோய், முதலியவற்றை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன். எனக்கு இறையச்சத்தைத் தந்து என்னைத் தூய்மைப் படுத்துவாயாக. தூய்மைப்படுத்துபவர்களில் நீயே சிறந்தவன். நீயே எனது அதிபதி.


யா அல்லாஹ்! பயனற்ற கல்வி, பயமற்ற உள்ளம், நிறவைடையா மனம், ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனை, ஆகியவற்றிலிருந்தும், நான் செய்த தீங்கு, செய்யாத தீங்கு, நான் அறிற்து செய்த பிழைகள், அறியாமல் செய்த பிழைகள், அனைத்திலிருந்தும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.


யா அல்லாஹ்!நீ எனக்கருளிய அருட்கொடைகளும், ஆரோக்கியமும், என்னை விட்டுப் போய்விடுவதை விட்டும், திடீரென வரும் உன் வேதனைகளை விட்டும், உன்னுடைய எல்லாக் கோபங்களை விட்டும், உன்னிடம் காவல் தேடுகிறேன்.


யா அல்லாஹ்! கட்டடங்கள் இடிந்து விழுதல், தவறிவிழுதல், தண்ணீரில் மூழ்குதல், நெருப்பில் கரியுதல், இயலாத முதுமை, ஆகியவற்றிலிருந்தும், மரண நேரத்தில் ஷைத்தான் என்னை வழி கெடுப்பதை விட்டும், கொடிய விஷப் பிராணிகள் கொட்டி மரணமடைவதிலிருந்தும், இழுக்களவில் கொண்டு சேர்க்கும்படியான பேராசையை விட்டும், கெட்ட குணங்கள், கெட்ட செயல்கள், கெட்ட நோய்கள், கெட்ட எண்ணங்கள், ஆகியவற்றவை விட்டும், கடன் அதிகரிப்பதை விட்டும், எதிரிகளின் ஆதிக்கத்தை விட்டும், எங்களுக்கு ஏற்படும் தங்கடங்கள் மீது எதிரிகள் மகிழ்ச்சியடைவதை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.


யா அல்லாஹ்! எனது செயல்களில் பாதுகாப்பாக எனது மார்க்கத்தையும், பிழைப்பிருக்கும்படியாக எனது இம்மை வாழ்வையும், நான் திரும்பச் செல்லவிருக்கும் எனது மறுமை வாழ்வையும், சீர்படுத்துவாயாக! நன்மையான செயல்களை அதிகம் செய்யும்படியாக எனது வாழ்க்கையையும், அனைத்துத் தீமைகளை விட்டும் நிவர்த்தியானதாக எனது மரணத்தையும், ஆக்கியருள்வாயாக. என்னைப் படைத்தவனே எனக்கு ஆதரவாக உதவியளி, எதிராக உதவாதே. எனக்கு சாதகமாக ஆதரவளி, பாதகமாக ஆதரவளிக்காதே. எனக்கு நேர்வழி காட்டி அவ்வழியை எளிதாக்கியருள்வாயாக.


யா அல்லாஹ்! உன்னை அதிகம் நினைக்கக் கூடியவனாகவும், அதிகம் வழிப்படக் கூடியவனாகவும், அதிகம் அஞ்சக் கூடியவனாகவும், உன் பக்கமே அதிகம் மீள்பனாகவும் என்னை ஆக்கியருள்வாயாக.


யா அல்லாஹ்! பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக. என் பாவத்தைத் தூய்மைப் படுத்துவாயாக. எனது பிரார்த்தணைக்கு பதிலளிப்பாயாக. என்னுடைய ஆதாரத்தை உறுதிபெறச் செய்வாயாக. எனது உள்ளத்தை நேர்வழிப்படுத்துவாயாக. எனது நாவை உறுதியாக்குவாயாக. பொறாமை நெஞ்சில் குடி கொள்வதை விட்டும் என்னை அப்பாற்படுத்துவாயாக.


யா அல்லாஹ்! என்னுடைய செயல்களில் நான் நிலைபட்டிருப்பதையும், நேர் வழியில் நான் உறுதியுடன் இருப்பதையும், உன்னிடம் கேட்கிறேன். நீ எனக்கு அருளிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி உன்னை நன்முறையில் வணங்கக் கூடியவனாக என்னை ஆக்கிவைப்பாயாக.


யா அல்லாஹ்! குறையற்ற உள்ளத்தையும், உண்மை பேசும் நாவையும், தந்தருள உன்னிடம் வேண்டுகிறேன். நீ நன்மை என அறிந்த அனைத்தையும் தந்தருள உன்னிடம் வேண்டுகிறேன். நீ தீமை என அறிந்த அனைத்திலிருந்தும் உன்னிடம் காவல் தேடுகிறேன். நீ அறிந்த அனைத்திலும் பிழை பொறுக்கத் தேடுகிறேன். மறைவானவற்றை நீயே நன்கறிந்தவன்.


யா அல்லாஹ்! நேர் வழியில் செல்ல எனக்கு மன உதிப்பைத் தருவாயாக. எனது ஆன்மாவின் தீங்கை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக. நல்லவற்றை செய்வதையும், தீயவற்றை விடுவதையும், ஏழைகளை நேசிப்பதையும் உன்னிடம் கேட்கிறேன். பாவ மன்னிப்பை உன்னிடம் கேட்கிறேன். உனது அடியார்களைச் சோதிக்க நீ நாடினால் அச்சோதனையில் நான் சிக்காமல் என்னை மரணிக்கச் செய்வாயாக.


யா அல்லாஹ்! உனது நேசத்தையும், உன்னை நேசிப்போர் நேசத்தையும், உனது நேசத்தின் பக்கம் கொண்டு சேர்க்கும் அனைத்து செயல்களையும் நேசிப்பதையும், உன்னிடம் கேட்கிறேன்.


யா அல்லாஹ்! நல்ல கேள்வியையும், நல்ல துஆவையும், நல்ல வெற்றியையும், நற்கூலியையும் எனக்குத் தந்தருள்வாயாக. என்னை நிலையானவனாக ஆக்கி, எனது நன்மையின் எடையை அதிகரிப்பாயாக. எனது ஈமானை முழுமைப்படுத்துவாயாக. சுவனத்தில் எனது தரத்தை உயர்த்துவாயாக. எனது தொழுகைகளை ஏற்றுக் கொள்வாயாக. எனது தவறுகளை மன்னிப்பாயாக. சுவனத்தில் உயர்ந்த பதவியைத் தருவாயாக.


யா அல்லாஹ்! நற்செயல்களின் திறவுகோலையும், அதன் நல்ல துவக்கத்தையும், நல்ல முடிவையும், அக புற நன்மைகள் அனைத்தையும் உன்னிடம் கேட்கிறேன். சுவனத்தில் உயர்ந்த பொறுப்புகளைத் தருவாயாக.


யா அல்லாஹ்! எனது சிறப்பை உயர்த்துவாயாக. பாவத்தை விட்டுவிடுவாயாக. என் உள்ளத்தை; தூய்மைப் படுத்துவாயாக. எனது வெட்கத்தலங்களைப் பாதுகாப்பாயாக. எனது பாவங்களை மன்னிப்பாயாக. சுவனத்தில் உயர்பதவியைத் தருவாயாக. என்னுடைய கேள்வி, பார்வை, ஆத்மா, தோற்றம், குணம், அனைத்திலும் பரக்கத் செய்லாயாக.


யா அல்லாஹ்! எனது குடும்பம், எனது வாழ்க்கை, எனது அறிவு ஆகிய அனைத்திலும் பரக்கத் செய்வாயாக. எனது நற்செயல்களை அங்கீகரித்து சுவனத்தில் உயர் பதவியைத் தருவாயாக.உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உன் மார்க்கத்தில் நிலக்கச் செய்வாயாக. உள்ளங்களையும் பார்வைகளையும் திருப்பக் கூடியவனே! எங்கள் உள்ளங்களை உன்னை வழிபடுவதன் பக்கம் திருப்புவாயாக. நன்மையைக் குறைக்காமல் அதிகம் தருவாயாக. இழிவு படுத்தாமல் எங்களை சங்கைப் படுத்துவாயாக. இல்லை எனச் சொல்லாமல் தருவாயாக. குறைவின்றிக் கொடுப்பாயாக.


யா அல்லாஹ்! எங்கள் அனைத்துக் காரியங்களின் முடிவையும் நல்முடிவாக்குவாயாக. இம்மையின் இழிவை விட்டும், மறுமையின் வேதனையை விட்டும் எங்களைக் காப்பாற்றுவாயாக. எங்களுக்கும் எங்கள் பாவங்களுக்கும் இடையில் சுற்றி வரும் உள்ளச்சத்தை எங்களுக்குத் தருவாயாக. உனது சுவனத்தின் பக்கம் கொண்டு சேர்க்கும் உன் வழிபாட்டை எங்களுக்குத் தருவாயாக.


யா அல்லாஹ்! எங்கள் கேள்விகளிலும் எங்கள் பார்வைகளிலும், எங்கள் சக்திகளிலும் சுகத்தைத் தருவாயாக. எங்களுக்கு அநீதி இழைத்தவர்களிடம் நீ பழிக்குப் பழி வாங்குவாயாக. எங்கள் பகைவர்களுக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக. உலகத்தை எங்கள் முக்கிய நோக்கமாகவும், அதற்காகவே வாழக்கூடியவர்களாகவும் எங்களை ஆக்கிவிடாதே. எங்கள் சோதனைகளை எங்கள் மார்க்கத்தில் ஆக்கிவிடாதே. நாங்கள் செய்த பாவங்களின் காரணமாக உன்னை அஞ்சாதவனையும், கருணையில்லாதவனையும் எங்கள் மீது சாட்டிவிடாதே.

யா அல்லாஹ்! உனது அருளைப் பெற்றுக் கொள்ளத் தேவையான அனைத்தையும், உனது மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளத் தேவையான மன உறுதியையும் உன்னிடம் கேட்கிறேன். அனைத்து நன்மைகளையும் கனீமத்தாகத் தந்து அனைத்து தீமைகளை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக. சுவனம் கிடைத்து வெற்றி பெற்றவனாகவும், நரகத்தை விட்டு விடுதலை பெற்றவனாகவும் என்னை ஆக்குவாயாக.

கிருபையாளர்களுக் கெல்லாம் கிருபையாளனாகிய இறைவனே! எங்கள் எந்தப் பாவத்தையும் மன்னிக்காமல் விட்டுவிடாதே. எங்கள் எந்தக் குறையையும் மறைக்காமல் விட்டு விடாதே. எங்கள் எந்தக் கவலையையும் சந்தோஷப்படுத்தாமல் விட்டு விடாதே. எங்கள் எந்தக் கடனையும் நிறைவேற்றாமல் வைத்து விடாதே. எங்களுக்குப் பயனுள்ள ஈருலக எந்தத் தேவைகளையும் நிறைவேற்றாமல் விட்டுவிடாதே.

யா அல்லாஹ்! என் இதயத்திற்கு நேர் வழி காட்டும்படியான அருளை, சிதறுண்டுக் கிடக்கும் என் செயல்களை ஒன்று சேர்க்கும்படியான அருளை, என்னிடமிருந்து மறைந்து போனவற்றை பாதுகாக்கும்படியான அருளை, என் முன்னுள்ளவற்றை உன்னளவில் உயர்த்திக் கொள்ளும்படியான அருளை, என் முகத்தை வெண்மையாக்கும்படியான அருளை, எனது அறிவைத் தூய்மைப்படுத்தும் படியான அருளை, எனக்கு நேர்வழி காட்டி என்னை விட்டும் பித்னாக்ளை அப்புறப்படுத்தும்படியான அருளை, அனைத்துத் தீய செயல்களை விட்டும் என்னைப் பாதுகாக்கும்படியான அருளை உன்னிடம் கேட்கிறேன்.

யா அல்லாஹ்! நியாயத் தீர்பட்பு நாளில் வெற்றியையும், நல்லோர்கள் வாழ்வையும், உயிர்த்தியாகிகள் இருப்பிடத்தையும், நபிமார்களின் தோழமையையும், எதிரிகளுக்குக் கேடாக எனக்கு வெற்றியையும் உன்னிடம் கேட்கிறேன். சரியான ஈமானையும், நற்குணத்தில் நம்பிக்கைகையயும் வெற்றிமேல் வெற்றியையும் எனக்குத் தந்தருள்வாயாக.


யா அல்லாஹ்! உனது அருட் கொடையையும், ஆபியத்தையும், பாவமன்னிப்பையும், விருப்பத்தையும், ஆரோக்கியத்தையும், பத்தினித்தனத்தையும், நற்குணத்தையும், உனது தீர்ப்பைப் பொருந்திக் கொள்ளும் உள்ளத்தையும். உன்னிடம் கேட்கிறேன்.

யா அல்லாஹ்! என் நப்ஸின் தீங்கிலிருந்தும், உனது ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் அனைத்து உயிர்ப்பிராணிகளின் தீங்கிலிருந்தும், உன்னிடம் காவல் தேடுகிறேன். (எனது நாயனாகிய நீயே) நேர் வழியில் நடத்துபவன்.


யா அல்லாஹ்! எனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறாய். நான் இருக்கும் இடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். என் இரகசியத்தையும், பரகசியத்தையும் நீயே அறிந்தவன். உனக்குத் தெரியாமல் என் செயல்களில் எதுவும் இல்லை. நானோ பரம ஏழையாகவும் தேவையுடையவனாகவும் தஞ்சம் நாடி அபயம் கோரக் கூடியவனாக உள்ளேன். உன்னை அஞ்சி பயந்து நான் செய்த பாவங்களை ஒப்புக் கொண்டு மிஸ்கீன்கள் கேட்பது போல் கேட்கிறேன். பார்வை இழந்தவன் பயந்து உன்னை அழைத்துக் கேட்பது போல் கேட்கிறேன். கேவலமான பாவி இறைஞ்சுவது போல் இறைஞ்சிக் கேட்கிறேன். தலைதாழ்த்தி தன்னையே உனக்கு அர்ப்பணித்தவனாக உன்னிடம் இறைஞ்சுகிறேன். எனது பிரார்த்தணைகளை அங்கீகரிப்பாயாக.
ஸலவாத்தும் ஸலாமும் எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் அனைவர் மீதும் உண்டவதாக.

நன்றி...http://masdooka.wordpress.com

தல்ஹா (ரலி) ஜுபைர் (ரலி) சிறப்புகள்

1563. நபி (ஸல்) அவர்கள் (இணைவைப்பவர்களுடன்) போரிட்ட அந்த (உஹுதுப் போரின்) நாள்களில் அவர்களுடன் எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் இருக்கவில்லை. இதை, அறிவிப்பாளர் அபூ உஸ்மான் அபதுர் ரஹ்மான் அந்நஹ்தீ (ரஹ்) தல்ஹா (ரலி) மற்றும் ஸஅத் (ரலி) ஆகிய இருவரிடமே நேரடியாகக் கேட்டு அறிவித்தார்கள்.
புஹாரி : 3723 அபூஉஸ்மான் (ரலி).


1564. அனைத்துக் குலங்களும் நம்மை எதிர்த்துப் போரிடும் (இந்த அகழ்ப் போர்) நாளில் அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஸுபைர் (ரலி), 'நான் (உளவறிந்து கொண்டு வருகிறேன்)'' என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், 'அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்?' என்று கேட்க, ஸுபைர் (ரலி), 'நான்'' என்று கூறினார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், 'ஒவ்வோர் இறைத்தூதருக்கும் பிரத்யேகமான தூய தோழர் ஒருவர் உண்டு. என் பிரத்யேகமான தூய தோழர் ஸுபைராவார்'' என்று கூறினார்கள்.
புஹாரி: 2846 ஜாபிர் (ரலி)


1565. அகழ்ப் போரின்போது நானும் உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) அவர்களும் (நபி - ஸல் அவர்களின் வீட்டுப்) பெண்களிடையே (பாதுகாப்புப்) பணியில் அமர்த்தப்பட்டோம். நான் அப்போது (என் தந்தை) ஸுபைர் (ரலி) தன் குதிரையின் மீது (சவாரி செய்த படி யூதர்களான) பனூ குறைழா குலத்தாரை நோக்கி இரண்டு... அல்லது மூன்று முறை போய் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் (இருப்பிடத்திற்குத்) திரும்பி வந்தபோது, 'என் தந்தையே! தாங்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டுமிருப்பதை பார்த்தேன்'' என்று சொன்னேன். அவர்கள், 'என்னை நீ பார்த்தாயா? என் அருமை மகனே!'' என்று கேட்டார்கள். நான், 'ஆம் (பார்த்தேன்)'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'பனூ குறைழாவிடம் சென்று (உளவறிந்து) என்னிடம் அவர்களின் செய்தியைக் கொண்டு வருபவர் யார்?' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் (அந்தப் பணியைச் செய்ய ஒப்புக் கொண்டு) சென்றேன். நான் (அவர்களின் செய்தியை உளவறிந்து கொண்டு) திரும்பி வந்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னை கௌரவிக்கும் வகையில்) தம் தாய் தந்தையார் இருவரையும் சேர்த்து, 'என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்' எனக் கூறினார்கள்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3720 அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி).

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்

1608. நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை. 'என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை'' என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, 'இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்கு'' என்று பிரார்த்தனை செய்தார்கள்.
புஹாரி : 3035-3036 ஜரீர்(ரலி).



1609. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், '(தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே 'யமன் நாட்டு கஅபா' என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது. நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் சிறந்த குதிரைப் படையினராக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, 'இறைவா! இவரை உறுதிப்படுத்து இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு'' என்று பிரார்த்தனை செய்தார்கள். எனவே, நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதருக்கு (காரியம் முடிந்து விட்டதைத்) தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி (ஸல்) அவர்களிடம், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப் போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று விட்டுவிட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கிறேன்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களின் குதிரைப் படை வீரர்களுக்கும் பரக்கத் (எனும் அருள்வளத்)தை அளிக்கும்படி ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
புஹாரி : 3020 ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)

ஜைனப் (ரலி) ,ஜைது பின் ஹாரிதா (ரலி) உஸாமா பின் ஜைது (ரலி) சிறப்புகள்.

ஜைனப் (ரலி) அவர்களின் சிறப்பு

1595. நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'உங்களின் மரணத்திற்குப் பின் எங்களில் யார் முதலில் வந்து உங்களைச் சேர்வார்?' எனக் கேட்டதற்கு, 'உங்களுள் கை நீளமானவரே!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்கள் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்து பார்த்தபோது ஸவ்தா (ரலி)வின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன. (ஜைனப் (ரலி) இறந்த) பிறகுதான் கை நீளமானவர் என்பது, அதிகம் தர்மம் செய்பவரைக் குறிக்கிறது என்பதை அறிந்தோம். (ஜைனப்) அவ்வாறு அதிகம் தர்மம் செய்பவராக இருந்தால் தான் நபி (ஸல்) அவர்களை முதலில் அடைந்தார். மேலும் அவர் தர்மம் செய்வதை (மிகவும்) விரும்பக் கூடியவராகவும் இருந்தார்.
புஹாரி :1420 ஆயிஷா (ரலி).


ஜைது பின் ஹாரிதா (ரலி) உஸாமா பின் ஜைது (ரலி) சிறப்புகள்.

1570. ''வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே, அல்லாஹ்விடம் நீதியாகும்'' எனும் (திருக்குர்ஆன் 33:5 வது) குர்ஆன் வசனம் அருளப்படும் வரை, நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களை 'ஸைத் இப்னு முஹம்மத்' (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.
புஹாரி : 4782 இப்னு உமர் (ரலி).


1571. நபி (ஸல்) அவர்கள், உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், '(இப்போது) இவரின் தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால்... (இது ஒன்றும் புதிதல்ல). இதற்கு முன் (மூத்தா போரின் போது) இவரின் தந்தையின் (ஸைத் அவர்களின்) தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். (அவரின் மகனான) இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவராவார்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3730 இப்னு உமர் (ரலி).

அலீ பின் அபுதாலிப் (ரலி) அவர்களின் சிறப்புகள்

1556. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்பட்டார்கள். (மனைவி மக்களைக் கவனித்துக் கொள்வதற்காக மதீனாவில்) அலீ (ரலி) அவர்களை (தாம் திரும்பி வரும்வரை தமக்கு)ப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி), 'குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச் செல்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'மூஸாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு என்னவெனில்), எனக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் இல்லை'' என்று கூறினார்கள்.
புஹாரி : 4416 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).


1557. நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது, 'அல்லாஹ் எவருடைய கரத்தில் வெற்றியைத் தரவிருக்கிறானே அத்தகைய ஒரு மனிதரிடம் (நாளைக்கு) நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியைத் தருவேன்'' என்று கூறக் கேட்டேன். உடனே, நபித் தோழர்கள், அதை யாரிடம் நபி (ஸல்) அவர்கள் கொடுக்கப் போகிறார்கள் என்று எதிர் பார்த்து நின்றனர். அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று விரும்பியவர்களாக மறுநாள் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'அலீ எங்கே?' என்று கேட்டார்கள். 'அவருக்குக் கண்வலி'' என்று கூறப்பட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களை அழைத்து வரும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் கண்களில் (தம்) எச்சிலை உமிழ்ந்தார்கள். உடனே அவர்களின் கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகிவிட்டது. உடனே, அலீ (ரலி), 'நம்மைப்போல் (முஸ்லிம்களாய்) ஆகும் வரை நாம் அவர்களுடன் போர் புரிவோம்'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நிதானமாகச் சென்று அவர்களின் களத்தில் இறங்குவீராக! பிறகு, அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்களின் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது (அரபுகளின் உயரிய செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்'' என்றார்கள்.
புஹாரி : 2942 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).


1558. அலீ (ரலி) கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டிருந்தது. 'நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டேனே'' என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். எந்த நாளின் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அந்த நாளின் மாலை நேரம் வந்தபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்'' என்றோ, 'அத்தகைய ஒருவர் இந்தக் கொடியைப் பிடித்திருப்பார்'' என்றோ அல்லது, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்'' என்றோ சொல்லிவிட்டு, 'அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்'' என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், 'இதோ, அலீ அவர்கள்!'' என்று கூறினர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான்.
புஹாரி : 2975 ஸலமா பின் அக்வஹ் (ரலி).


1559. நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமாவின் இல்லத்திற்கு வந்தபோது அலி (ரலி)யை காணவில்லை. உன் பெரிய தந்தையின் மகன் எங்கே? என்று ஃபாத்திமா (ரலி)விடம் கேட்டார்கள். எனக்கும் அவருக்கும் சிறிய மனஸ்தாபம் இருந்தது: கோபித்துக் கொண்டு சென்று விட்டார். என்னிடம் தங்கவில்லை என்று ஃபாத்திமா (ரலி) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர் எங்கே என்று பார்த்து வாரும்! என்று ஒருவரை அனுப்பினார்கள். அவர் வந்து, அலி பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்றார். நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்த போது அலி (ரலி) தமது மேலாடை விலகியவராகவும் மேனியில் மண் படிந்தவராகவும் ஒரு பக்கமாகப் படுத்திருந்தார்கள்கள். நபி (ஸல்) அவர்கள் அவரது மேனியில் படிந்திருந்த மண்ணைத் தட்டி விட்டு மண்ணின் தந்தையே எழும்! மண்ணின் தந்தையே எழும்! எனக் கூறினார்கள்.
புஹாரி : 441 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) மற்றும் இப்னு மஸவூத் (ரலி) அவர்களின் சிறப்பு

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) அவர்களின் சிறப்பு ...


1606. உஹதுப் போர் தினத்தன்று உறுப்புக்கள் சிதைக்கப்பட்ட நிலையில் என் தந்தையின் உடல் கொண்டு வரப்பட்டு நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் வைக்கப்பட்டது. அவ்வுடல் மீது ஒரு துணி போர்த்தப்பட்டிருந்தது. அப்போது நான் சென்று அந்தத் துணியை நீக்கி (என் தந்தையை)ப் பார்க்க நாடினேன். எனினும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்தனர். நான் மீண்டும் சென்று துணியை நீக்க முனைந்தேன். மீண்டும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்து விட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸாவை தூக்கும்படி) கட்டளையிட்டார்கள். (ஜனாஸா) தூக்கப்பட்டபோது ஒரு பெண் சப்தமாக அழுவதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், 'யார் அந்தப் பெண்?' என வினவினார்கள். அம்ர்டைய மகள் என்றோ அல்லது அம்ர்டைய சகோதரி என்றோ (கூடியிருந்தோர்) கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'நீ ஏன் அழுகிறாய்? நீ அழுதாலும் அழாவிட்டாலும் ஜனாஸா உயர்த்தப்படும்வரை வானவர்கள் தங்களின் இறக்கைகளை விரித்து நிழல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்'' என்றார்கள்.
புஹாரி : 1293 ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி).



அப்துல்லாஹ் இப்னு மஸவூத் (ரலி) அவர்களின் சிறப்பு



1597. நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து சில காலம் (மதீனாவில்) தங்கினோம் . அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களும் அவர்களின் தாயாரும் நபி (ஸல்) அவர்களிடம் (அடிக்கடி) செல்வதைக் கண்டு, அவர் நபி (ஸல்) அவர்களின் வீட்டாரில் ஒருவர் என்றே நாங்கள் கருதினோம்.
புஹாரி : 3763 அபூமூஸா (ரலி).



1598. எங்களிடையே அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) உரையாற்றினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கேட்டறிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக, தங்களிலேயே அல்லாஹ்வின் வேதத்தை (குர்ஆனை) நன்கறிந்தவன் நான் என பிற நபித்தோழர்கள் நன்கறிவார்கள். (அதற்காக எல்லாவகையிலும்) நான் அவர்களில் சிறந்தவன் அல்லன்'' என்று குறிப்பிட்டார்கள். (இது குறித்து) மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைச் செவிமடுத்தவாறே அந்த அவையில் நான் அமர்ந்திருந்தேன். இப்னு மஸ்வூத் (ரலி) சொன்னதை மறுத்து வேறுவிதமாகப் பேசியதை யாரிடமிருந்தும் நான் கேட்கவில்லை.
புஹாரி : 5000 ஷகீக் பின் ஸலாமா (ரலி).



1599. எவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் அத்தியாயம் அருளப்பட்டால், அது எங்கே அருளப்பட்டது என்பதை நான் நன்கு அறிவேன். அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வசனம் அருளப்பட்டால் அது யார் விஷயத்தில் அருளப்பட்டது என்பதையும் நான் நன்கறிவேன். என்னை விட அல்லாஹ்வின் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், ஒட்டகம் சென்றடையும் தூரத்தில் இருந்தால் நான் (அவரிடமிருந்து அதைக் கற்றுக் கொள்வதற்காக) அவரை நோக்கி நிச்சயம் பயணம் புறப்பட்டு விடுவேன் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5002 மஸ்ரூக் இப்னு அஜ்தஉ (ரஹ்).



1600. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), 'அவர் எத்தகைய மனிதரென்றால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்'' என்று சொல்லி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3758 மஸ்ரூக் (ரலி).

அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி), அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்

அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) அவர்களின் சிறப்பு

1572. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் (ரலி) அவர்களிடம், 'நானும் நீங்களும் இப்னு அப்பாஸ் அவர்களும் நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டு வரவேற்கச் சென்றதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'ஆம், நபி (ஸல்) அவர்கள் எங்களை (என்னையும் இப்னு அப்பாஸ் அவர்களையும் தம்முடன்) வாகனத்தில் ஏற்றினார்கள். உங்களை விட்டு விட்டார்கள்'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 3082 இப்னு அபீ முலைக்கா (ரலி).


அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்


1566. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நம்முடைய நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்கள் தாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :3744 அனஸ் (ரலி).


1567. நபி (ஸல்) அவர்கள் நஜ்ரான் வாசிகளிடம், 'நம்பத்தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுக்கு நிச்சயம் நான் அனுப்புவேன்'' என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் (பலர் அந்த 'அமீன்' என்னும் சிறப்பு தமக்கு கிட்டாதா என) பேராவல் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூ உபைதா (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.
புஹாரி : 3745 ஹூதைஃபா (ரலி

அபூதர் அல் கிஃபாரி (ரலி) அவர்களின் சிறப்பு

1607. அபூதர் (கிஃபாரீ) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டியபோது தம் சகோதரிடம், 'இந்த (மக்கா) பள்ளத்தாக்கை நோக்கிப் பயணம் செய்து, 'வானத்திலிருந்து (இறைச்) செய்தி தம்மிடம் வருகிற ஓர் இறைத்தூதர்' என்று தம்மை வாதிடுகிற இந்த மனிதரைக் குறித்த விவரத்தை (திரட்டி) எனக்கு அறிவி. அவரின் சொல்லைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு என்னிடம் வா!'' என்று கூறினார்கள். உடனே அச்சகோதரர் புறப்பட்டுச் சென்று நபி (ஸல்) அவர்களை அடைந்து அவர்களின் சொல்லைக் கேட்டார். பிறகு, அபூதர்ரிடம் திரும்பிச் சென்று, 'அவர் நற்குணங்களைக் கைக் கொள்ளும்படி (மக்களுக்குக்) கட்டளையிடுவதை பார்த்தேன். ஒரு வாக்கையும், (செவியுற்றேன்) அது கவிதையாக இல்லை'' என்று கூறினார். அபூதர், 'நான் விரும்பியதை நீ திருப்திகரமாகச் செய்யவில்லை'' என்று கூறிவிட்டு, பயண உணவு எடுத்துக் கொண்டு, நீர் நிரம்பிய தன்னுடைய தோல்பை ஒன்றைச் சுமந்து கொண்டு (அபூதர்) புறப்பட்டார். மக்காவை வந்தடைந்து (கஅபா) பள்ளிவாசலுக்குச் சென்றனர். நபி (ஸல்) அவர்களை அவர் அறியாதவராயிருந்த காரணத்தால் அவர்களைத் தேடினார். (அங்கிருந்த குறைஷிகள் தமக்கு தொல்லை தரக்கூடும் என்பதால் அவர்களிடம்) நபியவர்களைப் பற்றிக் கேட்க அவர் விரும்பவில்லை. இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டது. அப்போது அலீ (ரலி) அவரைக் கண்டு, அவர் அந்நியர் என்று புரிந்து கொண்டார்கள். அலீயைக் கண்டவுடன் (அலீ - ரலி - அவர்கள் அபூதர்ரிடம், 'வீட்டுக்கு வாருங்கள்'' என்று சொல்ல) அபூதர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். விடியும்வரை அவர்களில் ஒருவரும் (தம்முடனிருந்த) மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை. பிறகு அபூதர் தம் தோல்பையையும் தம் பயண உணவையும் சுமந்து கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார். அன்று மாலையாகும் வரை நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பார்க்காத நிலையிலேயே அன்றைய பகலைக் கழித்தார். பிறகு (மாலையானதும்) தம் படுக்கைக்குத் திரும்பினார். அப்போது அலீ (ரலி) அவரைக் கடந்து சென்றார்கள். 'தம் தங்குமிடத்தை அறிந்து கொள்ள மனிதருக்கு வேளை இன்னும் வரவில்லையா?' என்று கேட்டுவிட்டு அவரை(ப் படுக்கையிலிருந்து) எழுப்பித் தம்முடன் அழைத்துச் சென்றார்கள். ஒருவர் மற்றவரிடம் எதைப் பற்றியம் கேட்டுக் கொள்ளவில்லை. இறுதியில் மூன்றாம் நாள் வந்தபோது அலீ (ரலி) அதே போன்று திரும்பச் செய்தார்கள். தம்முடன் அவரைத் தங்கவைத்துக் கொண்டு பிறகு, (அபூதர்ரிடம்), 'நீங்கள் எதற்காக (இங்கே) வந்தீர்கள் என்று எனக்குச் சொல்லக் கூடாதா?' என்று கேட்டார்கள். அவர், '(நான் விரும்பி வந்ததை அடைய) எனக்குச் சரியான வழிகாட்டுவதற்கு நீங்கள் உறுதி மொழியளித்தால் நான் (எதற்காக வந்தேன் என்று சொல்லச்) செய்கிறேன்'' என்று பதிலளித்தார். அலீ (ரலி) அவர்களும் அவ்வாறே உறுதிமொழியளிக்க, அபூதர் (தாம் வந்த காரணத்தை) அவர்களுக்குத் தெரிவித்தார். அலீ (ரலி), 'அவர்கள் உண்மையானவர்களே! அவர்கள் இறைத்தூதர் தாம். காலையானதும் நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் உங்களுக்குத் தீங்கு நேரும் என்று அஞ்சுகிற எதையாவது கண்டால் நான் தண்ணீர் ஊற்றுவதைப் போன்று நின்று கொள்வேன். நான் போய்க் கொண்டேயிருந்தால் நான் நுழைய வேண்டிய இடத்தில் நுழையும் வரை என்னைப் பின்தொடருங்கள்'' என்று கூறினார்கள். அபூதர்ரும் அவ்வாறே செய்தார். அலி அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தார். இறுதியில், அலீ (ரலி), நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நுழைந்தபோது அவர்களுடன் அவரும் நுழைந்தார். நபி (ஸல்) அவர்களின் சொல்லைக் கேட்டு அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், 'நீங்கள் உங்கள் (கிஃபார்) சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று என் கட்டளை உங்களிடம் வந்து சேரும் வரை (இஸ்லாத்தின் செய்தியை) அவர்களுக்குத் தெரிவியுங்கள்'' என்று கூறினார்கள். அபூதர், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் இச்செய்தியை (இறைமறுப்பாளர்களான) அவர்களிடையே உரக்கக் கூவிச் சொல்வேன்'' என்று சொல்லிவிட்டு வெளியேறி, பள்ளிவாசலுக்கு வந்து, உரத்த குரலில், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) என்றும் உறுதி சொல்கிறேன்'' என்று கூறினார். உடனே, அங்கிருந்த (இறைமறுப்பாளர்களின்) கூட்டத்தார் எழுந்து அவருக்கு வலி ஏற்படும் அளவிற்கு அவரை அடித்தார்கள். அப்பாஸ் (ரலி) வந்து, அவரின் மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல் தடுத்து)க் கொண்டார்கள். 'உங்களுக்குக் கேடுண்டாகட்டும். இவர் கிஃபார் குலத்தைச் சேர்ந்தவர் என்பதும், உங்கள் வணிகர்கள் செல்லும்வழி (கிஃபார் குலத்தாரின் ஆதிக்கத்திற்குட்பட்ட) ஷாம் நாட்டுப் பாதையில் தான் உள்ளது என்பதும், உங்களுக்குத் தெரியாதா?' என்று சொல்லி அவர்களிடமிருந்து அபூதர்ரைக் காப்பாற்றினார்கள். அடுத்த நாள் மீண்டும் (பள்ளிவாசலுக்குச் சென்று) அபூதர் அதே போன்று செய்ய குறைஷிகளும் அடித்தபடி அவரின் மீது பாய்ந்தார்கள். உடனே (முன் போன்றே) அப்பாஸ் (ரலி) அபூதர்ரின் மீது கவிழ்ந்து படுத்தார்கள்.
புஹாரி : 3861இப்னு அப்பாஸ்(ரலி).

உம்மு ஸலமா (ரலி) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் சிறப்பு..

1594. நபி (ஸல்) அவர்களிடம் உம்மு ஸலமா (ரலி) அமர்ந்திருந்தபோது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு மனிதரின் தோற்றத்தில்) வந்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் பேசத் தொடங்கி விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம், 'இவர் யார்?' என்று கேட்க, அவர்கள், 'இது திஹ்யா (என்ற நபித்தோழர்)'' என்று பதிலளித்தார்கள். (அப்போது அது ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம்'' என்று உம்மு ஸலமா - ரலி - அவர்களுக்கு தெரியாது.) (பின்னர்) உம்மு ஸலமா (ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான், நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்னதாகத் தம் உரையில் குறிப்பிட்டதைச் செவியுறும் வரை, வந்தவர் திஹ்யா கல்பீ அவர்கள் தாம் என்றே நான் நினைத்திருந்தேன் (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்று எனக்குத் தெரிய வந்தது)'' என்று கூறினார்கள்.நான் அறிவிப்பாளர் அபூ உஸ்மான் (ரஹ்) அவர்களிடம், 'யாரிடமிருந்து இதை நீங்கள் செவியுற்றீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றேன்'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 3633 அபூஉஸ்மான் (ரலி).


உம்மு சுலைம் (ரலி) அவர்களின் சிறப்பு..



1596. நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வீட்டைத் தவிர தம் மனைவிமார்களின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற்கும் (அதிகமாகச்) செல்வதில்லை. அவர்களிடம் அது குறித்துக் கேட்கப்பட்டபோது, 'நான் அவரிடம் இரக்கம் காட்டுகிறேன். அவரின் சகோதரர் (ஹராம் இப்னு மில்ஹான் (ரலி)) என்னோடு (என் பிரசாரப் படையினரோடு) இருந்தபோது (பிஃரு மவூனா என்னுமிடத்தில்) கொல்லப்பட்டார்'' என்றார்கள்.
புஹாரி : 2844 அனஸ் (ரலி).

கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்

1573. இம்ரானின் மகள் மர்யம் தான் (அப்போது) உலகின் பெண்களிலேயே சிறந்தவராவார். (தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி: 3432 அலீ (ரலி).



1574. ஆண்களில் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லா வகை உணவுகளை விடவும் 'ஸரீத்' உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3411 அபூ மூஸா (ரலி).



1575. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு அல்லது உணவு அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3820 அபூஹூரைரா (ரலி).



1576. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம், 'நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களுக்கு நற்செய்தி எதுவும் கூறினார்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆம்! (சொர்க்கத்தில்) கூச்சல் குழப்பமோ, களைப்போ இல்லாத, துளையுள்ள முத்து மாளிகை ஒன்றை (இறைவன் அவர்களுக்கு அளிக்க இருப்பது) கொண்டு (நற்செய்தி கூறினார்கள்)'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 3819 இஸ்மாயீல் (ரலி).



1577. கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி (ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அவரைப் பார்த்ததில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள். அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள். சில வேளைகளில் நான் நபி (ஸல்) அவர்களிடம், 'உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களே'' என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், 'அவர் (புத்திசாலியாக) இருந்தார்; (சிறந்த குணமுடையவராக) இருந்தார். (இப்படி, இப்படியெல்லாம் இருந்தார்.) மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது'' என்று பதில் கூறினார்கள்.
புஹாரி : 3818 ஆயிஷா (ரலி).



1578. ஹாலா பின்த்து குவைலித் - கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி - இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் (கதீஜா - ரலி - அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி, 'இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும்'' என்று கூறினார்கள். உடனே நான் ரோஷமடைந்து விட, தாடைகள் சிவந்த ஒரு குறைஷிக் கிழவியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்கு பதிலாக அவரை விடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்து விட்டானே (அப்படியிருக்க, இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.)'' என்று கேட்டேன்.
புஹாரி: 3821 ஆயிஷா (ரலி).

ஸஅது பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் சிறப்புகள்


1560. நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின், முதலில் இரவில் கண் விழித்திருந்தார்கள். மதீனாவுக்கு வந்து சிறிது காலம் கழித்து, 'என் தோழர்களிடையே எனக்கு இரவில் காவல் காப்பதற்கு ஏற்ற மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமே'' என்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், 'யாரது?' என்று கேட்டார்கள். வந்தவர், 'நானே ஸஅத் இப்னு அபீ வக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன்'' என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் (நிம்மதியாக) உறங்கினார்கள்.
புஹாரி : 2885 ஆயிஷா (ரலி).


1561. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்குப் பிறகு வேறெவருக்கும் தம் தாய் தந்தையை அர்ப்பணிப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டதில்லை. ஸஅத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், 'அம்பெய்யுங்கள். உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்'' என்று கூறியதை கேட்டேன்.
புஹாரி : 2905 அலீ (ரலி).


1562. ''(என்னுடைய வீரச் செயலைக் கண்டு என்னைப் பாராட்டும் விதத்தில்) நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரின்போது தம் தாய் தந்தை இருவரையும் சேர்த்து எனக்கு அர்ப்பணிப்பதாக (என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்' எனச்) கூறினார்கள்'' என்று ஸஅத் (ரலி) சொல்ல கேட்டேன்.
புஹாரி : 3725 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).

ஹஸன் (ரலி) ஹுஸைன் (ரலி) சிறப்புகள்

1568. நபி (ஸல்) அவர்கள் ஒரு பகல் நேரத்தில் புறப்பட்டார்கள். அவர்கள் என்னுடன் பேசவில்லை. நானும் அவர்களுடன் பேசவில்லை. 'பனூ கைனுகா' கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் விட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். 'இங்கே அந்தப் பொடிப்பையன் இருக்கிறானா?' என்று கேட்டார்கள். ஃபாத்திமா (ரலி) தம் மகனைச் சற்று நேரம் தாமதப்படுத்தினார். 'அவர் தம் மகனுக்கு நறுமண மாலையை அணிவித்துக் கொண்டிருக்கிறார்' என்றோ அல்லது 'மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்' என்றோ நான் நினைத்தேன். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களின் மகன் (ஹஸன் (ரலி)) ஓடிவந்தார். உடனே, நபி (ஸல்) அவர்கள் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். 'இறைவா! இவனை நீ நேசி! இவனை நேசிப்பவர்களையும் நீ நேசி!'' என்று கூறினார்கள்.
புஹாரி : 2122 அபூஹூரைரா (ரலி).


1569. அலீ (ரலி) அவர்களின் மகன் ஹஸன் (ரலி), நபி (ஸல்) அவர்களின் தோள் மீது அமர்ந்திருக்க, நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரை நேசிப்பாயாக!'' என்று பிரார்த்திக்கக் கண்டேன்.
புஹாரி : 3749 அல்பராஉ (ரலி).

Wednesday, September 17, 2008

ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் சிறப்பு ..

ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் சிறப்பு ..
1603. ஸஅத் இப்னு முஆத் அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறைசிம்மாசனம் அசைந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

1604. (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களுக்கு பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் அதைத் தொட்டுப் பார்த்து அதன் மென்மையைக் கண்டு வியப்படையலானார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இதன் மென்மையைக் கண்டு நீங்கள் வியக்கிறீர்களா? (சொர்க்கத்தில்) ஸஅத் இப்னு முஆத் அவர்களின் கைக்குட்டைகள் இதை விடச் சிறந்தவை அல்லது இதை விட மென்மையானவை ஆகும்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3802 அல்பராஉ (ரலி).

1605. நபி(ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான அங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள் பட்டுத் துணியை (அணிவதைத்) தடை செய்து வந்தார்கள். மக்களோ அந்த அங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! சொர்க்கத்தில் ஸஅத் இப்னு முஆத்துக்கு கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிடத் தரமானவையாயிருக்கும்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 2615 அனஸ் (ரலி

Monday, September 15, 2008

உபை இப்னு கஃப் மற்றும் அன்ஸார்கள் சிறப்பு..

உபை இப்னு கஃப் மற்றும் அன்ஸார்கள் சிறப்பு..

1601. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித் (ரலி) ஆகியோர் தாம் அவர்கள்'' என்று அனஸ் (ரலி) கூறினார். நான் அனஸ் (ரலி) அவர்களிடம், 'அபூ ஸைத் என்பவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 3810 அனஸ் (ரலி).

1602. நபி (ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடம் அல்லாஹ் உங்களுக்கு, 'வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பவர்களிலும் உள்ள இறை நிராகரிப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை தங்களின் நிராகரிப்பிலிருந்து விலகிக் கொள்வோராய் இருக்கவில்லை..'' என்னும் (திருக்குர்ஆனின் 98-ம்) அத்தியாயத்தை ஓதிக் காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்'' என்று கூறினார்கள். அதற்கு உபை இப்னு கஅப் (ரலி), 'என் பெயரைக் குறிப்பிட்டா. (அப்படிச்) சொன்னான்?' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை இப்னு கஅப் அவர்கள் (ஆனந்தம் மேலிட்டு) அழுதார்கள்.
புஹாரி : 3809 அனஸ் (ரலி).

அப்துல்லாஹ் இப்னு மஸவூத் (ரலி) அவர்களின் சிறப்பு..

அப்துல்லாஹ் இப்னு மஸவூத் (ரலி) அவர்களின் சிறப்பு..

1597. நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து சில காலம் (மதீனாவில்) தங்கினோம் . அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களும் அவர்களின் தாயாரும் நபி (ஸல்) அவர்களிடம் (அடிக்கடி) செல்வதைக் கண்டு, அவர் நபி (ஸல்) அவர்களின் வீட்டாரில் ஒருவர் என்றே நாங்கள் கருதினோம்.
புஹாரி : 3763 அபூமூஸா (ரலி).

1598. எங்களிடையே அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) உரையாற்றினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கேட்டறிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக, தங்களிலேயே அல்லாஹ்வின் வேதத்தை (குர்ஆனை) நன்கறிந்தவன் நான் என பிற நபித்தோழர்கள் நன்கறிவார்கள். (அதற்காக எல்லாவகையிலும்) நான் அவர்களில் சிறந்தவன் அல்லன்'' என்று குறிப்பிட்டார்கள். (இது குறித்து) மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைச் செவிமடுத்தவாறே அந்த அவையில் நான் அமர்ந்திருந்தேன். இப்னு மஸ்வூத் (ரலி) சொன்னதை மறுத்து வேறுவிதமாகப் பேசியதை யாரிடமிருந்தும் நான் கேட்கவில்லை.
புஹாரி : 5000 ஷகீக் பின் ஸலாமா (ரலி).

1599. எவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் அத்தியாயம் அருளப்பட்டால், அது எங்கே அருளப்பட்டது என்பதை நான் நன்கு அறிவேன். அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வசனம் அருளப்பட்டால் அது யார் விஷயத்தில் அருளப்பட்டது என்பதையும் நான் நன்கறிவேன். என்னை விட அல்லாஹ்வின் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், ஒட்டகம் சென்றடையும் தூரத்தில் இருந்தால் நான் (அவரிடமிருந்து அதைக் கற்றுக் கொள்வதற்காக) அவரை நோக்கி நிச்சயம் பயணம் புறப்பட்டு விடுவேன் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5002 மஸ்ரூக் இப்னு அஜ்தஉ (ரஹ்)

.1600. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), 'அவர் எத்தகைய மனிதரென்றால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்'' என்று சொல்லி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3758 மஸ்ரூக் (ரலி).

Sunday, September 14, 2008

ஸஹர் உணவு உண்பதின் சிறப்பு நன்றி.

ஸஹர் உணவு உண்பதின் சிறப்பு
1) ஸஹர் செய்யாமலும், நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாம் என நபி(ஸல்)அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள். அல்லாஹ்வின் து}தரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே? என ஸஹாபாக்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றல்ல, எனக்குக் குடிக்கவும், உணவும் கொடுக்கப்படுகின்றது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். இன்னும் சில அறிவிப்பில்: என் இறைவன் எனக்கு உணவளிக்கின்றான், மேலும் பானமும் புகட்டுகின்றான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)2) ஸஹர் உணவை உண்ணுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவில் அல்லாஹ்வின் அருள் இருக்கின்றது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)3) நபி(ஸல்)அவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நபித்தோழர் நுழைந்தார். ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்களித்த அருளாகும். அதை விட்டு விடாதீர்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)4) நீங்கள் ஸஹர் உணவை உண்ணுங்கள். அது அருள் நிறைந்த உணவாகும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)5) நமது (முஸ்லிம்களின்) நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் நோன்புக்கும் உள்ள வித்தியாசம் ''ஸஹர் உணவு உண்பதுதான்"" என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)விளக்கம்: ஸஹர் உணவென்பது நோன்பு நோற்பதற்காக இரவின் கடைசிப்பகுதியில் உண்ணும் உணவாகும். நோன்பு நோற்பவர் இந்த உணவை உண்பது "வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்" இதனால் நோன்பாளி நோன்பைச் சிரமமின்றி நோற்பதற்கு வாய்ப்புள்ளது. ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் தொடர் நோன்பு நோற்பதை நபி(ஸல்)அவர்கள் தடுத்துள்ளார்கள். இன்னும் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் நோற்கும் நோன்பிற்கும் நாம் நோற்கும் நோன்பிற்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் ஸஹர் உணவு உண்பதுதான். அவர்கள் ஸஹர் உண்ணாமலேயே நோன்பு நோற்பார்கள். ஆகவே அல்லாஹ் நமக்களித்த அருளைப் பெற்று நபிமார்களின் சுன்னத்தைக் கடைபிடிப்போமாக..!நான் நபி(ஸல்)அவர்களுடன் ஸஹர் உணவு உண்டேன். பின்பு தொழுகைக்காக நபியவர்கள் எழுந்து சென்று விட்டார்கள் என ஸைத் இப்னு ஸாபித்(ரலி)அவர்கள் கூறினார்கள். (ஸ{ப்ஹ{டைய) பாங்குக்கும் ஸஹர் உணவுக்கும் மத்தியில் எவ்வளவு இடைவெளி இருந்தது என அனஸ்(ரலி)அவர்கள் கேட்டதற்கு ஐம்பது ஆயத்து ஓதும் அளவென்று விடையளித்தார்கள். (ஆதாரம்: புகாரி)விளக்கம்: ஸஹர் உணவை இரவின் கடைசிப்பகுதி வரை, பிற்படுத்துவது சுன்னத்தாகும், அதாவது ஸஹர் உணவுக்கும் சுப்ஹ{டைய பாங்குக்கும் மத்தியில் ஐம்பது ஆயத்து ஓதுவதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுமோ அவ்வளவு நேரம் பிற்படுத்த வேண்டும். இதுவே நபிவழியாகும். ஆனால் ஃபஜ்ருடைய நேரம் வந்த பின்(அதாவது சுப்ஹ{டைய பாங்கு சொல்லப்பட்டதும்) உண்ணவோ குடிக்கவோ கூடாதுநன்றி. .அதிரை ExpreSS

Wednesday, September 10, 2008

ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்புகள்..

1591. நாங்கள் ஹுசைன் இப்னு அலீ (ரலி) - அல்லாஹ் அவர்களின் மீது கருணை புரிவானாக! - கொல்லப்பட்ட கால கட்டத்தில் யஸீத் இப்னு முஆவியாவைச் சந்தித்துவிட்டு மதீனாவுக்கு வந்தபோது, என்னை மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி) சந்தித்தார்கள். அப்போது அவர்கள், 'என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகிறீர்களா? (நான் நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கிறேன்)'' என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு 'அப்படி எதுவுமில்லை'' என்று பதிலளித்தேன். மிஸ்வர் (ரலி), 'அல்லாஹ்வின் தூதருடைய வாளை எடுத்துக் கொடுக்கிறீர்களா? ஏனெனில், அந்த (பனூ உமய்யா) குலத்தினர் உங்களிடமிருந்து தம் அதிகாரத்தின் மூலமாக அதைப் பிடுங்கிக் கொள்வார்கள் என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அதை எனக்குக் கொடுத்தால் என் உயிர் போகும்வரை அது அவர்களிடம் சென்று சேராது'' என்று கூறினார். (பிறகு பின் வரும் சம்பவத்தை விவரிக்கலானார்:) அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) ஃபாத்திமா (ரலி) (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூ ஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (அந்த நேரத்தில்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் தம் இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை செவியுற்றேன். - அப்போது நான் பருவ வயதை அடைந்து விட்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், 'ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தன்னுடைய மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்'' என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகனை - (அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை) - அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்து கொண்டதைக் குறித்து (நினைவு கூர்ந்து) புகழ்ந்தார்கள். 'அவர் என்னிடம் பேசியபோது உண்மையே சொன்னார். எனக்கு வாக்குறுதியளித்து அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார். மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகளும் (அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது'' என்று கூறினார்கள்.
புஹாரி :3110 அலி பின் ஹூஸைன் (ரலி).

1592. அலீ (ரலி) (ஃபாத்திமா இருக்கவே,) அபூ ஜஹ்லுடைய மகளை (இரண்டாம் தாரமாக மணம் புரிந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் (தம் தந்தையான) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, '(தந்தையே!) உங்கள் சமுதாயம் உங்களுடைய மகள்களுக்காக (அவர்கள் மனத்துன்பத்திற்கு ஆளாக்கப்படும் போது) நீங்கள் கோபம் கொள்ளமாட்டீர்கள் என்று கருதுகிறது. (உங்கள் மருமகனும் என் கணவருமான) இந்த அலீ, அபூ ஜஹ்லுடைய மகளை மணக்கவிருக்கிறார்'' என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (உரையாற்ற) எழுந்தார்கள். அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'நிற்க, அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை (என் மூத்த மகள் ஸைனபுக்கு) மணம் முடித்து வைத்தேன். அவர் என்னிடம் (தன் மனைவியைத் திருப்பி அனுப்பி விடுவதாக வாக்களித்துப்) பேசினார்; (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எவரும் அவருக்குத் துன்பம் தருவதை நான் வெறுக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் ஒரே மனிதரிடம் ஒன்று சேர முடியாது. என்று கூறினார்கள். எனவே, அலீ (ரலி) (அபூ ஜஹ்லுடைய மகளைப்) பெண் பேசுவதை விட்டு விட்டார்கள்.
புஹாரி : 3729 அல் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி).

1593. நபி (ஸல்) அவர்களின் துணைவியர்களான எங்களில் ஒருவர் கூட விடுபடாமல் நாங்கள் அனைவரும் (நபி (ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிக் கொண்டிருந்தபோது) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வியார்) ஃபாத்திமா (ரலி) நடந்து வந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் நடை நபி (ஸல்) அவர்களின் நடைக்கு ஒத்ததாகவே இருந்தது. ஃபாத்திமாவைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள், 'என் மகளே! வருக!'' என்று வாழ்த்தி வரவேற்றார்கள். பிறகு அவரை தம் 'வலப்பக்கத்தில்' அல்லது 'இடப் பக்கத்தில்' அமர்த்திக்கொண்டு அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது ஃபாத்திமா பலமாக அழுதார். அவரின் துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ, இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார். அப்போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடையே இருந்துகொண்டு ஃபாத்திமாவிடம், 'எங்களை விட்டுவிட்டு உங்களிடம் மட்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே!'' என்று கூறிவிட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கூறிய அந்த இரகசியம் குறித்து ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா அவர்கள், 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது ஃபாத்திமா அவர்களிடம் நான், 'உங்களின் மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்துக் கேட்கிறேன். அந்த இரகசியம் என்ன என்று நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்'' என்றேன். ஃபாத்திமா, 'சரி. இப்போது (அதைத் தெரிவிக்கிறேன்)'' என்று கூறிவிட்டு (பின்வருமாறு) தெரிவித்தார். முதலாவது முறை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னபோது (பின் வருமாறு) சொன்னார்கள்: எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதிக்காட்டி நினைவூட்டுவார். ஆனால், அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதனை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கி விட்டதாகவே கருதுகிறேன். எனவே, நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள். பொறுமையுடன் இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடி (இவ்வுலகைவிட்டு) சென்று விடுவேன். எனவேதான், உங்களுக்கு முன்னிலையில் அவ்வாறு அழுதேன். என்னுடைய பதற்றத்தைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, 'ஃபாத்திமா! 'இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு' அல்லது 'இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு' தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?' என்று இரகசியமாகக் கேட்டார்கள். (எனவே, நான் மகிழ்ந்து சிரித்தேன்.)
புஹாரி : 6285 ஆயிஷா (ரலி).

Tuesday, September 9, 2008

ரமலானின் மூன்று பகுதிகள்..

புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது, நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், சொல்-செயல்-எண்ணங்கள் அனைத்திலும் இறையச்சத்தைப் பேணுதல் என நிம்மதியும் அமைதியும் நிறைந்த ஒரு சூழலை ரமலான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது. ரமலானின் முழுப் பலன்களையும் பெற்றிடும் விதத்தில் முஸ்லிம்கள் முயலும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் கழிகின்றது, அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் ரமளானை நமக்கு அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே.கடமையான ஐவேளை தொழுகைகளையே தொழாதவர்கள், பள்ளிகளில் சென்று ஜமாத்தோடு தொழாமல் வீடுகளில் தொழுது கொண்டிருந்தவர்கள், உரிய நேரத்தில் பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழவும் பள்ளிக்கு பாங்கு சொன்ன உடன் அல்லது பாங்கிற்கு முன்னரே வருகை புரிந்து தொழுகைக்குக் காத்திருந்து, பள்ளியில் குர்ஆன் ஓதிக் கொண்டும் உபரியான தொழுகைகள் தொழுது கொண்டும் கடமைத் தொழுகையை எதிர்பார்த்தவர்களாக இருக்கும் நிலையையும் காணலாம்.இந்தப் பக்திப் பரவச நிலை புனித ரமலான் ஒரு மாதத்தில் மட்டுமின்றி தினந்தோரும் இருப்பதுபோல் அனைவரின் உள்ளத்திலும் இவ்வுணர்வு குடிகொண்டு, அதன் மூலம் வெளிப்படும் வணக்க வழிபாடுகளும் இதர அன்றாடச் செயல்பாடுகளும் அமைந்து விட்டால், இம்மைக்கும் மறுமைக்கும் நன்றன்றோ எனும் ஆவலும் எண்ணமும் நமக்கு ஏற்படுகின்றது. இந்நிலையை நமது வாழ்க்கையில் ரமலானில் மட்டுமின்றி ரமலானுக்கு பின்னரும் தொடர்ந்து கடைப்பிடித்திட அல்லாஹ் அருள் புரியவேண்டும்.இந்த கண்ணிய மிக்க மாதத்தின் முப்பது நாட்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள் என்று கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது:நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3 எண் 191இந்த ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு முதலாவது பத்து நாட்களில், அதிகமதிகமாக அல்லாஹ்விடம் துவாச் செய்து அவனால் வழங்கப்பட்ட உயிர், பொருள், இதர செல்வங்கள், கல்வி, அறிவு, ஆற்றல்கள், திறமைகள், பார்வை, செவி, புலன், நுகர்தல், உணர்தல் போன்ற அனைத்து விதமான அருட் கொடைகளையும் நினைவு கூரவும் அவற்றிற்கு முறையாக நன்றி செலுத்திடவும் அதன் மூலம் மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அதிகமதிகமான அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறவும் முயல வேண்டும்,இவை எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கு அல்லாஹ்வினால் சிறப்பாக வழங்கப்பட்ட (ஈமான்) எனும் இறை நம்பிக்கை' என்ற அருட்கொடைக்கு மட்டுமே கோடி கோடி நன்றி செலுத்தினாலும் காலமெல்லாம் அவனைப் புகழ்ந்தாலும் ஈடாகாது. ஏனெனில் ஈமான் என்ற இணையற்ற அருட்கொடை இல்லா விட்டால் நாம் பெற்றுள்ள இதர எந்த வளமும் உண்மையில் அருட்கொடையில்லை எனலாம்.இறை நம்பிக்கை இல்லாத நிலையில் செல்வம் எனும் அருட் கொடை அதிகமானால் அவனை அது வழி கேட்டிற்கும் தீமைகளுக்கும் இட்டு சென்று விடும் வாய்ப்புகள் உண்டு. கல்வி மற்றும் அறிவு எனும் அருட்கொடைகள் ஆக்கத்தையும் அழிவையும் பிரித்துணராமல் கேடாக அமைந்திட வழிவகுக்கும் அபாயம் உண்டு. உடல் அழகு, வலிமை, திறமை, ஆற்றல்கள், அதிகாரம் போன்றவை ஈமான் எனும் இறை நம்பிக்கையில்லாத நிலையில் கிடைக்கப் பெற்றால் அவற்றைத் தவறான வழியில் மனோ இச்சையின்படி ஈடு படுத்திட அதன் மூலம் தமக்கும் தம்மை சுற்றியிள்ளோருக்கும் கேடும் இழப்பும் ஏற்படுத்திட வாய்ப்புகள் அதிகம். ஈமான் (இறைநம்பிக்கை) மற்றும் இறையச்சம் என்பதுதான் உண்மையில் அருட்கொடை.இரண்டாவது பத்தில் முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆகவேண்டும். அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செயல்க)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப) வாழ்வேயன்றி வேறில்லை. (அல் குர் ஆன் 3 : 185)இம்மை எனும் நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையின் மாயையிலும் அலங்காரங்களில் மூழ்கி உலகமே சதம் எனும் போக்கில் அதனைப் பெருக்கும் பேராசையில் தமது சொந்த ஆசாபாசங்களுக்கும் மனோயிச்சைகளுக்கும் தமது குடும்பத்தினர்களுக்கும் வாரிசுகளுக்கும் என்று அயராமல் உழைத்து மனிதன் சம்பாதிக்கும்-செலவிடும்-சேமிக்கும் ஒவ்வொன்றிலும் மறுமை வாழ்க்கையை மறந்து, மனம் போன போக்கில் இறை வரம்புகள் மீறப்பட்டு அல்லது உதாசீனப் படுத்தப்படுமானால், மிகப்பெரும் வாழ்க்கை வசதிகளும் இன்பங்களும் பேரும் புகழும் சகல துறைகளில் வெற்றிகள் பெற்றாலும் அது உண்மை வெற்றியாகாது. நிலையான மறுமை வாழ்க்கையின் வெற்றியே உண்மை வெற்றி என்பதை வலியுறுத்தும் மேற்கண்ட இறைவசனத்தை எந்நேரமும் மனதில் நிறுத்தி இவ்வெற்றியை பெற்றிட நமது அயராத முயற்சிகள் தியாகங்கள் அர்ப்பணிப்புகள் மூலம் செயல் படவேண்டும்."எவர் ஒருவர் ரமலான் மாதத்தைப் பெற்று அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்" என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் துவா செய்தபோது நபி (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறியதாகக் கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது. இதுவும் நமக்கு ரமலானின் துவாக்களில் பாவமன்னிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது:"நீங்கள் மிம்பருக்கு அருகில் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது 'ஆமீன்" என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்" என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்" என்றனர்.இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட(க்கோர)வில்லையோ அவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள், நான் ஆமீன் என்றேன். 'உங்கனைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள். நான் ஆமீன் என்றேன். 'தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்கு சேவை செய்து) யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா (ரலி), நூல்: ஹாகிம்)மூன்றாவது பத்து நாட்கள் நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும் என்று கூறும் இந்த நபிமொழியின் அடிப்படையில், முதலில் அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையை தண்டனையும் உணர்ந்திட கீழ்க்கண்ட குர்ஆன் வசனத்தையும் நபி மொழிகளையும் பார்க்கவும்.அல்லாஹ் அல் குர்ஆனில்,நம் வேதவசனங்களை நிராகரிக்கின்றவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். ( அல் குர் ஆன் 4 : 56 ) என்று எச்சரித்துள்ளதையும் மேலும் நரகத்தின் கொடுமையை உணர்த்தும் கீழ்க்கண்ட வசனங்கள் அதன் கொடுமையை அஞ்சி அதை விட்டுத் தப்பிடும் விதமாக வாழவேண்டியதை நினைவூட்டும் ஓர் அறிய அச்சுறுத்தல் கலந்த உபதேசம் ஆகும்.திண்ணமாக, நரகம் வலைவிரித்துக் காத்துக் கிடக்கின்றது - வரம்பு மீறியவர்களின் வாழ்விடமாக! அதில் அவர்கள் ஊழியூழிக் காலம் வீழ்ந்து கிடப்பர். அங்கு, குளிராக-குடிப்பாக எதையும் அவர்கள் சுவைக்கப் போவதில்லை - கொதியூட்டப் பட்ட நீரையும் சீழையும் தவிர. அவர்களுக்கு அவை தகுமான கூலிதாம். (ஏனெனில்,) கணக்குத் தீர்க்கும் நாளை அவர்கள் எதிர்பார்க்காமல் (மறுத்து) வாழ்ந்தனர். மட்டுமின்றி, நம் சான்றுமிகு வசனங்களை முற்றும் பொய்யெனக் கொண்டனர். ஒன்று விடாமல் நாம் அனைத்தையும் கணக்காய்ப் பதித்து வைத்தோம். எனவே, (மறுத்து வாழ்ந்தவர்களே!) அனுபவியுங்கள்; நாம் உங்களுக்கு அதிகப் படுத்தவிருப்பதெல்லாம் வேதனையைத் தவிர வேறன்று. (அல் குர் ஆன் 78:21-30)நபிமொழி"இறைவனை அஞ்ச வேணடிய அளவுக்கு அஞ்சுங்கள்! முஸ்லிம்களாக தவிர மரணிக்காதீர்கள் என்ற (3 : 102) வசனத்தை நபி(ஸல்) ஓதினார்கள். பிறகு (நரக வாதிகளுக்குக் கொடுக்கப்படும்) ஸக்கூம் எனும் மரத்திலிருந்து ஒரு துளி இவ்வுலகில் சிந்தப்பட்டால் இவ்வுலக வாசிகளின் வாழ்க்கையையே அது சீரழித்து விடும் என்று கூறிவிட்டு அதுவே உணவாகக் கொடுக்கப்படும் (நரகவாசிகளின் நிலை) எப்படி இருக்கும்!? என்று கூறினார்கள்.அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜாநரகவாசிகளில் இலேசான தண்டனைக்குரியவரது உள்ளங்கால்களில் தீக்கங்குகள் வைக்கப்படும். அதனால் மூளை கொதிக்கக் கூடியவராக அவர் இருப்பார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீநீங்கள் மூட்டும் நெருப்பு நரகத்தின் வெப்பத்தில் எழுபதில் ஒரு பங்காகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீஇவற்றை நினைவில் எந்நேரமும் நிறுத்தி அல்லாஹ் எச்சரித்துள்ள நிரந்தர நரகத்திற்குரிய ஷிர்க் இணைவைத்தல், (4 : 48,116) வட்டி வாங்குதல் (2 : 275-278), போன்றவற்றை உடன் கைவிட வேண்டும், மேலும் நரகத்தின்பால் நெருக்கம் ஏற்படுத்தும் இதர எல்லாவிதமான பாவமான சொல், செயல்களில் இருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் பொருள் ஈட்டலிலிருந்தும் தம்மை முழுமையாக தடுத்துக் கொள்ள உறுதி பூண்டு,(17 : 28-31) நிகழ்ந்து விட்டவைக்கு வருந்தி அதில் மீண்டும் செல்லக்கூடிய வழிகளை கைவிட்டு நரகத்தின் வேதனையிலிருந்து பாதுகாவல் தேட வேண்டும். குர்ஆனில் வசனங்களைப் பார்க்க.மேலும் அல்லாஹ்வின் உபதேசம் தொடர்கிறது:முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் இடுகின்ற கட்டளைகளில் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்வார்கள். (அல் குர்ஆன் 66 : 6)மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொள்ளும் தாங்க இயலாத பயங்கரமான வேதனையாம் நரகத்திலிருந்து நாமும் நம் பொறுப்பில் உள்ள நம் குடும்பத்தினரும் முழு மனித சமுதாயமும் மீட்சியையும் பாதுகாப்பும் பெறக்கூடிய விதத்தில் நாம் என்றென்றும் தியாக மனப்பான்மையுடனும் இஸ்லாமிய இறை வரம்பினுள்ளும் அவற்றின் அடிப்படைக்குச் சிறிதும் மாற்றமில்லாத விதத்திலும் மன உறுதியுடனும் தெளிவுடனும் செயல்பட முனைய வேண்டும்.உதாரணமாக ஒரு சிலர் இம்மை-மறுமை வாழ்க்கை செம்மைபெற முறையாக முயல்வதும் இறைவனைத் வேண்டி தொழுவதும் தொழுது முடித்த பின்னர் நீண்ட நேரம் இரு கரமேந்தி அல்லாஹ்விடம் பிராத்தித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.இன்னும் சிலர் அவசர அவசரமாக தொழுது முடித்தவுடன், பிராத்தனைகளை முடித்துக் கொண்டு அல்லது துவா எனும் இந்த பிராத்தனையே செய்யாமல் வெளியேறி விடுகின்றனர். நபி (ஸல்) அவர்கள், "அத்துவாஉ ஹுவல் இபாதா - துவா என்பதே ஒரு வணக்கமாகும்" என்று கூறியுள்ளார்கள் என்பதை நாம் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் நினைவில் வைத்து அல்லாஹ்வைப் புகழ்ந்து, நமது அனைத்துத் தேவைகளையும் கேட்க வேண்டும். நமது தேவைகளை நிறைவேற்ற வல்ல ஒருவன் அவனே! நாம் கேட்டும் கேட்காமலும் நமக்கு எல்லாம் வழங்கிய, வழங்கிடும் கருணையாளன் அவனே! கஷ்டங்கள், நோய்கள், துயரங்கள், சோதனைகள் அனைத்தையும் நீக்க வல்லவன் அவன் ஒருவனே! என்றும், அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்து விட்ட குற்றங்கள், குறைகள், பாவங்கள் என்று எல்லாவற்றையும் மன்னித்தருளக் கூடியவன் அவனே! என்றும் முறையாக உள்ளத்தால் நம்பி, எல்லாம் வல்லவனாகிய அல்லாஹ்விடம் மனமுருகி சமர்பித்து நாமறிந்த மொழியில் நமக்காகவும் நமது குடும்பத்தினருக்காகவும் உலக முஸ்லிம்களுக்காகவும் ஈருலக வெற்றியையும் ஈடேற்றத்தையும் கேட்க வேண்டும். மிகப் பெரும் இழப்பும் வேதனையுமாகிய நரக நெருப்பில் இருந்து பாது காப்பும் தேடவேண்டும்.எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 2 :201)அதே போல் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த அந்தஸ்தான சுவனத்தில் இடம் வேண்டியும் பணிவுடனும் மனமுருகியும் நம்பிக்கையுடனும் பிராத்திக்க வேண்டும். அவற்றின்பால் கொண்டு செல்லும் நற்செயல்களில் தொடர்ந்து இறுதி மூச்சுவரை ஈடுபட உறுதி பூண்டு உதவி கோரி பிராத்திக்க வேண்டும். இதையும் ரமலானிலும் ரமலான் அல்லாத ஏனைய நாட்களிலும் தொடர்ந்து கடைப்பிடித்திடல் வேண்டும்.ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் பெற வேண்டும் எனும் ஆவலில் நாம் செயல்பட வேண்டும். அல்லாஹ் இதைப்பற்றி குர் ஆனில் கூறுவதையும் முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.அல்லாஹ் லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவின் நன்மையைப்பற்றி குறிப்பிடும்போது, "அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது" என்று கூறுகின்றான். பார்க்க (97 :3)அதாவது அந்த ஓர் இரவின் நன்மை ஆயிரம் மாதத்தின் நன்மைகளுக்குச் சமம் என்று குறிப்பிடுகின்றான். ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் நான்கு மாதங்களும் ஆகும். அதாவது ஒரு நாளின் நன்மை சராசரி மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின் நன்மையை அளிக்க வல்லது என்பதைச் சிந்திக்க வேண்டும். நமது வாழ்க்கையில் ஒரு 10 லைலத்துல் கத்ரு இரவின் நன்மைகள் முழுமையாக நாம் பெற்றால் கூட அது 833 வருடங்களுக்கு நிகரான நன்மைகளை நமக்குப் பெற்றுத்தரும். 20 ஆண்டுகளின் லைலத்துல் கத்ரினை பெற்றால் 1666 வருடங்கள் என்று முந்தைய சமுதாயத்தினரின் ஆயுளின் அளவிற்கு நன்மைகளினைப் பெற்று தரவல்லது என்பதை நினைத்துப் பார்க்கும் போதே நமக்கு அல்லாஹ்வின் இந்த மகத்தான வெகுமதியினைத் தவற விடக்கூடாது எனும் எண்ணம் வரும்.நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த கடந்த ரமலான்களில் லைலத்துல் கத்ரின் நன்மையை நாம் பெற்றுள்ளோமா என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். ஆயினும் அதைப் பெற நாம் நாடியுள்ளோமா? அதற்காக முறையாக நபி(ஸல்) வழியில் முயன்றுள்ளோமா? அதைப் பெறக்கூடிய பாக்கியம் வேண்டி அல்லாஹ்விடம் பிராத்தித்துள்ளோமா? என்பதை நாம் நம்மையே கேட்டு பதில் பெற வேண்டும். இதற்கு இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிராத்திப்பதுடன் அதை நபி(ஸல்) அவர்கள் வழியில் முயல வேண்டும்.நபி(ஸல்) அவர்கள் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் 'இஃதிகாப்' இருந்தார்கள் என்று நபி வழியில் காண முடிகிறது.அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெறுவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி, அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று அறிவித்தார். உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)ஆகையால் கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடிக் கொள்ளுமாறு கூறினார்கள், மேலும் அதன் இரவுகளை வணக்கங்கள் மூலம் சிறப்பிப்பார்கள்; தங்கள் குடும்பத்தினர்களையும் ஏவுவார்கள் என்றும் ஹதீஸ்கள் கூறுகின்றன.நபி(ஸல்) அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும் விழித்திருந்து லைலத்துல் கத்ரு இரவைப் பெற வணக்கங்களில் ஈடுபட்டதைப் போல், நாம் முயல வேண்டும். இயன்றால் அவர்கள் கடைசிப் பத்து நாட்கள் பள்ளியில் 'இஃதிகாப்' இருந்ததைப் போல் இஃதிகாப் இருக்க வேண்டும். நமது வாழ்நாளில் நேரம் கிடைக்கும் போது ரமலானில் குறைந்தது ஒரு முறையேனும் நபிவழியான (ஸுன்னத்தான) இந்த 'இஃதிகாப்' இருக்க வேண்டும் என்று உள்ளத்தினால் நாட்டம் கொள்ளவேண்டும்.நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் துர்பாக்கியசாலிகளோ அவர்களைத் தவிர அனைவரும் லைலத்துல் கத்ரைப் பெற்றுக்கொள்வார்கள்.நாம் அதைப் பெற்ற பாக்கியசாலிகளா துர்பாக்கியசாலிகளா என்பது நாமறியோம். அல்லாஹ்வே நன்கறிவான். ஆனால் பரவலாக இதை மறந்தவர்களாக முஸ்லிம்கள் பலர் வாழும் நிலையும் குறிப்பாகக் கடைசிப் பத்து நாட்களில் நமது பொன்னான நேரத்தை இவற்றைவிடவும் அதிகமாக இதர அலுவல்கள் பெருநாளின் தேவைகள் துணிமணிகள், காலணிகள், அணிகலன்கள், வாசனை திரவங்கள்,போன்ற இதர பொருட்களை வாங்கும் நிமித்தம் கடைவீதிகளில் கழிந்து விடுவதும் மாலையில் வெளியேறி இரவில் தாமதமாக அசதியுடன் வீடு திரும்பி இரவு தொழுகைகள் பஜ்ரு தொழுகை ஸஹ்ர் (உட்பட) லைலத்துல் கத்ர் எனும் மகத்தான இரவு போன்ற அனைத்தும் தவறிவிடும் நிலையையும் காண முடிகிறது. அவையெல்லாம் லைலத்துல் கத்ரு என்னும் இந்தப் பொன்னான வாய்ப்பை இழக்க வைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஷைத்தானின் முயற்சி என்றால் அது மிகையாகாது. இம்முயற்சியை முறியடிக்கும் விதமாக நமது தேவைகளை கடைசிப் பத்து நாட்களுக்கு முன்னரே அல்லது இரவுக்கு முன்பே தாமதமின்றி வாங்கி நேர விரயமின்றி, கடைசிப் பத்து இரவுகளில் அதிகமான வணக்கங்கள், நல்ல அமல்கள் புரிந்து கண்ணிய மிக்க இந்த லைலத்துல் கத்ரை பெற முயல வேண்டும்.இதர எத்தனையோ விஷயங்களுக்கு கண் விழித்து இருக்கும் நாம் இந்த மகத்தான கடைசிப் பத்து இரவுகளிலும் நரகமீட்சி பெரும் விதத்தில் துவா செய்யவும் லைலத்துல் கத்ர் இரவினை முறையாகப் பெற்றிடவும் முனைந்திட வேண்டும். ஆனால் சிலர் இந்த லைலத்துல் கத்ர் எனும் கண்ணியமிகு இரவு ஒரே ஒரு இரவில் இருப்பதாக அதுவும் ரமலானின் 27ம் நாளில் இருப்பதாகத் தவறாக நம்பி, அந்த ஓரிரவை மட்டும் விசேஷமாக சிறப்பிக்கும் அமல்களில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.நபி(ஸல்) அவர்கள் இப்படி ரமலான் 27 எனும் ஒரே இரவை சிறப்பிக்குமாறு கூறாததாலும் அவர்கள் வாழ்க்கையில் இது 21,23,25,27,29 போன்ற வெவ்வேறு ஒற்றைப்படை இரவுகளில் வந்துள்ளதாக அறிவித்துள்ளதாலும் 27ஆம் இரவை மட்டுமே சிறப்பிப்பது நபி வழிக்கு மாற்றமானது என்பதை நமது மறுமைக்காக கவனத்தில் கொள்ள வேண்டும். நமது அமல்களை நபிவழியில் மாற்றிக்கொள்ள வேண்டும்.நபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம்காட்டாத அளவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.லைலத்துல்கத்ரில் பிரார்த்தனை:லைலத்துல் கத்ரில் அதிக அளவு பிரார்த்தனை புரிய நபி(ஸல்) அவர்கள் ஒரு துவாவை கற்றுதந்துள்ளார்கள்.அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!)அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்.இத்தகைய புனிதமிக்க ரமளானின் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதிக உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வல்ல இறைவனின் அருளை அடைவோமாக!அல்லாஹ் நமக்குப் புனித ரமலானின் சிறப்புமிகு நாட்களின் அமல்களை முறையாக நிறைவேற்ற உதவிடவும் நமது பிராத்தனைகளை ஏற்று அருள் புரிந்திடவும் நமக்கு பாவமன்னிப்பளித்திடவும் நம் அனைவரையும் நரகில் இருந்து பாதுகாத்திடவும் புனித ரமலானின் அனைத்து நன்மைகளையும் முழுமையாக பெற்றிடும் விதத்தில் அல்லாஹ்வின் ஏற்பிற்குரியதாக நமது அமல்கள் அமைந்திடவும் அதன் மூலம் நமது இம்மை மறுமை வாழ்க்கை வெற்றி பெற்றிடவும் இந்த புனித ரமலான் முதல் என்றென்றும் பிராத்திப்போமாக.ஆக்கம்: இப்னு ஹனீஃப்
நன்றி: சத்தியமார்க்கம்.காம்

அனாதைகளை ஆதரிப்போம்....

''நபியே! மார்க்கத்தை அல்லது மறுமையின் தீர்ப்பைப் பொய்யாக்குவோனை நீர் பார்த்தீரா? அத்தகையோன் தான் அனாதையைக் கடிந்து விரட்டுபவன். அவன் ஏழைகளுக்கு ஆகாரமளிக்கும் படி தூண்டவும் மாட்டான். எனவே, இத்தகைய தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் தங்களது தொழுகையில் பராமுகமாக. பொடுபோக்காக இருக்கின்றனர். பிறருக்குக் காண்பிப்பதற்காக, முகஸ்தூதிக்காகத் தொழுகின்றனர்.



மேலும், அவர்கள் அற்பப் பொருட்களையும் கொடுக்காது தடுத்துக் கொள்கின்றனர்'' இந்த அல்குர்ஆன் அத்தியாயம் ஸூரத்துல் மாஊன், ஸூரத்துல் எனும் இரு பெயர்களிலும் அழைக்கப்படுகின்றது. இந்த ஸூரா, யார் தொடர்பாக இறங்கியது எனும் விடயத்தில் வித்தியாசமான அறிவிப்புக்கள் காணப்படுகின்றன. லோபித்தனமும் முகஸ்துதியும் கொண்ட ஒரு முனாபிக் - நயவஞ்சகன் தொடர்பாகவே இவ்வத்தியாயம் இறங்கியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். எவர் விடயத்தில் இறங்கியிருந்தாலும் இது கூறுகின்ற தன்மைகள் கொண்ட அனைவரும் அதில் அடங்குவர் என்பதை மனதிற் கொள்ளல் வேண்டும்.இனி ஸூராவுக்கான விளக்கத்திற்கு வருவோம்:''நபியே! மார்க்கத்தைப் பொய்ப்பிப்போனை நீர் பார்த்தீரா?'' இங்கு அல்லாஹ்தஆலா மார்க்கத்தை ஏற்று உண்மைப்படுத்துவது தொடர்பாகவும் அதனை நிராகரித்து பொய்ப்பிப்பது தொடர்பாகவும் ஒரு புதிய கருத்தை - இதுவரை மனிதர்கள் தெரிந்து வைத்திருக்காத ஒரு விளக்கத்தை கூற விரும்புகின்றான். அதனால்தான் ஒரு கேள்விக் குறியுடன் கேட்போரின் கவனத்தைத் திருப்பும் விதத்தில் இந்த ஸூரா துவங்குகிறது.



ஒருவர் கலிமாவை மொழிந்து, தொழுபவராகவும், ஸகாத் கொடுப்பவராகவும் றமழானில் நோன்பு நோற்பவராகவும் வசதியிருப்பின் ஹஜ் கடமையை நிறைவேற்றியவராகவும் இருப்பாராயின் அவரே மார்க்கத்தை ஏற்று, உண்மைப்படுத்தியவர். இவற்றில் ஒன்றை மறுத்து நிராகரிப்பவரே மார்க்கத்தை பொய்ப்பிப்பவர் என்பது தான் இதுபற்றி மனிதர்கள் கொண்டுள்ள கருத்தாகும். ஆனால், இங்கு அல்லாஹ்தஆலா மார்க்கத்தை உண்மைப்படுத்துதல், பொய்ப்பித்தல் தொடர்பாக இதுவரை மனிதர்கள் அறிந்திராத ஒரு கருத்தைக் கூறுகின்றான். உண்மையில், மார்க்கத்தைப் பொய்பிப்போன் யார் தெரியுமா? என்றொரு வினாவை எழுப்பி அதற்கு விடையாக, ''அவன்தான் அனாதையைக் கடிந்து விரட்டுபவன்''எனக் கூறுகின்றான். ஆம், அனாதைகளுக்கு கருணைகாட்டாதோர், அவர்களைப் பராமரிக்காதோர், மார்க்கத்தை நிராகரித்து பொய்ப்பிப்பவர்களாவர் என்பதை அல்குர்ஆனின் கருத்தாகும். இஸ்லாம் அநாதைகள் விடயத்தில் மிகக் கூடுதலான கரிசனை காட்டுகின்றது. ஓர் இஸ்லாமிய சமூகத்தில் அவர்களுக்கு நிச்சயம் முறையான வாழ்வு கிட்டும். அங்கு அவர்கள் எவ்வகையிலும் புறக்கணிக்க இடமளிக்காது. ஸூறத்துல் அன்பாலின் 41வது வசனம், ஸூறத்துல் ஹஸ்ரின் 7வது வசனம், ஸூறத்துல் பகராவின் 82,177,215 ஆகிய வசனங்கள், ஸூறத்துன்னிஸாவின் 36வது வசனம ஆகியவை உடபட இன்னும் பல அல்குர்ஆன் வசனங்கள் அனாதை பராமரிப்பு பற்றி வலியுத்துகின்றன. அடுத்து, அல்லாஹ் கூறுகின்றான்:



''மேலும், அவன் ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டமாட்டான்'' இங்கு அல்லாஹ் தனிப்பட்ட முறையில் ஏழைகளுக்கு உணவளித்து, பிறரையும் அதன் பால் தூண்டி, வறுமையை ஒழிக்கும் -பசியை விரட்டும்- பணியில் ஈடுபடாதவர் பற்றியே குறிப்பிடுகின்றான். எனவே, தனிப்பட்ட முறையில் ஏழைகளுக்கு உணவளிக்கும் அதே நேரத்தில் பிறரையும் அதற்காகத் தூண்டி, வறுமையை, பசிக்கொடுமையை ஒழிக்கும் முயற்சியை ஓர் அமைப்பாக, கூட்டாக மேற்கொள்ளும் விடயத்தில் தனது பங்களிப்புச் செலுத்தாத வரைக்கும் அவர் மார்க்கத்தைப் பொய்ப்பிப்பவராகவே கருதப்படுவார்.



அல்குர்ஆன் மேலும் பல இடங்களிலும் இதே கருத்தைக் கூறியிருப்பதனை கவனிக்க முடிகின்றது. உதாரணமாக, கீழ்வரும் வசனங்களைக் குறிப்பிடலாம்:''நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வை விசவாசிக்கவில்லை. ஏழைகளுக்கு ஆகாரமளிக்கும்படி தூண்டவுமில்லை. ஆகவே, இன்றைய தினம் அவனுக்கு இங்கு எந்த நண்பனும் இல்லை. புண்களில் இருந்து வடியும் சீழ் ஜலத்தைத் தவிர அவனுக்கு வேறு ஆகாரமும் இல்லை எனக்கூறப்படும். அதனைக் குற்றவாளிகளைத் தவிர எவரும் புசிக்கமாட்டார்கள்''(69:33) ''ஜாக்கிரதை! நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை. ஏழைகளுக்கு ஆகாரம் அளிக்கும்படி தூண்டுவதுமில்லை. பிறருடைய வாரிசுப் பொருட்களை பேராசையுடன் விழுங்குகிறீர்கள். மேலும், நீங்கள் மிகவும் அளவு கடந்து பொருளை நேசிக்கின்றீர்கள்(88:1720)தான் தனிப்பட்ட முறையில் தனிமனிதன் என்ற வகையில் தன் மீதுள்ள பொருப்புக்களை நிறைவேற்றினால் போதுமானது. சமூகக் கடமைகளை நிறைவேற்றும் தேவை தனக்கில்லை. பிறர் செய்யும் தவறுகள், பாவங்கள், அநீதிகள் தன்னைத் தாக்காது எனக் கருதுவோருக்கு இந்த வசனங்கள் பெரும் சாட்டையடியாகவே அமையும். இத்தகைய சிந்தனைப்போக்கைக் கொண்டு வாழ்பவர்களைத்தான் இந்த வசனங்கள் நிராகரிப்பாளர்கள், மார்க்கத்தைப் பொய்ப்பிப்பவர்கள் என வர்ணிக்கின்றன.இனி ஸூராவின் அடுத்த வசனங்களை நோக்குவோம்:''எனவே, அத்தகைய தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் தங்களது தொழுகையில் பொடுபோக்காகவே இருக்கின்றனர். அவர்கள் பிறரருக்குக் காண்பிப்பதற்காகவே தொழுகின்றனர்.



மேலும், அவர்கள் அற்பப் பொருட்களையும் மக்களுக்குக் கொடுக்காமல் தடுத்துக் கொள்கின்றனர்''ஏன், அதிஷ்டத்தையும் அருளையும் கொடுக்க வேண்டிய தொழுகை, இவர்களைப் பொருத்தவரையில் கேட்டையும் இழிவையும் வழஙகுவதாக அமைய வேண்டுமா? ஆம், அவர்கள் தொழுவது என்னவோ உண்மைதான். ஆனால், அவர்களது தொழுகை, தொழுகையாக இல்லை. அது போலியானதாக இருக்கின்றது. அவர்கள் நிறைவேற்றும் தொழுகை, அவர்களில் அனாதைகள்பால் அன்பையும் கனிவையும் ஏற்படுத்தவில்லை, ஏழைகள் பசிக் கொடுமையில் வாழ்வதைப் பார்த்து, அவர்களின் உரிமைகள் கொடுக்கப்படாமலிருப்பதைக் கண்டு கொதித்தெழத் தூண்டவில்லை. எப்போது தொழுகை பாவங்களிலிருந்தும் மானக்கேடான செயல்களிலிருந்தம் தொழுபவரைத் தடுக்கவில்லையோ அப்போது அது நோக்கத்தை இழந்த அர்த்தமற்ற சடங்காகி, வெறும் அசைவுகளாக மாறிவிடுகின்றது. இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் இத்தகைய இயந்திர அசைவுகளாக அமைவதனை அங்கீகரிப்பதில்லை. மாறாக, அனைத்து வணக்க வழிபாடுகளும் மனித உள்ளத்துக்கு பக்குவத்தையும் பண்பாட்டையும் வழங்கி தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் நல்லது செய்ய, நன்மை புரியத் தூண்டுவனவாக இருக்க வேண்டுமென இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. இக்கருத்தை எத்துனை அழகாகக் கீழ்வரும் வசனங்கள் விளக்கிக் கூறுகின்றன என்பதைப் பாருங்கள்: ''மேற்கிலோ ,கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது மட்டும் நன்மை செய்ததாக ஆகிவிட மாட்டாது, எனினும் உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் மலக்குகளையும் வேதத்தையும் நபிமார்களையும் விசுவாசித்து, பொருளை அவனது விருப்பத்தைப் பெறுவதற்காக இனபந்துக்களுக்கும் அனாதைகளுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் யாசகர்களுக்கும் விடுதலையை விரும்பியவர்களுக்கும் கொடுத்துதவி செய்து, தொழுகையைக் கடைபிடித்து, ஸக்காத்தும் கொடுத்து வருகின்றாறோ அவரும், வாக்குறுதி செய்த சமயத்தில் தமது வாக்குறுதியை நிறைவேற்றுவோர்களும் நஷ்டத்திலும் கஷ்டத்திலும் கடுமையான யுத்த நேரத்திலும் பொறுமையைக் கைக்கொண்டவர்களும் ஆகிய இவர்கள் தாம் நல்லோர்கள். அன்றி, இவர்கள் தான் உண்மையானவர்கள் பயபக்தியுடையவர்கள்.''(2:177)நன்மைக்காக உழைப்பதும் சமூகத்தில் கருணையை வளர்ப்பதும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் களைவதும் ஒரு முஸ்லிமின் நீங்காக் கடமையாகும். அவ்வாறு இல்லாத போது அவன் தன் மார்க்கத்தையே பொய்ப்பிப்பவனாகக் கருதப்பட்டு அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உரியவனாக மாறுகிறான். அவன் நிறைவேற்றும் தொழுகையும் வணக்கவழிபாடுகளும் கூட அவனுக்குப் பயனளிப்பதற்குப் பதிலாக அவை அவனுக்குப் பெரும் சாபக் கேடாக மாறிவிடுகின்றன.

-----சகோ.முஹம்மது தஸ்தகீர்.

நன்றி..அதிரை எக்ஸ்பிரஸ்

ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்புகள்..

1579. ''நான் உன்னைக் கனவில் இரண்டு முறை கண்டேன். உன்னைப் பட்டுத் (துணியின்) துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண்டேன். எவரோ, 'இது உங்கள் மனைவி தான்; (முக்காட்டை) நீக்கிப்பாருங்கள்' என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், 'இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (விதிக்கப்பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்' என்று சொல்லிக் கொண்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
புஹாரி : 3895 ஆயிஷா (ரலி).

1580. என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்'' என்று கூறினார்கள். அதற்கு நான், 'எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), 'முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக' என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், 'இப்ராஹீம் (அலை) அவர்களின் அதிபதி மீது சத்தியமாக' என்று கூறுவாய்'' என்று கூறினார்கள். நான், 'அல்லாஹ்வீன் மீதாணையாக! ஆம் (உண்மைதான்,) இறைத்தூதர் அவர்களே! நான் தங்களின் பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்களின் மீதன்று)'' என்று கூறினேன்.
புஹாரி : 5228 ஆயிஷா (ரலி).

1581. நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.
புஹாரி : 6130 ஆயிஷா (ரலி).

1582. அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்க மக்கள் நபிகளார் என்னிடம் தங்கும் நாள் எது என எதிர்பார்த்து வழங்கினர்.
புஹாரி :2574 ஆயிஷா (ரலி).

1583. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, 'நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?' என்று என்னுடைய (முறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே, அவர்களின் (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கலாம் என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். எனவே, அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை என் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாளில் என் வீட்டில் வைத்து அவர்கள் இறந்தார்கள். என் நெஞ்சுக்கும் நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் இடையே அவர்களின் தலையிருந்தபோது, அவர்களின் எச்சில் என் எச்சிலுடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக் கொண்டான்.
புஹாரி : 4450 ஆயிஷா (ரலி).

1584. நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, '(இறைவா!) உயர்ந்த தோழர்க(ளான இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாதிகள் மற்றும் நல்லடியார்க)ளுடன் (என்னைச் சேர்த்தருள்)''(4:69) என்று சொல்லத் தொடங்கினார்கள்.
புஹாரி : 4436 ஆயிஷா (ரலி).

1585. ''உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை'' என்று நான் (நபி (ஸல்) அவர்களிடமிருந்தே) செவியுற்றிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களின் தொண்டை கட்ட (கம்மிய, கரகரப்பான குரலில்), 'அல்லாஹ் அருள் புரிந்துள்ள இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவர்கள் மற்றும் நல்லடியார்களுடன்'' எனும் (திருக்குர்ஆன் 04:69) இறைவாக்கைச் சொல்லத் தொடங்கினார்கள். எனவே, 'இவ்வுலகம் மறுமை ஆகிய இரண்டிலொன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது' என்று நான் எண்ணிக்கொண்டேன்.
புஹாரி : 4435 ஆயிஷா (ரலி).

1586. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தபோது, 'சொர்க்கத்தில் தம் இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம்) உயிர் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்படாத வரையில்' அல்லது '(உலக வாழ்வு, மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத்) தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாத வரையில்' எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை'' என்று சொல்லி வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களின் தலை என் மடியின் மீதிருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் மூர்ச்சையடைந்து விட்டார்கள். மூர்ச்சை தெளிந்தபோது அவர்களின் பார்வை வீட்டின் முகட்டை நோக்கி நிலைகுத்தி நின்றது. பிறகு அவர்கள், 'இறைவா (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)'' என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான், 'இனி (நபி (ஸல்) அவர்கள்) நம்முடன் இருக்க மாட்டார்கள்'' என்று சொன்னேன். ஏனெனில், அவர்கள் ஆரோக்கியத்துடன் இருந்தபோது சொன்ன (இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்) செய்தி இதுதான் என்று (அவர்களின் மரண வேளையான இப்போது) அறிந்து கொண்டேன்.
புஹாரி : 4437 ஆயிஷா (ரலி).

1587. நபி (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால் தம் துணைவியரிடையே சீட்டுக் குலுக்குவார்கள். (யாருடைய பெயர் வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள்.) (ஒரு முறை) என்னுடைய பெயரும் ஹஃப்ஸாவின் பெயரும் (குலுக்கலில்) வந்தது. இரவு நேரப் பயணத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னுடன் பேசிக்கொண்டே வருவார்கள். (ஒரு நாள்) ஹஃப்ஸா (என்னிடம்), 'இந்த இரவு நீங்கள் என்னுடைய ஒட்டகத்தில் பயணம் செய்து பாருங்கள்; நான் உங்களின் ஒட்டகத்தில் பயணம் செய்து பார்க்கிறேன்'' என்று கூறினார்கள். நான், 'சரி'' என்று (சம்மதம்) கூறினேன். எனவே, (நாங்களிருவரும்) ஒருவர் மற்றவரின் ஒட்டகத்தில்) ஏறிப் பயணிக்கலானோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் (நான் முதலில் ஏறி வந்த) என்னுடைய ஒட்டகத்தை நோக்கி வந்தார்கள். (அதில் நானிருப்பதாக நினைத்தார்கள். ஆனால்,) அதில் ஹஃப்ஸா இருந்தார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் 'சலாம்' (முகமன்) கூறினார்கள். பிறகு பயணத்தைத் தொடர்ந்தார்கள். (பயணத்தினிடையே) அவர்கள் ஓர் இடத்தில் இறங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களை(க் காணாததால் அவர்களை (நான் தேடினேன். அவர்கள் இறங்கிய அந்த நேரம் நான் என்னுடைய இரண்டு கால்களையும் 'இத்கிர்' புற்களுக்கிடையே (புகுத்தி) வைத்துக்கொண்டு, 'இறைவா! ஒரு தேளையோ அல்லது பாம்பையோ என் மீது ஏவிவிடு! அது என்னைத் தீண்டட்டும்'' என்று சொன்னேன். (இப்படி என்னை நானே கடிந்துகொள்ளத்தான் முடிந்ததே தவிர,) நபி (ஸல்) அவர்களை (ஹஃப்ஸாவுடன் தங்கியதற்காக) என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
புஹாரி : 5211 ஆயிஷா (ரலி).

1588. (உலகின் மற்ற) பெண்களைக் காட்டிலும் ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு (மற்ற) உணவுகளைக் காட்டிலும் 'ஸரீத்' என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3770 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

1589. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், 'ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உன் மீது சலாமுரைக்கிறார்'' என்று கூறினார்கள். நான், 'வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்முத்துல்லாஹி வ பரக்காத்துஹு - அவரின் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும். (இறைத்தூதர் அவர்களே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள்'' என்று கூறினேன்.
புஹாரி :3217 அபூ ஸலாமா (ரலி).

1590. (முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி) அமர்ந்து கொண்டு ஒவ்வொரு வரும் தத்தம் கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடி மறைக்காமல் (உள்ளதை உள்ளபடி) எடுத்துரைப்பதென உறுதிமொழியும் தீர்மானமும் எடுத்துக் கொண்டனர். முதலாவது பெண் கூறினார்: என் கணவர், (உயரமான) மலைச் சிகரத்தில் வைக்கப்பட்டுள்ள மிகவும் இளைத்துப்போன ஒட்டகத்தின் இறைச்சிக்கு நிகரானவர். (இளைத்த ஒட்டகத்தின் இறைச்சியாயினும், அதை எடுக்க) மேலே செல்லலாம் என்றால் (அதை மலைப்பாதை) சுலபமானதாக இல்லை. (சிரமத்தைத் தாங்கி) மேலே ஏற (அது ஒன்றும்) கொழுத்த (ஒட்டகத்தின்) இறைச்சியுமில்லை. இரண்டாவது பெண் கூறினார்: நான் என் கணவர் பற்றிய செய்திகளை அம்பலப்படுத்தப் போவதில்லை. (அப்படி அம்பலப்படுத்த முயன்றாலும்) அவரைப் பற்றிய செய்திகளை ஒன்று கூட விடாமல் சொல்ல முடியுமா என்ற அச்சமும் எனக்கு உண்டு. அவ்வாறு கூறுவதானாலும் அவரின் வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான குற்றங் குறைகளைத் தான் கூறவேண்டியதிருக்கும். மூன்றாவது பெண் கூறினார்: என் கணவர் மிகவும் உயரமான மனிதர் அவரைப் பற்றி நான் (ஏதேனும்) பேசி (அது அவரின் காதுக்கு எட்டி)னால். நான் விவாகரத்துச் செய்யப்பட்டு விடுவேன்; (அதே நேரத்தில் அவரிடம் எதுவும் பேசாமல்) நான் மௌனமாயிருந்தால் அந்தரத்தில் விடப்படுவேன். (என்னுடன் நல்லபடி வாழவுமாட்டார்; என்னை விவாகரத்தும் செய்யமாட்டார்.) நான்காவது பெண் கூறினார். என் கணவர் (மக்கா உள்ளிட்ட) 'திஹாமா' பகுதியின் இரவு நேரத்தைப் போன்ற (இதமான)வர். (அவரிடம்) கடும் வெப்பமும் இல்லை. கடுங்குளிருமில்லை. (அவரைப் பற்றி எனக்கு) அச்சமும் இல்லை (என்னைப் பற்றி அவரும்) துச்சமாகக் கருதியதுமில்லை.ஐந்தாவது பெண் கூறினார்: என் கணவர் (வீட்டுக்குள்) நுழையும்போது சிறுத்தை போல் நுழைவார். வெளியே போனால் சிங்கம் போலிருப்பார். (வீட்டினுள்) தாம் கண்டுபிடித்த (குறைபாடுகள் முதலிய)வை பற்றி எதுவும் கேட்கமாட்டார். ஆறாவது பெண் கூறினார்: என் கணவர் உண்டாலும் வாரி வழித்து உண்டு விடுகிறார். குடித்தாலும் மிச்சம் மீதி வைக்காமலும் குடித்துவிடுகிறார். படுத்தாலும் (விலகி) சுருண்டு போய்ப் படுத்துக்கொள்கிறார். என் சஞ்சலத்தை அறிய தம் கையைக் கூட அவர் (என் ஆடைக்குள்) நுழைப்பதில்லை.ஏழாவது பெண் கூறினார்: என் கணவர் 'விவரமில்லாதவர்' அல்லது 'ஆண்மையில்லாதவர்', சற்றும் விவேகமில்லாதவர். எல்லா நோய்களும் (குறைகளும்) அவரிடம் உண்டு. (அவரிடம் பேசினால் என்னை ஏசுவார். கேலி செய்தால்) என் தலையைக் காயப்படுத்துவார். (கோபம் வந்துவிட்டால்) என் உடலைக் காயப்படுத்துவார். அல்லது இரண்டையும் செய்வார். எட்டாவது பெண் கூறினார்:என் கணவர் தொடுவதற்கு முயலைப் போன்ற (மிருதுவான மேனி உடைய)வர்; முகர்வதற்கு மரிக்கொழுந்து போல் மணக்கக் கூடியவர்.ஒன்பதாவது பெண் கூறினார்: என் கணவர் (அவரை நாடி வருவோரைக் கவரும் வகையில்) உயரமான தூண்(கள் கொண்ட மாளிகை) உடையவர். நீண்ட வாளுறை கொண்ட (உயரமான)வர். (விருந்தினருக்குச் சமைத்துப் போட்டு வீட்டு முற்றத்தில்) சாம்பலை நிரைத்து வைத்திருப்பவர். (மக்கள் அவரைச் சந்திப்பதற்கு வசதியாக) சமுதாயக் கூடத்திற்கு அருகிலேயே வீட்டை அமைத்துக் கொண்டவர். பத்தாவது பெண் கூறினார்: என் கணவர் செல்வந்தர் எத்துணை பெரும் செவ்வந்தர் தெரியுமா? எல்லா செல்வந்தர்களையும் விட மேலான செல்வந்தர். அவரிடம் ஏராளமான ஒட்டகங்கள் உள்ளன. (அவற்றை அறுத்து விருந்தினருக்குப் பரிமாறுவதற்கு வசதியாகப்) பெரும்பாலும் அவை தொழுவங்களிலேயே (தயார் நிலையில்) இருக்கும். (விருந்தினர் வராத சில நாள்களில் மட்டும்) குறைவாகவே மேய்ச்சலுக்கு விடப்படும். (விருந்தினர் வருகையை முனனிட்டு மகிழ்ச்சியில் ஒலிக்கப்படும்) குழலோசையை அந்த ஒட்டகங்கள் கேட்டுவிட்டால் தாம் அழிந்தோம் என அவை உறுதிசெய்து கொள்ளும். பதினொன்றாவது பெண் கூறினார்: என் கணவர் (பெயர்) அபூ ஸர்உ. அபூ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார். (ஆசையாசையாக உணவளித்து) என் கொடுங்கைகளை கொழுக்கச் செய்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருக்கிறது. ஒரு மலைக் குகையில் (அல்லது) '»க்' எனுமிடத்தில்) சிறிது ஆடுகளுடன் (திரிந்துகொண்டு) இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர், என்னை (மனைவியாக ஏற்று) குதிரைகளும் ஒட்டகங்களும் உள்ள, தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த (அவரின் பண்ணை) வீட்டில் என்னை வாழச் செய்தார். நான் அவரிடம் எதையும் பேசுவேன்; நான் அலட்சியப்படுத்தப் பட்டதில்லை. நான் தூங்கினாலும் (நிம்மதியாக) முற்பகல் வரைத் தூங்குகிறேன். (என் தூக்கத்தை யாரும் கலைப்பதில்லை.) நான் (உண்டாலும்) பருகினாலும் பெருமிதப்படும் அளவிற்கு (உண்ணுகிறேன்) பருகுகிறேன்.(என் கணவரின் தாயார்) உம்மு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரின் வீட்டுக்கு களஞ்சியம் (எப்போதும்) கனமாகவே இருக்கும் அவரின் வீடு விசாலமானதாகவே இருக்கும்.(என் கணவரின் புதல்வர்) இப்னு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரின் படுக்கை, உருவப்பட்ட கோரை போன்று (அல்லது உறையிலிருந்து எடுக்கப்பட்ட வாளைப் போன்று (சிறியதாக) இருக்கும். (அந்த அளவிற்குக் கச்சிதமான உடலமைப்பு உள்ளவர்.) ஓர் ஆட்டுக் குட்டியின் ஒரு சப்பை(இறைச்சி) அவரின் பசியைத் தணித்து விடும். (அந்த அளவிற்குக் குறைவாக உண்ணுபவர்.)(என் கணவரின் புதல்வி) பின்த் அபீ ஸர்உ எத்தயைவர் தெரியுமா? தம் தாய் தந்தைக்கு அடங்கி நடப்பவர். (கட்டான உடல் கொண்ட) அவரின் ஆடை நிறைவானதாக இருக்கும். அண்டை வீட்டுக்காரி அவரைக் கண்டு பொறாமை கொள்வாள்.(என் கணவர்) அபூ ஸர்உ உடைய பணிப்பெண் எத்தகையவள் தெரியுமா? அவள் எங்கள் (இரகசிய) செய்திகளை அறவே வெளியிடுவதில்லை. வீட்டிலுள்ள உணவுப் பொருள்களைச் சேதப்படுத்துவதுமில்லை. வீட்டில் குப்பை கூளங்கள் சேர விடுவதுமில்லை. (அவ்வளவு நம்பிக்கையானவள்; பொறுப்புமிக்கவள்; தூய்மை விரும்பி.)(ஒருநாள்) பால் பாத்திரங்களில் (மோர் கடைந்து) வெண்ணெய் எடுக்கப்படும் (வசந்த கால அதிகாலை) நேரம் (என் கணவர்) அபூ ஸர்உ வெளியே சென்றார். (வழியில்) ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவளுடன் சிறுத்தைகள் போன்ற அவளுடைய இரண்டு குழந்தைகள் இருந்தனர். அந்தக் குழந்தைகள் அவளுடைய இடைக்குக் கீழே இரண்டு மாதுளங்கனிகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். எனவே, (அவளுடைய கட்டழகில் மனதைப் பறி கொடுத்து) என்னை விவாக விலக்குக் செய்துவிட்டு, அவளை மணந்தார். அவருக்குப் பின் இன்னொரு நல்ல மனிதருக்கு நான் வாக்கப்பட்டேன். அவர் வேகமாகச் செல்லும் குதிரையில் ஏறி, (பஹ்ரைன் நாட்டிலுள்ள) 'கத்' எனும் இடத்தைச் சேர்ந்த ஈட்டி ஒன்றை எடுத்தார். மாலையில் வீடு திரும்பியபோது ஏராளமான கால்நடைகளை என்னிடம் கொண்டு வந்தார். மேலும், எனக்கு ஒவ்வொரு பொருட்களிலும் ஒரு ஜோடியை வழங்கி, 'உம்மு ஸாஉவே! (நன்றாக) நீயும் சாப்பிடு! உன்(தாய்) வீட்டாருக்கும் சாப்பிடக் கொடு'' என்றார்.(ஆனாலும்,) அவர் எனக்கு (அன்புடன்) வழங்கிய எல்லாப் பொருள்களையும் நான் ஒன்றாய்க் குவித்தாலும் (என் முதல் கணவரான) அபூ ஸர்உவின் சின்னஞ்சிறு பாத்திரத்தைக் கூட அவை நிரப்பமுடியாது (என்று கூறி முடித்தார்.) ஆயிஷா (ரலி) கூறினார்:(என்னருமைக் கணவரான) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), '(ஆயிஷாவே!) உம்மு ஸர்விற்கு அபூ ஸர்உ எப்படியோ அப்படியே உனக்கு நானும் (அன்பாளனாக) இருப்பேன்' என்றார்கள்.
புஹாரி :5189 ஆயிஷா (ரலி).

Monday, September 8, 2008

ரமழான் மாதத்தில் தினமும் ஓதும் துஆ

ரமழான் மாதத்தில் தினமும் ஓதும் துஆ
ஒவ்வொரு நாளுடைய நோன்பிற்கும் அதில் ஓதுகின்ற திக்ருகளுக்கும், துஆக்களுக்கும் அதிகமான நன்மைகள் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைத் தொட்டும். அறிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு சிறப்புக்கள் வாய்ந்த நன்மைகள் நிறைந்த துஆக்கள் அதிகமாக இருக்கின்றது. விரிவஞ்சி சுருக்கமாக அவைகளை இங்கு குறிப்பிடுகிறோம்.
1- முதலாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اجْعَلْ صِیَامِى فِيهِ صِیَامَ الصَّائِمِينَ وَ قِیَامِى فِيهِ قِیَامَ الْقَائِمِينَ وَ نَبِّهْنِى فِيهِ عَنْ نَوْمَةِ الْغَافِلِينَ وَ هَبْ لِى جُرْمِى فِيهِ یَا إِلَهَ الْعَالَمِينَ وَ اعْفُ عَنِّى یَا عَافِيا عَنِ الْمُجْرِمِينَ.
இறைவா, இம்மாதத்தில் எனது நோன்பை உண்மையான நோன்பாளிகளின் நோன்பாகவும் அவ்வாறே எனது இரவு வணக்கத்தையும் உண்மையான வணக்கவாளிகளின் வணக்கமாகவும் ஆக்கிக் கொடு. அதில் அலட்சியக்காரரின் தூக்கத்திலிருந்து என்னை விழிக்க வைப்பாயாக. எனது தவறுகளை மன்னித்து குற்றவாளிகளிலிருந்தும் விலக்கி வைப்பாயாக.
2- இரண்டாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ قَرِّبْنِى فِيهِ إِلَى مَرْضَاتِكَ وَ جَنِّبْنِى فِيهِ مِنْ سَخَطِكَ وَ نَقِمَاتِكَ وَ وَفِّقْنِى فِيهِ لِقِرَاءَةِ آیَاتِكَ بِرَحْمَتِكَ یَا أَرْحَمَ الرَّاحِمِينَ.
இறைவா, இம்மாதத்தில் உனது திருப்திக்கு அருகில் என்னை ஆக்கி உனது கோபத்திலும் அதிருப்தியிலும் இருந்து என்னை தூரமாக்கு. இந்நாளில் உனது மறைவசனங்களை ஓதுகின்ற பாக்கியத்தையும் எனக்குத் தந்தருள். கருணையுள்ள ரஹ்மானே.
3- மூன்றாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ ارْزُقْنِى فِيهِ الذِّهْنَ وَ التَّنْبِيهَ وَ بَاعِدْنِى فِيهِ مِنَ السَّفَاهَةِ وَ التَّمْوِيهِ وَ اجْعَلْ لِى نَصِيبا مِنْ كُلِّ خَیْرٍ تُنْزِلُ فِيهِ بِجُودِكَ یَا أَجْوَدَ الْأَجْوَدِينَ.
இறைவா, இம்மாதத்தில் விழிப்புணர்வையும் அலட்சியமின்மையையும் தருவாயாக. மடத்தனத்திலும் சிறுமையிலும் இருந்து என்னை விலக்கிவிடுவாயாக. இந்நாளில் நீ இறக்கி வைக்கின்ற எல்லா நன்மைகளிலும் பங்காளியாக என்னையும் ஆக்கி வை. பெரும் கொடையாளனே.
4 - நான்காவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ قَوِّنِى فِيهِ عَلَى إِقَامَةِ أَمْرِكَ وَ أَذِقْنِى فِيهِ حَلاوَةَ ذِكْرِكَ وَ أَوْزِعْنِى فِيهِ لِأَدَاءِ شُكْرِكَ بِكَرَمِكَ وَ احْفَظْنِى فِيهِ بِحِفْظِكَ وَ سِتْرِكَ یَا أَبْصَرَ النَّاظِرِينَ.
இறைவா,இம்மாதத்தில் உனது கட்டளையை நிறைவேற்றும் சக்தியை எனக்கு கொடு. உன்னை தியானிப்பதிலுள்ள இன்பத்தை எனக்குக் கொடு. உனது கொடைகளுக்கு நன்றி சொல்லும் தன்மையை எனக்குக் கொடு. உனது பாதுகாப்பிலும் கண்காணிப்பிலும் என்னைப பாதுகாப்பாயாக. கண்காணிப்பவர்களில் மிகச் சிறந்தவனே.
5- ஐந்தாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اجْعَلْنِى فِيهِ مِنَ الْمُسْتَغْفِرِينَ وَ اجْعَلْنِى فِيهِ مِنْ عِبَادِكَ الصَّالِحِينَ الْقَانِتِينَ وَ اجْعَلْنِى فِيهِ مِنْ أَوْلِیَائِكَ الْمُقَرَّبِينَ بِرَأْفَتِكَ یَا أَرْحَمَ الرَّاحِمِينَ.
இறைவா, இம்மாதத்தில் பாவமன்னிப்புக் கோருவோரில் ஒருவனாகவும் மனநிறைவு கொண்ட நல்லடியார்களில் ஒருவனாகவும் உனது நெருக்கத்துக்குரிய நேசர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்குவாயாக. இரக்கமும் கருணையுமுள்ள நாயனே.
6 - ஆறாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ لا تَخْذُلْنِى فِيهِ لِتَعَرُّضِ مَعْصِیَتِكَ وَ لا تَضْرِبْنِى بِسِیَاطِ نَقِمَتِكَ وَ زَحْزِحْنِى فِيهِ مِنْ مُوجِبَاتِ سَخَطِكَ بِمَنِّكَ وَ أَیَادِيكَ یَا مُنْتَهَى رَغْبَةِ الرَّاغِبِينَ.
இறைவா, இம்மாதத்தில் உனக்கு மாறுசெய்யும் இழிநிலை ஏற்படுவதில் இருந்து என்னை காப்பாயாக. உன் தண்டனையின் சாட்டையால் என்னை தண்டிக்காதே. உன் கோபத்தை வருவிக்கும் செய்கைகளில் இருந்து உனது கருணையாலும் கொடையாலும் என்னை துரத்தவரி விடு. ஆவல் கொண்டோரின் இறுதி இலட்சியம் ஆனவனே.
7 - ஏழாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ أَعِنِّى فِيهِ عَلَى صِیَامِهِ وَ قِیَامِهِ وَ جَنِّبْنِى فِيهِ مِنْ هَفَوَاتِهِ وَ آثَامِهِ وَ ارْزُقْنِى فِيهِ ذِكْرَكَ بِدَوَامِهِ بِتَوْفِيقِكَ یَا هَادِىَ الْمُضِلِّينَ.
இறைவா, இம்மாதத்தில் நோன்பு நோற்கவும இரவில் வணக்கம் புரியவும் எனக்கு உதவி செய்வாயாக. இந்நாளில் கேளிக்கையிலிருந்தும் பாவச்செயல்களில் இருந்தும் என்னை பாதுகாப்பாயாக. உன் அருட்கொடையால் நிதமும் உன் நினைவில் இருப்பதற்கு அருள் செய்வாயாக. வழி தவறியவர்களை நேர்வழிப்படுத்துபவனே.
8 - எட்டாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ ارْزُقْنِى فِيهِ رَحْمَةَ الْأَیْتَامِ وَ إِطْعَامَ الطَّعَامِ وَ إِفْشَاءَ السَّلامِ وَ صُحْبَةَ الْكِرَامِ بِطَوْلِكَ یَا مَلْجَأَ الْآمِلِينَ.
இறைவா இம்மாதத்தில் உன் கொடை மகிமையால் அநாதைகளுக்கு இரக்கம் காட்டவும் பசித்தவர்களுக்கு உணவளிக்கவும் சமாதானத்தைப் பரப்பவும் கண்ணியவான்களுடன் நல்லுறவு கொள்ளவும் எனக்கு அருள் செய்வாயாக. எதிர்பார்பவர்களின் புகலிடம் ஆனவனே.
9 - ஒன்பதாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اجْعَلْ لِى فِيهِ نَصِيبا مِنْ رَحْمَتِكَ الْوَاسِعَةِ وَ اهْدِنِى فِيهِ لِبَرَاهِينِكَ السَّاطِعَةِ وَ خُذْ بِنَاصِیَتِى إِلَى مَرْضَاتِكَ الْجَامِعَةِ بِمَحَبَّتِكَ یَا أَمَلَ الْمُشْتَاقِينَ.
இறைவா இம்மாதத்தில் உன் விசாலமான ரஹ்மத்தில் பங்காளியாக என்னை ஆக்குவாயாக. இந்நாளில் உனது ஒளிமயமான அத்தாட்சியின் பால் என்னை வழிநடாத்துவாயாக. எனது பரிபூரண அன்பு நிறைந்த திருப்பொருத்ததின் பால் என்னை அழைத்துச் செல். ஆசை கொண்டோரின் நம்பிக்கை ஆனவனே.
10 - பத்தாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اجْعَلْنِى فِيهِ مِنَ الْمُتَوَكِّلِينَ عَلَیْكَ وَ اجْعَلْنِى فِيهِ مِنَ الْفَائِزِينَ لَدَیْكَ وَ اجْعَلْنِى فِيهِ مِنَ الْمُقَرَّبِينَ إِلَیْكَ بِإِحْسَانِكَ یَا غَایَةَ الطَّالِبِينَ.
இறைவா இம்மாதத்தில் உன் மீது நம்பிக்கை வைத்தோரில் ஒருவனாகவும் உன்னிடத்தில் ஜெயம் பெற்றோரில் ஒருவனாகவும் உனக்கு நெருங்கிய நேசர்களில் ஒருவனாகவும் உன் தாராளத் தன்மையைக் கொண்டு என்னை ஆக்கிவிடுவாயாக. நாட்டம் கொண்டோர்களின் தேட்டம் ஆனவனே.
11 - பதினோராவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ حَبِّبْ إِلَىَّ فِيهِ الْإِحْسَانَ وَ كَرِّهْ إِلَىَّ فِيهِ الْفُسُوقَ وَ الْعِصْیَانَ وَ حَرِّمْ عَلَىَّ فِيهِ السَّخَطَ وَ النِّيرَانَ بِعَوْنِكَ یَا غِیَاثَ الْمُسْتَغِيثِينَ.
இறைவா இம்மாதத்தில், நற்கருமங்கள் மீதுள்ள பற்றுதலை அதிகப் படுத்துவாயாக. பாவங்களையும் தீமைகளையும் வெறுக்கச் செய்வாயாக. உன் ஒத்தாசையால் உனது கோபத்தையும் நரக நெருப்பையும் எனக்கு என்றென்றும் தடை செய்வாயாக. அவலக் குரல் எழுப்புபவர்களுக்கு செவிமடுப்போனே.
12 - பனிரெண்டாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ زَیِّنِّى فِيهِ بِالسِّتْرِ وَ الْعَفَافِ وَ اسْتُرْنِى فِيهِ بِلِبَاسِ الْقُنُوعِ وَ الْكَفَافِ وَ احْمِلْنِى فِيهِ عَلَى الْعَدْلِ وَ الْإِنْصَافِ وَ آمِنِّى فِيهِ مِنْ كُلِّ مَا أَخَافُ بِعِصْمَتِكَ یَا عِصْمَةَ الْخَائِفِينَ.
இறைவா இம்மாதத்தில் அறம் காப்பதன் மூலமும் மறைப்பதன் மூலமும் என்னை அழகு படுத்துவாயாக. திருப்தியினதும் மனநிறைவினதும் ஆடையால் என்னை போர்த்துவாயாக. நீதியையும் நேர்மையையும் சுமக்க வைப்பாயாக. எனது எல்லாவித அச்சங்களில் இருந்தும் பாதுகாப்புத் தருவாயாக. அச்சம் கொண்டோரை பாதுகாப்பளிப்பவனே.
13 - பதின் மூன்றாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ طَهِّرْنِى فِيهِ مِنَ الدَّنَسِ وَ الْأَقْذَارِ وَ صَبِّرْنِى فِيهِ عَلَى كَائِنَاتِ الْأَقْدَارِ وَ وَفِّقْنِى فِيهِ لِلتُّقَى وَ صُحْبَةِ الْأَبْرَارِ بِعَوْنِكَ یَا قُرَّةَ عَیْنِ الْمَسَاكِينِ.
இறைவா இம்மாதத்தில், அசிங்கங்களிலிருந்தும் அசுத்தங்களிலிருந்தும்என்னை பரிசுத்தப்படுத்துவாயாக. விரக்தியூட்டும் நிகழ்வுகளில் எனக்கு பொறுமையை தந்தருள். இறையச்சம் கொள்ளவும் நல்லடியார்களின் சகவாசத்தைப் பெறவும் உன் உதவியால் எனக்கு கிருபை செய்வாயாக. எளியோரை மகிழ்விப்பவனே.
14 - பதின் நான்காவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ لا تُؤَاخِذْنِى فِيهِ بِالْعَثَرَاتِ وَ أَقِلْنِى فِيهِ مِنَ الْخَطَایَا وَ الْهَفَوَاتِ وَ لا تَجْعَلْنِى فِيهِ غَرَضا لِلْبَلایَا وَ الْآفَاتِ بِعِزَّتِكَ یَا عِزَّ الْمُسْلِمِينَ
இறைவா இம்மாதத்தில் எனது தப்புகளுக்காக என்னை தண்டிக்காதே. எனது பிழைகளிலிருந்தும் அறியாமையிலிருந்தும் என்னை காப்பாயாக. சோதனைகளும் ஆபத்துகளும் இறங்கும் தளமாக என்னை ஆக்கி விடாதே. முஸ்லிம்களின் கண்ணியத்தை காப்பவனே.
15 - பதினைந்தாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ ارْزُقْنِی فِيهِ طَاعَةَ الْخَاشِعِينَ وَ اشْرَحْ فِيهِ صَدْرِی بِإِنَابَةِ الْمُخْبِتِينَ بِأَمَانِكَ یَا أَمَانَ الْخَائِفِينَ
இறைவா இம்மாதத்தில், பணிவச்சம் கொண்டோரின் பின்பற்றுதலை எனக்கு அருள்வாயாக. உன் அபயத்தின் மகிமையால் உன்பால் திரும்பியோரின் இதய விசாலத்தை எனக்கு அருளுவாயாக. அச்சம் கொண்டோருக்கு அபயமளிப்பவனே.
16 - பதினாறாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ وَفِّقْنِى فِيهِ لِمُوَافَقَةِ الْأَبْرَارِ وَ جَنِّبْنِى فِيهِ مُرَافَقَةَ الْأَشْرَارِ وَ آوِنِى فِيهِ بِرَحْمَتِكَ إِلَى [فِى‏] دَارِ الْقَرَارِ بِإِلَهِیَّتِكَ یَا إِلَهَ الْعَالَمِينَ.
இறைவா இம்மாதத்தில் நல்லவர்களின் சகவாசத்தைப் பெற்றுத் தருவாயாக. தீயோரின் உறவுகளிலிருந்தும் தூரமாக்குவாயாக. உன் அருளால் நிரந்தர வீட்டில் புகலிடம் தருவாயாக. அகிலத்தோரின் இறையோனே.
17 - பதினேழாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اهْدِنِى فِيهِ لِصَالِحِ الْأَعْمَالِ وَ اقْضِ لِى فِيهِ الْحَوَائِجَ وَ الْآمَالَ یَا مَنْ لا یَحْتَاجُ إِلَى التَّفْسِيرِ وَ السُّؤَالِ یَا عَالِما بِمَا فِى صُدُورِ الْعَالَمِينَ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ الطَّاهِرِينَ.
இறைவா இம்மாதத்தில் நற்செய்கையின் பால் வழிநடாத்துவாயாக. என்னுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி வைப்பாயாக. கேற்பதற்கோ விளக்குவதற்கோ அவசியமில்லாதவனே. படைப்புக்களின் இதயங்களில் உள்ளவற்றை தெரிந்து வைத்துள்ளவனே. உனது தூதர் நபி முஹம்மது மீதும் அவர்கள் பரிசுத்த குடும்பத்தினர் மீதும் ஆசீர்வதிப்பாயாக.
18 - பதினெட்டாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ نَبِّهْنِى فِيهِ لِبَرَكَاتِ أَسْحَارِهِ وَ نَوِّرْ فِيهِ قَلْبِى بِضِیَاءِ أَنْوَارِهِ وَ خُذْ بِكُلِّ أَعْضَائِى إِلَى اتِّبَاعِ آثَارِهِ بِنُورِكَ یَا مُنَوِّرَ قُلُوبِ الْعَارِفِينَ.
இறைவா இம்மாதத்தில் பின்னிரவில் மகிமை பற்றிய விழிப்பைத் தருவாயாக. அதன் ஜோதியின் பிரகாசத்தால் என்னிதயத்தை ஒளிமயமாக்கி வைப்பாயாக. எனது உடலின் ஒவ்வொரு உறுப்பையும் உனது ஜோதியைக் கொண்டு அதன் வழியில் இட்டுச் செல்வாயாக. ஞானிகளின் இதயங்களை ஒளிமயமாக்குபவனே.
19 - பத்தொன்பதாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ وَفِّرْ فِيهِ حَظِّى مِنْ بَرَكَاتِهِ وَ سَهِّلْ سَبِيلِى إِلَى خَیْرَاتِهِ وَ لا تَحْرِمْنِى قَبُولَ حَسَنَاتِهِ یَا هَادِيا إِلَى الْحَقِّ الْمُبِينِ.
இறைவா இம்மாதத்தில், அதன் பரக்கத்துக்களை அடையும் பாக்கியத்தை எனக்குத் தருவாயாக. அதன் நலன்ளை பெறும் வழியை எனக்கு இலகுபடுத்து. அதில் செய்யும் நன்மைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு எனக்கு தடை செய்து விடாதே. தெளிவான உண்மையின் பால் வழிகாட்டுபவனே.
20 - இருபதாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ افْتَحْ لِى فِيهِ أَبْوَابَ الْجِنَانِ وَ أَغْلِقْ عَنِّى فِيهِ أَبْوَابَ النِّيرَانِ وَ وَفِّقْنِى فِيهِ لِتِلاوَةِ الْقُرْآنِ یَا مُنْزِلَ السَّكِينَةِ فِى قُلُوبِ الْمُؤْمِنِينَ.
இறைவா இம்மாதத்தில், சுவர்க்கத்தின் வாசல்களை திறந்து வைப்பாயாக. நரகத்தின் வாசல்ளை என் மீது மூடி விடுவாயாக. குர்ஆனை அதிகமாக ஓதும் பாக்கியத்தை தருவாயாக. விசுவாசிகளின் உள்ளங்களை சாந்தத்தை இறக்கி வைப்பவனே.
21 - இருபத்தி ஓறாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اجْعَلْ لِى فِيهِ إِلَى مَرْضَاتِكَ دَلِيلا وَ لا تَجْعَلْ لِلشَّیْطَانِ فِيهِ عَلَىَّ سَبِيلا وَ اجْعَلِ الْجَنَّةَ لِى مَنْزِلا وَ مَقِيلا یَا قَاضِىَ حَوَائِجِ الطَّالِبِينَ.
இறைவா இம்மாதத்தில் உன் திருப்பொருத்தத்தை அடைவதற்கு வழிகாட்டலைத் தந்தருள். ஷைத்தானுக்கு என்னை வழிகெடுக்கும் வாய்ப்பை கொடுக்காதே. நான் இறுதியில் தங்கி வாழும் இடமாக சுவர்க்கத்தை ஆக்கி வைப்பாயாக. கேற்போரின் நாட்டங்களை நிறைவேற்றி வைப்போனே.
22 - இருபத்தி ரெண்டாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ افْتَحْ لِى فِيهِ أَبْوَابَ فَضْلِكَ وَ أَنْزِلْ عَلَىَّ فِيهِ بَرَكَاتِكَ وَ وَفِّقْنِى فِيهِ لِمُوجِبَاتِ مَرْضَاتِكَ وَ أَسْكِنِّى فِيهِ بُحْبُوحَاتِ جَنَّاتِكَ یَا مُجِيبَ دَعْوَةِ الْمُضْطَرِّينَ.
இறைவா இம்மாதத்தில் உன்னுடைய நற்பேறுகளின் கதவுகளை எனக்குத் திறந்து விடு. உன்னுடைய பரக்கத்துக்களை என்மீது சொரிந்து விடுவாயாக. உன் திருப்பொருத்தத்தை அடையும் பாக்கியத்தை தருவாயாக. உன்னுடைய சுவர்க்கங்களின் சூழலில் என்னை வாழ வைப்பாயாக. அல்லல் படுபோரின் அழைப்பை செவிமடுப்போனே.
23 - இருபத்தி மூன்றாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اغْسِلْنِى فِيهِ مِنَ الذُّنُوبِ وَ طَهِّرْنِى فِيهِ مِنَ الْعُیُوبِ وَ امْتَحِنْ قَلْبِى فِيهِ بِتَقْوَى الْقُلُوبِ یَا مُقِيلَ عَثَرَاتِ الْمُذْنِبِينَ.
இறைவா இம்மாதத்தில் பாவங்களில் இருந்து என்னை பரிசுத்தப்படுத்துவாயாக. எனது குறைகளை கழுவி விடுவாயாக. என்னிதயத்தை இதயச்சத்தால் நிரப்புவாயாக. பாவிகளின் குறைகளை நீக்கிவிடுபோனே.
24 - இருபத்தி நான்காவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ فِيهِ مَا یُرْضِيكَ وَ أَعُوذُ بِكَ مِمَّا یُؤْذِيكَ وَ أَسْأَلُكَ التَّوْفِيقَ فِيهِ لِأَنْ أُطِيعَكَ وَ لا أَعْصِیَكَ یَا جَوَادَ السَّائِلِينَ.
இறைவா இம்மாதத்தில் உன்னை மகிழ்விக்கின்றவற்றை உன்னிடம் கோருகின்றேன். உன்னை கோபிக்கச் செய்கின்வற்றில் உன்னிடம் இருந்து பாதுகாவல் தேடுகின்றேன். உன்னை பணிந்து நடக்கவும் உனக்கு மாறு செய்யாமல் இருக்கவும் எனக்கு வரம் கிடைக்குமாறு உன்னிடம் கோருகின்றேன், கேட்போருக்கு அள்ளிக் கொடுப்போனே.
25 - இருபத்தி ஐந்தாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اجْعَلْنِى فِيهِ مُحِبّا لِأَوْلِیَائِكَ وَ مُعَادِيا لِأَعْدَائِكَ مُسْتَنّا بِسُنَّةِ خَاتَمِ أَنْبِیَائِكَ یَا عَاصِمَ قُلُوبِ النَّبِیِّينَ.
இறைவா இம்மாதத்தில் உன் நேசர்களை நேசிப்பவனாகவும் உன் எதிரிகளை விரோதிப்பனாகவும் உனது இறுதித் தூதரின் வழிமுறைகளைப் பேணி நடப்பவனாகவும் என்னை ஆக்குவாயாக. நபிமார்களின் இதயத்தை பரிசுத்தமாக்கியவனே.
26 - இருபத்தி ஆறாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اجْعَلْ سَعْیِى فِيهِ مَشْكُورا وَ ذَنْبِى فِيهِ مَغْفُورا وَ عَمَلِى فِيهِ مَقْبُولا وَ عَیْبِى فِيهِ مَسْتُورا یَا أَسْمَعَ السَّامِعِينَ.
இறைவா இம்மாதத்தில் உன் நேசர்களை நேசிப்பவனாகவும் உன் எதிரிகளை விரோதிப்பனாகவும் உனது இறுதித் தூதரின் வழிமுறைகளைப் பேணி நடப்பவனாகவும் என்னை ஆக்குவாயாக. நபிமார்களின் இதயத்தை பரிசுத்தமாக்கியவனே.
27 - இருபத்தி ஏழாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اجْعَلْ سَعْیِى فِيهِ مَشْكُورا وَ ذَنْبِى فِيهِ مَغْفُورا وَ عَمَلِى فِيهِ مَقْبُولا وَ عَیْبِى فِيهِ مَسْتُورا یَا أَسْمَعَ السَّامِعِينَ.
இறைவா இம்மாதத்தில் லைலத்துல் கதரின் சிறப்பை எனக்கு அருளுவாயாக. எனது விவகாரங்களை கஷ்டத்தில் இருந்து இலேசானவையாக மாற்றிவிடுவாயாக. நான் கோருகின்ற மன்னிப்பை ஏற்றுக் கொண்டு என் பாவச் சுமையை நீக்கி விடுவாயாக. நல்லடியார்கள் மீது இரக்கம் கொண்டவனே.
28 - இருபத்தி எட்டாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ وَفِّرْ حَظِّى فِيهِ مِنَ النَّوَافِلِ وَ أَكْرِمْنِى فِيهِ بِإِحْضَارِ الْمَسَائِلِ وَ قَرِّبْ فِيهِ وَسِيلَتِى إِلَیْكَ مِنْ بَیْنِ الْوَسَائِلِ یَا مَنْ لا یَشْغَلُهُ إِلْحَاحُ الْمُلِحِّينَ.
இறைவா இம்மாதத்தில் மேலதிக வணக்கங்களில் அதிகம் ஈடுபடும் பாக்கியத்தைத் தருவாயாக. அவசியமான தேவைகளைத் தந்து கண்ணியப் படுத்துவாயாக. உன்னை நெருங்கும் வழியை எனக்கு மிக நெருக்கமாக்கித் தருவாயாக. வற்புறுத்திக் கேட்பதால் சலிப்படையாதவனே.
29 - இருபத்தி ஒன்பதாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ غَشِّنِى فِيهِ بِالرَّحْمَةِ وَ ارْزُقْنِى فِيهِ التَّوْفِيقَ وَ الْعِصْمَةَ وَ طَهِّرْ قَلْبِى مِنْ غَیَاهِبِ التُّهَمَةِ یَا رَحِيما بِعِبَادِهِ الْمُؤْمِنِينَ.
இறைவா இம்மாதத்தில் மேலதிக வணக்கங்களில் அதிகம் ஈடுபடும் பாக்கியத்தைத் தருவாயாக. அவசியமான தேவைகளைத் தந்து கண்ணியப் படுத்துவாயாக. உன்னை நெருங்கும் வழியை எனக்கு மிக நெருக்கமாக்கித் தருவாயாக. வற்புறுத்திக் கேட்பதால் சலிப்படையாதவனே.
30 - முப்பதாவது நாள் ஓதும் துஆ
اللَّهُمَّ اجْعَلْ صِیَامِى فِيهِ بِالشُّكْرِ وَ الْقَبُولِ عَلَى مَا تَرْضَاهُ وَ یَرْضَاهُ الرَّسُولُ مُحْكَمَةً فُرُوعُهُ بِالْأُصُولِ بِحَقِّ سَیِّدِنَا مُحَمَّدٍ وَ آلِهِ الطَّاهِرِينَ وَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
இறைவா இம்மாதத்தில் உன் திருநபியினதும் அவரது திருக்குடும்பத்தினதும் பொருட்டால் எனது நோன்பை நீயும் உன் தூதரும் மகிழ்கின்ற விதத்தில் கிளைகள் அடிப்படைகளில் மிகக்கனதியாகப் பொருந்தியவாறு ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவும் பிரதி பலன் தரக் கூடியதாகவும் ஆக்குவாயாக. அகிலத்தோரின் இரட்சகனாகிய அல்லாஹ்வே ..