அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Sunday, August 31, 2008

நறுமணம் மிக்க நபிகளார் (ஸல்) அவர்கள்..

முதல் வஹியின் போது நபிகளாரின் வயது..


1514. அனஸ் (ரலி) நபி (ஸல்) அவர்களின் உருவ அமைப்பை விவரிக்கக் கேட்டேன். அவர்கள், 'நபி (ஸல்) அவர்கள் மக்களில் நடுத்தர உயரமுடையவர்களாக இருந்தார்கள்; நெட்டையானவர்களாகவும் இல்லை. குட்டையானவர்களாகவும் இல்லை. பொன்னிறமுடையவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் சுத்த வெள்ளை நிறமுடையவர்களாகவும் இல்லை. கடும் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை. முழுக்கவே படிந்த முடியுடையவர்களாகவும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட வகை முடியை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் நாற்பது வயதுடையவர்களாக இருந்தபோது அவர்களுக்கு குர்ஆன் அருளப்படலாயிற்று. குர்ஆன் அருளப்படும் நிலையிலேயே மக்கா நகரில் பத்து ஆண்டுகள் தங்கி வசித்து வந்தார்கள். மதீனா நகரிலும் பத்து ஆண்டுகள் வசித்து வந்தார்கள். அவர்களின் தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையிலேயே இறந்து விட்டார்கள்'' என்று கூறினார்கள்.
புஹாரி :3547 ரபிஆ பின் அபீஅப்துர் ரஹ்மான் (ரலி).


20:13 மரணத்தின் போது நபிகளாரின் வயது
1515. நபி (ஸல்) அவர்கள் தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறப்பெய்தினார்கள்.
புஹாரி : 3536 ஆயிஷா (ரலி.

20:13 மக்கா மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் எத்தனை ஆண்டுகள் இருந்தார்கள்.
1516. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் நாற்பதாம் வயதில் நபியாக நியமிக்கப்பட்டார்கள். தமக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் மக்காவில் பதின்மூன்றாண்டுகள் தங்கியிருந்தார்கள். பிறகு ஹிஜ்ரத் செய்யும்படி அவர்களுக்கு கட்டளையிடப்பட, ஹிஜ்ரத் செய்து (மதீனாவில்) பத்தாண்டுகள் வாழ்ந்து வந்தார்கள். தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறப்பெய்தினார்கள்.
புஹாரி : 3902 இப்னு அப்பாஸ் (ரலி). .

20:13 நற்குணங்கள்
1501.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் கறுப்பு நிற அடிமையான அன்ஜஷா எனப்படுபவரும் இருந்தார். அவர் பாட்டுப்பாடி (ஒட்டகத்தை விரைந்தோடச் செய்து) கொண்டிருந்தார். அவரிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'உமக்கு நாசம்தான் (வைஹக்க). அன்ஜஷா! நிதானம்! (ஒட்டகத்தின் மேலுள்ள) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!'' என்று கூறினார்கள்.
புஹாரி :6161 அனஸ் (ரலி).


1502. இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் -எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழி வாங்கியதில்லை. அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர. (அப்போது மட்டும் பழி வாங்குவார்கள்.)
புஹாரி :3560 ஆயிஷா (ரலி).


20:13 நறுமணம் மிக்க நபிகளார் (ஸல்) அவர்கள்..

1503. நபி(ஸல்) அவர்களின் உள்ளங்கையை விட மென்மையான பட்டையோ, (பூ வேலைப்பாடு செய்யப்பட்ட) தூய்மையான பட்டையோ நான் தொட்டதில்லை. நபி (ஸல்) அவர்களின் (உடல்) மணத்தை விட சுகந்தமான ஒரு நறுமணத்தை நான் நுகர்ந்ததேயில்லை.
புஹாரி : 3561 அனஸ் (ரலி).


1504. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக (அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் பொருட்டு) தோல் விரிப்பு ஒன்றை விரிப்பார்கள். அந்த விரிப்பில் நபி(ஸல்) அவர்கள் மதிய ஓய்வெடுப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்களின் (உடலிலிருந்து வழிகின்ற) வியர்வைத் துளிகளையும் (ஏற்கனவே தம்மிடமுள்ள) நபியவர்களின் தலைமுடியையும் எடுத்து ஒரு கண்ணாடிக் குடுவையில் சேகரிப்பார்கள். பிறகு அதனை வாசனைப் பொருளில் வைப்பார்கள். (இதையெல்லாம்) நபி (ஸல்) அவர்கள் உறங்கும்போதே (செய்து முடிப்பார்கள்).
புஹாரி : 6281 துமாமா (ரலி). .

20:13 நபித்துவ முத்திரை பற்றி..


1513. 'என்னுடைய சிறிய தாயார் என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் இரண்டு பாதங்களிலும் வேதனையால் கஷ்டப்படுகிறான்' எனக் கூறியபோது, நபி (ஸல்) அவர்கள் என்னுடைய தலையைத் தடவி என்னுடைய அபிவிருத்திக்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து நான் குடித்தேன். பின்னர் நபி (ஸல்) அவர்களின் முதுகிற்குப் பின்னால் எழுந்து நின்றேன். அப்போது அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் நபித்துவத்தின் முத்திரையை பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்று இருந்தது'' .
புஹாரி : 190 ஸாயிப் இப்னு யஸீது (ரலி

அபூபக்கர் ஸித்திக் (ரலி) அவர்களின் சிறப்புகள்..

அபூபக்கர் ஸித்திக் (ரலி) அவர்களின் சிறப்புகள்..


1540. நபி (ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்தபோது அவர்களிடம், '(குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக் கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்மைக் கண்டு கொள்வார்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'இந்த இரண்டு நபர்களுடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கிறானோ அவர்களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள், அபூபக்ரே!''என்று கேட்டார்கள்.
புஹாரி :3653 அபூபக்கர் (ரலி).


1541. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் மரண நோயின் போதும்) மிம்பரின் மீதமர்ந்து, (மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில்), 'அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவ(து எதுவாயினும் அ)தைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமுள்ள (மறுமைப் பெரு வாழ்வு)தனை எடுத்துக் கொள்ளும்படியும் (இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள) வாய்ப்பளித்தான். அப்போது அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்தார்'' என்று கூறினார்கள். உடனே, அபூபக்ர் (ரலி) அழுதார்கள். மேலும் (நபியவர்களை நோக்கி), 'தங்களுக்கு எங்கள் தந்தையரும் அன்னையரும் அர்ப்பணமாகட்டும்'' என்று கூறினார்கள். நாங்கள் அபூபக்ரு(டைய அழுகை)க்காக வியப்படைந்தோம். மக்கள், 'இந்த முதியவரைப் பாருங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவதைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமிருப்பதை எடுத்துக் கொள்ளும்படியும் இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கிய (மகிழ்ச்சியான விஷயத்)தைத் தெரிவித்துக் கொண்டிருக்க இவர், 'தங்களுக்கு என் தந்தையரும் தாய்களும் அர்ப்பணமாகட்டும்' என்று (அழுதபடி) கூறுகிறாரே'' என்று கூறினார்கள் - இறைத்தூதர் (ஸல்) அவர்களே இப்படி வாய்ப்பு வழங்கப்பட்டவராவார் - அபூபக்ர் (ரலி) தாம் எங்களில் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி அதிகம் அறிந்தவராக இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'தம் தோழமையாலும் தம் செல்வத்தாலும் எனக்குப் பேருபகாரம் புரிந்தவர் அபூ பக்ர் அவர்கள் தாம். என்சமுதாயத்தாரிலிருந்து எவரையேனும் என் உற்ற நண்பராக நான் ஆக்கிக் கொள்வதாயிருந்தால் அபூ பக்ரையே ஆக்கிக் கொண்டிருப்பேன்; எனினும், இஸ்லாத்தின் (காரணத்தால் உள்ள) நட்பே (சிறந்ததாகும்) போதுமானதாகும். (என்னுடைய இந்தப்) பள்ளிவாசலில் உள்ள சாளரங்களில் அபூபக்ரின் சாளரம் தவிர மற்றவை நீடிக்க வேண்டாம்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3904 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).


1542. நபி (ஸல்) அவர்கள் 'தாத்துஸ் ஸலாஸில்'எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, 'மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆயிஷா'' என்று பதிலளித்தார்கள். நான், 'ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷாவின் தந்தை (அபூபக்ர்)'' என்று பதிலளித்தார்கள். 'பிறகு யார் (பிரியமானவர்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு உமர் இப்னு கத்தாப் தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்)'' என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள்.
புஹாரி : 3662 அம்ர் பின் அல் ஆஸ் (ரலி).


1543. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, 'நான் வந்து தங்களைக் காண(முடிய)வில்லையென்றால்..?' என்று, - நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் (என்ன செய்வது?) என்பது போல்- கேட்டாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ என்னைக் காணவில்லையென்றால் அபூபக்ரிடம் செல்'' என்று பதில் கூறினார்கள்.
புஹாரி :3659 ஜூபைர் பின்முத்இம் (ரலி).


1544. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகை தொழுதார்கள். பிறகு மக்களை நோக்கி, '(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒருவர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில் அதில் ஏறிச் சவாரி செய்து அதை அடித்தார். அப்போது அந்தப் பசுமாடு, 'நாங்கள் இதற்காக (மனிதர்களாகிய உங்களைச் சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தில்) உழுவதற்காகத் தான்'' என்று கூறியது. எனக் கூறினார்கள். மக்கள் 'சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) பசுமாடு பேசுமா?' என்று (வியந்து போய்க்) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், 'நானும் அபூ பக்ரும் உமரும் இதை நம்புகிறோம்'' என்று கூறினார்கள். அப்போது அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இருக்கவில்லை. தொடர்ந்து, நபி (ஸல்) அவர்கள், 'ஒருவர் தன் ஆடுகளுக்கிடையே (அவற்றை மேய்த்துக் கொண்டு) இருந்தபோது ஓநாய் (ஆட்டு மந்தைக்குள் புகுந்து) ஓடி, ஆட்டை(த் தாக்கிக் கவ்விக் கொண்டு சென்றது. அந்த ஆட்டைத் தேடி, ஓநாயிடமிருந்து அவர் காப்பாற்றி விட்டார். உடனே, அந்த ஓநாய் அவரைப் பார்த்து, 'இவனே! இதை என்னிடமிருந்து இன்று நீ காப்பாற்றி விட்டாய். ஆனால், கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார் இருக்கிறார்கள்? அந்நாளில் இதற்கு என்னைத் தவிர பாதுகாவலர் யாரும் இல்லையே' என்று கூறியது' .இதைக் கேட்ட மக்கள், 'சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) ஓநாய் பேசுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள்,'நானும் அபூ பக்ரும், உமரும் இதை நம்புகிறோம்'' என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அங்கே அப்போது இருக்கவில்லை.
புஹாரி 3471 அபூஹூரைரா (ரலி).

உதுமான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் சிறப்புகள்..

உதுமான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் சிறப்புகள்..



1554. நான் நபி(ஸல்) அவர்களுடன் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றில் இருந்தேன். அப்போது ஒருவர் வந்து (வாயில் கதவைத்) திறக்கும்படி கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்காகத் திறவுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். நான் அவருக்காக (வாயிற் கதவைத்) திறந்தேன். அவர் அபூபக்ர் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன நற்செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு ஒருவர் வந்து (கதவைத்) திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், 'அவருக்குத் திறந்து விடுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று கூறினார்கள். அவருக்கு நான் கதவைத் திறந்து விட்டேன். அம்மனிதர் உமர் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் நான் நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு ஒருவர் கதவைத் திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் சென்று அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், 'அவருக்கும் திறந்து விடுங்கள்; அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து சொர்க்கம் அவருக்குக் கிடைக்கவிருக்கிறது என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். (நானும் சென்று கதவைத் திறக்க) அம்மனிதர் உஸ்மான் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தேன். அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, '(எனக்கு நேரவிருக்கும் அந்தத் துன்பத்தின் போது) அல்லாஹ்வே (ஆற்றலைத் தந்து) உதவி புரிபவன் ஆவான்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3693 அபூமூஸா (ரலி).



1555. நான் என் வீட்டில் உளூச் செய்து விட்டுப் புறப்பட்டேன். (அப்போது எனக்குள்), 'நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களை விட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே என்னுடைய இந்த நாள் (முழுவதும்) இருப்பேன்'' என்று சொல்லிக் கொண்டேன். நான் பள்ளி வாசலுக்கு வந்து நபி (ஸல்) அவர்களைக் குறித்துக் கேட்டேன். அப்போது மக்கள், 'நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு இந்தப் பக்கம் போனார்கள்'' என்று கூறினர். நான் (நபி (ஸல்) - அவர்கள் சென்ற திசையில்) அவர்களின் அடிச்சுவட்டில் அவர்களைப் பற்றி (இந்த வழியாகச் சென்றார்களா என்று) விசாரித்தபடி சென்றேன். இறுதியில் (குபாவுக்கு அருகிலுள்ள ஒரு தோட்டமான) பிஃரு அரீஸுக்குள் சென்று அதன் வாசலில் அமர்ந்தேன். அதன் வாசல் பேரீச்ச மட்டையால் தயாரிக்கப்பட்டிருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் (இயற்கைக்) கடனை நிறைவேற்றிக் கொண்டு உளூச் செய்தார்கள். உடனே, நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் (பிஃரு) அரீஸ் (என்னும் அத்தோட்டத்தில் உள்ள) கிணற்றின் மீது அதன் சுற்றுச் சுவருக்கு நடுவே தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்க விட்டப்படி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டுத் திரும்பிச்சென்று வாசலருகே அமர்ந்து கொண்டேன். நான் (எனக்குள்), 'இன்று நான் அல்லாஹ்வின் தூதருடைய வாயில் காவலனாக இருப்பேன்'' என்று சொல்லிக் கொண்டேன். அப்போது அபூபக்ர் (ரலி) வந்து கதவைத் தள்ளினார்கள். நான், 'யார் அது?' என்று கேட்டேன். அவர்கள், '(நானே) அபூபக்ர் (வந்துள்ளேன்)'' என்று பதிலளித்தார்கள். உடனே நான், 'சற்றுப் பொறுங்கள்'' என்று சொல்லிவிட்டு (நபி - ஸல் - அவர்களிடம்) சென்று, 'இறைத்தூதர் அவர்களே! இதோ அபூபக்ர் அவர்கள் (வந்து) தங்களிடம் உள்ளே வர அனுமதி கேட்கிறார்கள்'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும், அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். நான் அபூபக்ர் அவர்களை நோக்கிச் சென்ற அவர்களிடம், 'உள்ளே வாருங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று நற்செய்தி அறிவித்தார்கள்'' என்று சொன்னேன். உடனே, அபூபக்ர் அவர்கள் உள்ளே வந்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வலப்பக்கத்தில் அவர்களுடன் (கிணற்றின்) சுற்றுச் சுவரில் அமர்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்றே தம் கால்கள் இரண்டையும் கிணற்றில் தொங்கவிட்டுக் கொண்டு கால்களைத் திறந்து வைத்தார்கள். பிறகு, நான் திரும்பிச் சென்று (வாசலில்) அமர்ந்து கொண்டேன். நான் (முன்பே) என் சகோதர(ர் ஒருவ)ரை உளூச் செய்து என்னுடன் சேர்ந்து கொள்ளும்படி சொல்லி, விட்டு வந்திருந்தேன். எனவே (எனக்குள்), 'அல்லாஹ் இன்னாருக்கு நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு), வரச் செய்வான்'' என்று சொல்லிக் கொண்டேன்.'' இன்னார்' என்று அபூ மூஸா அல் அஷ் அரீ (ரலி) கூறியது. தம் சகோதரரைக் கருத்தில் கொண்டே'' என்று அறிவிப்பாளர் ஸயீத் இப்னு முஸய்யப் (ரஹ்) கூறினார்: அப்போது ஒருவர் கதவை அசைத்தார். நான், 'யார் அது?' என்று கேட்டேன். வந்தவர், '(நானே) உமர் இப்னு கத்தாப் (வந்துள்ளேன்) என்று சொன்னார். நான், 'கொஞ்சம் பொறுங்கள்'' என்று கூறிவிட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் கூறி, 'இதோ, உமர் இப்னு கத்தாப் அவர்கள் வந்து தங்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள்'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவர் சொர்க்கவாசி என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். நான் சென்று, 'உள்ளே வாருங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று உங்களுக்கு நற்செய்தி கூறுகிறார்கள்'' என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து கிணற்றின் சுற்றுச் சுவரில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப்பக்கம் அமர்ந்து தம் இரண்டு கால்களையும் கிணற்றுக்குள் தொங்கவிட்டார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலருகே) அமர்ந்து கொண்டேன். 'அல்லாஹ் இன்னாருக்கு (என்சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச்செய்வான் என்று (முன்போன்றே எனக்குள்) கூறிக் கொண்டேன். அப்போது ஒருவர் வந்து கதவை ஆட்டினார். நான்,'யார் அது?' என்று கேட்டேன். அவர், '(நானே) உஸ்மான் இப்னு அஃப்பான் (வந்திருக்கிறேன்)'' என்று பதிலளித்தார். உடனே, 'கொஞ்சம் பொறுங்கள்'' என்று சொல்லிவிட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு உஸ்மான் அவர்கள் வந்திருக்கும் செய்தியை அறிவித்தேன். நபி (ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி கொடுங்கள்.அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே நான் உஸ்மான் அவர்களிடம் சென்று அவரிடம், 'உள்ளே வாருங்கள். உங்களுக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறினார்கள்'' என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து (பார்த்த போது) சுற்றுச் சுவர் (ஒரு பக்கம்) நிரம்பி விட்டிருப்பதைக் கண்டார்கள். எனவே, மற்றொரு பக்கம் நபி (ஸல்)அவர்களுக்கு எதிரே அமர்ந்தார்கள். அறிவிப்பாளர் ஷரீக் இப்னு அப்தில்லாஹ் (ரஹ்) கூறினார்:ஸயீத் இப்னு முஸய்யப் (ரஹ்), 'நான் (நபி - ஸல் அவர்களும், அபூபக்ர் (ரலி ) அவர்களும், உமர் (ரலி) அவர்களும்) அடுத்தடுத்து அமர்ந்திருந்த இந்த நிலையும் (தற்போது) அவர்களின் கப்ருகள் (மண்ணறைகள்) அமைந்திருக்கும் நிலையைக் குறிப்பதாக விளக்கம் கண்டேன்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3674பூமூஸா அல் அஷ்அரி (ரலி).

கிள்ர் (அலை)அவர்கள் சிறப்பு...

கிள்ர் (அலை)அவர்கள் சிறப்பு...


1539. (இறைவனின்) தூதராகிய மூஸா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களுக்கிடையே உரையாற்ற நின்றார்கள். அப்போது 'மக்களில் பேரறிஞர் யார்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தாமே பேரறிஞன் என்று அவர்கள் பதில் கூறி விட்டார்கள். அவர்கள் இது பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறாதததால் அல்லாஹ் அவர்களைக் கண்டித்து, 'இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் தாம் உம்மை விடப் பேரறிஞர்' என்று அவர்களுக்குச் செய்தி அறிவித்தான். அதற்கவர்கள் 'என் இறைவனே! அவரை நான் சந்திக்க என்ன வழி?'என்று கேட்டார்கள். 'கூடை ஒன்றில் ஒரு மீனைச் சுமந்து (பயணம்) செல்வீராக! அம்மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கேதான் அவர் இருப்பார்' என்று அவர்களிடம் கூறப்பட்டது. உடனே அவர்கள் தம் பணியாளான யூஷஃ இப்னு நூன் என்பாருடன் ஒருமீனைக் கூடையில் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். (நெடு நேரம் நடந்த களைப்பில்) இருவரும் ஒரு பாறையை அடைந்ததும் படுத்து உறங்கிவிட்டார்கள். உடனே கூடையிலிருந்த மீன் மெல்ல நழுவி கடலில் தன் வழியே நீந்திப் போக ஆரம்பித்துவிட்டது. (மீன் காணாமல் போனது மூஸாவுக்கும் அவரின் பணியாளுக்கும் வியப்பளித்தது. அவ்விருவரும் அன்றைய மீதிப்போது முழுவதும் நடந்து போய்க் கொண்டே இருந்தார்கள். பொழுது விடிந்ததும் (அது வரை களைப்பை உணராத) மூஸா (அலை) தம் பணியாளரிடம், 'இந்தப் பயணத்தின் மூலம் நாம் (மிகுந்த) சிரமத்தைச் சந்தித்து விட்டோம். எனவே நம்முடைய காலை உணவை எடுத்து வா?' என்றார்கள். (சந்திப்பதற்காகக்) கட்டளையிடப்பட்டிருந்த இடத்தைத் தாண்டும்வரை எந்த விதச் சிரமத்தையும் அவர்கள் உணரவில்லை. அப்போது பணியாளர் அவர்களிடம் 'பார்த்தீர்களா? நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தபோது (தான் அந்த மீன் ஓடியிருக்க வேண்டும்) நானும் மீனை மறந்து விட்டேன்' என்றார். '(அட!) அது தானே நாம் தேடி வந்த இடம்' என்று மூஸா (அலை) அவர்கள் கூறிவிட்டு, இருவருமாகத் தம் காலடிச் சுவடுகளைப் பின் தொடர்ந்தவர்களாய் (வந்த வழியே) திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறையைச் சென்றடைந்ததும் ஆடை போர்த்தியிருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். உடனே மூஸா (அலை) அவர்கள் (அம்மனிதருக்கு) ஸலாம் கூறினார்கள். அப்போது கிள்று அவர்கள் 'உம்முடைய ஊரில் ஸலாம் (கூறும் பழக்கம்) ஏது?' என்று கேட்டார்கள். 'நான்தான் மூஸா' என்றார்கள். 'இஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட மூஸாவா?' என கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு 'ஆம்!' என்று கூறினார்கள். 'உமக்கு (இறைவனால்) கற்றுத் தரப்பட்டதிலிருந்து எனக்குக் கற்றுத் தருவதற்காக உம்மை நான் பின்பற்றி வரட்டுமா?' என்று கேட்டார்கள். கிள்ரு (அலை) அவர்கள், 'நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர்! மூஸாவே! இறைவன் தன்னுடைய ஞானத்திலிருந்து எனக்குக் கற்றுத் தந்தது எனக்கிருக்கிறது. அதனை நீர் அறிய மாட்டீர். அவன் உமக்குக் கற்றுத் தந்திருக்கிற வேறொரு ஞானம் உமக்கிருக்கிறது. அதனை நான் அறிய மாட்டேன்' என்று கூறினார்.அதற்கு மூஸா (அலை) அவர்கள், 'உம்முடைய உத்தரவை மீறாத முறையில் அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்!' என்றார்கள். (முடிவில்) இருவரும் கப்பல் எதுவும் கிடைக்காத நிலையில் கடற்கரை ஓரமாகவே நடந்து சென்றார்கள். அவ்விருவரையும் ஒரு கப்பல் கடந்து சென்றது. தங்களையும் (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் கிள்று அவர்களை அறிந்திருந்ததால் அவ்விருவரையும் கட்டணம் ஏதுமின்றிக் கப்பலில் ஏற்றினார்கள். ஒரு சிட்டுக்குருவி வந்து கப்பலின் ஓரத்தில் அமர்ந்து கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது கிள்று அவர்கள், 'மூஸா அவர்களே! இச்சிட்டுக் குருவி கொத்தியதால் கடலில் எவ்வளவு குறையுமோ அது போன்ற அளவுதான் என்னுடைய ஞானமும் உம்முடைய ஞானமும் அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து குறைந்து விடும்' என்று கூறினார்கள். (சற்று நேரம் கழித்ததும்) கப்பலின் பலகைகளில் ஒன்றை கிள்று (அலை) கழற்றினார்கள். இதைக் கண்ட மூஸா (அலை) அவர்கள் 'நம்மைக் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிய இந்த மக்கள் மூழ்கட்டும் என்பதற்காக, வேண்டுமென்று கப்பலை உடைத்து விட்டீரே?' என்று கேட்டார்கள். 'மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர் என்று நான் (முன்பே உமக்குச்) சொல்லவில்லையா? என்று கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், 'நான் மறந்துவிட்டதற்காக என்னை நீர் (குற்றம்) பிடித்து விடாதீர்' என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே முதற் பிரச்சினை மூஸாவிடமிருந்து மறதியாக ஏற்பட்டுவிட்டது. (கடல் வழிப் பயணம் முடிந்து) மீண்டும் இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் ஏனைய சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிள்று அவர்கள் அதன் தலையை மேலிருந்து பிடித்து (இழுத்து)த் தம் கையால் (திருகி) தலையை முறித்துவிட்டர்கள். உடனே மூஸா (அலை) அவர்கள் 'யாரையும் கொலை செய்யாத (ஒரு பாவமும் அறியாத) தூய்மையான ஆத்மாவைக் கொன்று விட்டீரே?' என்று கேட்டார்கள். அதற்கு கிள்று அவர்கள் 'மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாயிருக்க முடியாது என்று உம்மிடம் நான் முன்பே சொல்லவில்லையா?' என்று கேட்டார்கள். இந்த வார்த்தை முந்திய வார்த்தையை விட மிக்க வலியுறுத்தலுடன் கூடியது என இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உயைனா என்பவர் கூறுகிறார். மீண்டும் இருவரும் (சமாதானமாய்) நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். முடிவாக ஒரு கிராமத்தவரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டார்கள். அவ்வூரார் அவர்களுக்கு உணவளிக்க மறுத்து விட்டார்கள். அப்போது அக்கிராமத்தில் ஒரு சுவர், கீழே விழுந்து விடும் நிலையிருக்கக் கண்டார்கள். உடனே கிள்று அவர்கள் தங்களின் கையால் அச்சுவரை நிலை நிறுத்தினார்கள். (இதைப் பார்த்துக் கொண்டிருந்த) மூஸா (அலை) அவர்கள் 'நீர் விரும்பியிருந்தால் இதற்காக ஏதாவது கூலி பெற்றிருக்கலாமே!' என்று அவர்களிடம் கேட்டார்கள். உடனே கிள்று அவர்கள், 'இதுதான் எனக்கும் உமக்குமிடையே பிரிவினையாகும்' என்று கூறி விட்டார்கள். ''(இச்சம்பவத்தை) நபி (ஸல்) அவர்கள் (சொல்லிவிட்டு) 'மூஸா மாத்திரம் சற்றுப் பொறுமையாக இருந்திருந்தால் அவ்விருவரின் விஷயங்களிலிருந்தும் நமக்கு இன்னும் (நிறைய) வரலாறு கூறப்பட்டிருக்கும். அல்லாஹ் மூஸாவிற்கு அருள் புரிவானாக!' என்று கூறினார்கள்''.
புஹாரி : 122 உபை இப்னு கஹ்ஃப் (ரலி

நபியூஸூஃப் (அலை)&நபி யூனுஸ் (அலை) அவர்களின் சிறப்புகள்...

நபியூஸூஃப்(அலை)அவர்களின் சிறப்பு

1538. (நபி(ஸல்) அவர்களிடம்) 'இறைத்தூதர் அவர்களே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், 'மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுபவர் தான்'' என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், 'நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை'' என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான இறைத்தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான இறைத்தூதர் (யஅகூப்) உடைய மகனான இறைத்தூதர் யூசுஃப் அவர்கள் தாம்!'' என்று பதிலளித்தார்கள் அதற்கு மக்கள், நாங்கள் தங்களிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை'' என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், 'அரபுகளின் (பரம்பரையான) கரங்களைப் பற்றியா கேட்கிறீர்கள்? அவர்களில் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) சிறந்தவர்களாயிருந்தவர்கள் தாம் இஸ்லாத்திலும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 3353 அபூ ஹுரைரா(ரலி).


20:13 நபி யூனுஸ் (அலை) அவர்களின் சிறப்பு
1536. ஒருவர், (என்னைப் பற்றி) நான் யூனுஸ் இப்னு மத்தா அவர்களை விடச்சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3416 அபூஹுரைரா (ரலி).



1537. நான் யூனுஸ் இப்னு மத்தாவை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ('யூனுஸ் இப்னு மத்தா - மத்தாவின் மகன் யூனுஸ்' என்று) யூனுஸ் (அலை) அவர்களை அவர்களின் தந்தையுடன் இணைத்து நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
புஹாரி : 3413 இப்னு அப்பாஸ் (ரலி).

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சிறப்புகள்...

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சிறப்புகள்...

1529. இப்ராஹீம் (அலை) அவர்கள், தம் எண்பதாவது வயதில் 'கத்தூம்' (எனும் வாய்ச்சி'யின்) மூலமாக விருத்த சேதனம் செய்தார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3356 அபூஹுரைரா (ரலி).

1530. (இறந்துவிட்டவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால் நாமே இப்ராஹீம(அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (எனவே, சந்தேகப் பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை. திருக்குர்ஆனின் படி,) இப்ராஹீம் (அலை) அவர்கள், 'என் இறைவா! நீ இறந்தவர்களை எப்படி உயிராக்குகிறாய் என்று எனக்குக் காட்டு'' என்று கேட்போது அல்லாஹ்? 'நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?' என்றுகேட்டான். அவர்கள், 'ஆம்; (நம்பிக்கை கொண்டுள்ளேன்.) ஆனாலும், என் உள்ளம் நிம்மதியடை வதற்காக இப்படிக் கேட்டேன்'' என்று பதிலளித்தார்கள். லூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக! அவர்கள் வலுவான ஓர் ஆதரவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் சிறையில் கழித்த அளவிற்கு நீண்ட காலத்தை நான் கழிக்க நேர்ந்திருந்தால் (விடுதலையளிக்க அழைத்தவரிடம் (அவரின் அழைப்பை ஏற்று விடுதலையாகிச் செல்ல) ஒப்புக் கொண்டிருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3372 அபூஹுரைரா (ரலி).

1531. இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத்தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை: 1. (அவரை இணைவைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது,) 'நான் நோயுற்றிருக்கிறேன்'' என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும். 2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு மக்கள், 'இப்படிச் செய்தது யார்?' என்று கேட்டபோது,'ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது'' என்று கூறியதுமாகும். 3. (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு:) ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) 'இங்கு ஒருவர் வந்திருக்கிறார்: அவருடன் அவரின் அழகான மனைவியும் இருக்கிறாள்'' என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் சாரா (அலை) அவர்களை யார் அந்தப் பெண் எனக்கேட்க இப்ராஹீம் (அலை)அவர்கள் இவள் என் சகோதரி என்று கூறி ஸாரா (அலை) அவர்களிடமும் அவனிடம் அவ்வாறே பதிலளிக்க கூறினார். அவன் ஸாரா (அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா (அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா (அலை) அவர்களிடம்), 'அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குக் தீங்கு செய்ய மாட்டேன்'' என்று சொன்னான். உடனே, சாரா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாவது முறையாக அவர்கள் அணைக்க முயன்றான். முன்பு போன்றே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், 'எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்'' என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, 'நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக்கொண்டு வரவில்லை. ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள்'' என்று சொன்னான். பிறகு, ஹாஜிரா அவர்களை, சாரா (அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா (அலை) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து,'என்ன நடந்தது?' என்று கேட்டார்கள். அவர், 'அல்லாஹ் நிராகரிப்பாளனின் அல்லது தீயவனின் சூழ்ச்சியை முறியடித்து, அவன் மீதே திருப்பி விட்டான். ஹாஜிராவைப் பணிப்பெண்ணாக அளித்தான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'.'(அபூஹுரைரா (ரலி) கூறினார்:) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜிரா)தான் உங்களின் தாயார்.
புஹாரி : 3358 அபூஹூரைரா (ரலி).

நபி ஈஸா (அலை)அவர்கள் சிறப்புகள்

நபி ஈஸா (அலை)அவர்கள் சிறப்புகள் ....

1526. நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் - இறைத் தூதர்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் - எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3442 அபூஹுரைரா (ரலி).

1527. 'ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவரின் மகனையும் தவிர' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு பிறகு, 'நான் இக்குழந்தைக்காகவும் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்னும் (மர்யமுடைய தாய் செய்த பிரார்த்தனையை கூறும் - என்ற 3:36-வது) இறைவசனத்தை ஓதுவார்கள்.
புஹாரி : 3431 ஸயீத் பின் அல் முஸய்யப் (ரலி).

1528. மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்கள், ஒருவர் திருடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவனிடம், 'நீ திருடினாயா'' என்று கேட்டார்கள். அதற்கு அவன், 'இல்லை எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அவன் மீதாணையாக!'' என்று பதிலளித்தான். உடனே ஈஸா (அலை) அவர்கள், 'அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டு, என் கண்ணை நம்ப மறுத்தேன்'' என்று கூறினார்கள்.
புஹாரி :3444 அபூஹுரைரா (ரலி).

முஸ்லீம்களில் பெருங்குற்றம் புரிந்தவர்

முஸ்லீம்களில் பெருங்குற்றம் புரிந்தவர்

1521. 'தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்வி ஒருவர் கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது தடை செய்யப்பட்டு விடுமானால் அவர்தாம் முஸ்லிம்களிலேயே பெருங்குற்றம் புரிந்தவராவார்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :7289 ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி).

1522. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், 'நான் அறிகிறவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்'' என்று குறிப்பிட்டார்கள்.அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒருவர், 'என் தந்தை யார்?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'இன்னார்'' என்று கூறினார்கள். அப்போதுதான் 'இறைநம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 05:101 வது) இறைவசனம் அருளப்பட்டது.
புஹாரி:4621 அனஸ் (ரலி).

1523. நபித்தோழர்கள் (சிலர்) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், (அவர்களுக்குப் பிடிக்காத) சில விஷயங்கள் குறித்து வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதனால் கோபமடைந்த நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி, '(நான் அறிகிறவற்றை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்.) இன்று நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி நான் உங்களுக்குத் தெளிவுபடுத்தாமல் இருக்கப் போவதில்லை'' என்றார்கள். அப்போது நான் வலப் பக்கமும் இடப் பக்கமும் திரும்பிப் பார்க்கத் தலைப்பட்டபோது அங்கிருந்த ஒவ்வொரு வரும் தம்தம் ஆடையால் தம் தலைகளைச் சுற்றிப் போர்த்தியவாறு அழுதுகொண்டிருந்தார்கள். இந்நிலையில் ஒருவர் தம் தந்தையல்லாத மற்றொருவரின் மகன் என தாம் அழைக்கப்படுவது குறித்துச் சிலருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை யார்?' என்று கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'ஹுதாஃபா (தாம் உன் தந்தை)'' என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்களின் சாந்த முகத்தில் கோபத்தின் ரேகை படர்வதைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள், 'நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதராகவும் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். சோதனைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்'' என்று கூறலானார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'நன்மையிலும் தீமையிலும் இன்றைய தினத்தைப் போன்று எந்த நாளையும் நான் ஒருபோதும் கண்டதில்லை. எனக்கு சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. அவற்றை (மிஹ்ராபின்) இந்த சுவருக்கு அப்பால் கண்டேன்'' என்றார்கள்.
புஹாரி :6362 அனஸ் (ரலி).


1524. 'நபி (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காத பல விஷயங்கள் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களிடம் அது பற்றி அதிகமாகக் கேள்விகள் தொடுக்கப்பட்டபோது கோபப்பட்டார்கள். பின்னர் மக்களிடம் 'நீங்கள் நாடிய எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்' எனக் கூறினார்கள். அப்போது ஒருவர். 'யார் என்னுடைய தந்தை?' என்று கேட்டதற்குவர்கள் 'ஹுதாபாதான் உம்முடைய தந்தை' என்றார்கள். உடனே வேறொருவர் எழுந்து 'என்னுடைய தந்தை யார்? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்க 'உம்முடைய தந்தை ஷைபா என்பவரிடம் அடிமையாயிருந்த சாலிம் என்பவர் தாம்' என்றார்கள். (இக் கேள்விகளின் மூலம்) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் தென்பட்ட (கோபத்)தைக் கண்ட உமர் (ரலி) 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மெய்யாகவே மகத்துவமும், கண்ணியமும் மிக்க இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்' என்றார்கள்''.
புஹாரி : 92 அபூ மூஸா (ரலி).

1525. (எனக்குப் பின்) உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது என்னைக் காண்பது உங்கள் மனைவி மக்கள், செல்வம் ஆகியன (உங்களுடன்) இருப்பதை விடவும் உங்களுக்கு மிகப் பிரியமானதாயிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி: 3589 அபூஹூரைரா (ரலி).

நோன்பு உங்களைத் தூய்மையுடையோராக்கலாம்!

முன்னுரை
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்
எல்லாப் புகழும் ஏக வல்லவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே! அவனுடைய அன்பும் அருளும் உலகத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட நம் உயிரிலும் மேலான, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார், தோழர்கள், அவர்களைப் பின் தொடர்ந்த தாபியீன்கள், நல்லடியார்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய கடமைகளில் ஒன்று ரமளான் மாதத்தின் நோன்பாகும். இம்மாதத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விளக்கமாக கூறியிருக்கின்றார்கள். அதன்படி நாமும் நடந்தால் இம்மாதத்தின் நலன்களைப் பெற்று நன்மக்களாகலாம். இந்த உயரிய நோக்கோடு இச்சிறு புத்தகத்தை நான் எழுதியுள்ளேன். ஆகவே இதைப் படித்து ரமளான் மாதத்தின் மூலம் அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்றவர்களாகுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனின் அருளையும், பிழைப்பொறுப்பையும் தந்து, சுவர்க்கத்தில் நுழையும் வாய்ப்பையும், நரக வேதனையிலிருந்து பாதுகாப்பையும் தந்தருள்வானாக!
அன்புடன்,கே.எல்.எம்.இப்ராஹீம் (மதனீ)

1. ரமளான் மாதத்தின் நோன்பை நோற்பது கடமை

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

1) இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து! அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்பது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

விளக்கம்: ரமளான் மாதத்தின் நோன்பு முஸ்லிமான புத்தியுள்ள, வயது வந்த ஆண் பெண் ஒவ்வொருவருக்கும் கடமையாகும். ஆனால் சிலருக்கு நோன்பை விடுவதற்கு அனுமதியிருக்கிறது. நோன்பை விடுவதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் எனும் தலைப்பில் இதன் விபரங்களை பார்க்கவும்.

2. ரமளான் மாதத்தின் சிறப்புகள்
1) ரமளான் மாதம் வந்து விட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் “நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதீ, இப்னுமாஜா)
3) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்ப்பவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
4) நோன்பு மாதத்தில் உம்ராச் செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும். ஆகவே நோன்பில் உம்ரா செய்து கொள் என ஒரு அன்சாரிப் பெண்ணுக்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
5) ரமளான் (மாதம்) வந்துவிட்டால் அருள்களின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. இன்னும் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
விளக்கம்: ஒவ்வொரு வருடத்திலும் அல்லாஹுதஆலா பல விஷேச தினங்களை ஏற்படுத்தி அவற்றில் செய்யும் நல்அமல்களுக்கு பன் மடங்கு நன்மைகளைத் தருகின்றான். அப்படிப்பட்ட நாட்களைக் கொண்டது தான் ரமளான் மாதமும். இதில் செய்யும் நன்மைகளுக்கு அதிக கூலிகள் கொடுக்கப்படுகின்றன. மற்ற மாதங்களில் செய்யும் அமல்களை விட இம்மாதத்தில் நபி(ஸல்)அவர்கள் அதிகமான அமல்களைச் செய்வார்கள். இம்மாதத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது. அல்லாஹ்வின் அருள் இறங்குகின்றது, நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கின்றது; அல்லாஹ் பாவங்களை மன்னிக்கின்றான். “யார் இம்மாதத்திலும் அல்லாஹ்விடம் பிழை பொறுப்புத் தேடவில்லையோ அவன் நாசமாகட்டும்“ என ஜிப்ரயீல்(அலை) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நபி(ஸல்)அவர்கள் அதற்கு ஆமீன் சொன்னார்கள். இன்னும் யார் இம்மாதத்தின் நன்மையை இழந்தானோ அவன் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே யாரெல்லாம் இம்மாதத்தை அடைந்தீர்களோ இதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதி நன்மைகளை அதிகம் செய்யுங்கள்! இன்னும் செய்த தவறுகளுக்காக பாவமன்னிப்பும் தேடுங்கள், அல்லாஹ் நம் அனைவரையும் அவனின் அருளையும் பாவமன்னிப்பையும், நரக விடுதலையையும் பெற்றவர்களாக ஆக்குவானாக!

3. ரமளான் நோன்பின் சிறப்புகள்

1) “நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும்” ஆகவே நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் உடலுறவு கொள்ளக் கூடாது. இன்னும் இஸ்லாத்துக்கு மாற்றமான செயல்களையும் செய்யக் கூடாது. யாராவது சண்டையிட்டால் அல்லது ஏசினால் “நிச்சயமாக நான் நோன்பாளி, நான் நோன்பாளி“ என்று கூறிக்கொள்ளட்டும். என் உயிர் எவனிடம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணையாக நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாகும். இவ்வாறு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) நோன்பு நோற்றவன் தன் உணவையும், குடிபானத்தையும், இச்சையையும் எனக்காகவே விட்டுவிடுகிறான். நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மைகளை வழங்குவேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
3) சுவர்க்க வாசல்களில் ஒன்றுக்கு “அர்ரய்யான்“ என்று சொல்லப்படும். மறுமை நாளில் அவ்வாசலில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள். “நோன்பாளிகள் எங்கே“ என்று அழைக்கப்படும். அப்போது நோன்பாளிகள் எழுந்து அவ்வாசல் வழியாக நுழைவார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் மூடப்படும். அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாசலில் நுழையமாட்டார்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
4) நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யும் எல்லா அமல்களுக்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்காக (கூலி) கொடுக்கப்படுகின்றது. அது(நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். (காரணம்) அவனுடைய இச்சையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகின்றான். நோன்பு திறக்கும்போதும், இன்னும் அவனுடைய இறைவனை சந்திக்கும் போதும் ஆகிய இரு சந்தோஷங்கள் நோன்பாளிக்கு இருக்கின்றன. நிச்சயமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாயிருக்கும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
விளக்கம்: வணக்கங்களை அல்லாஹ் நம்மீது கடமையாக்கியது நாம் அல்லாஹ்விற்கு, கட்டுப்படுகின்றோமா இல்லையா? என்பதை சோதனை செய்வதற்குத்தான். வணக்கங்களை நாம் செய்வதினாலோ, அல்லது விடுவதினாலோ அல்லாஹ்விற்கு எந்த லாபமோ, நஷ்டமோ கிடையாது. இன்னும் அல்லாஹ் ஒவ்வொரு வணக்கத்தைக் கடமையாக்குவதின் மூலமாக “எப்படிப்பட்ட தியாகத்தையும் அல்லாஹ்விற்காக நாம் செய்யத் தயாராக இருக்கின்றோமா” என்பதைச் சோதிப்பதற்குத்தான். அப்படிச் செய்பவர்களுக்கு கூலியாக மறுமையில் சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான். இந்த வணக்கங்களின் வரிசையில் உள்ளதுதான் நோன்பு. நோன்பைப் பொறுத்தவரையில் மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கும் முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வது, இவைகளை வெறும் சடங்குக்காகச் செய்யக்கூடாது. வணக்கம் என்ற எண்ணத்தோடு செய்ய வேண்டும். நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வது தான்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு(நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று)பயபக்தியுடையவர்களாகலாம். (அல்குர்ஆன் 2:183)
தக்வா(இறையச்சம்)என்றால் அல்லாஹ்விற்கு பயந்து, அவன் ஏவியவைகளைச் செய்தும் தடை செய்தவைகளைத் தவிர்த்தும் நடப்பதுதான். “தக்வாவின் உரிய தோற்றத்தை” நோன்பு நமக்கு கற்றுக் கொடுக்கின்றது. நோன்பாளி யாருக்கும் தெரியாத இடத்தில் தனிமையில் இருக்கும்போதும் பசியுள்ளவனாக இருந்தும் தன்னிடமுள்ள உணவை உண்பதில்லை. தாகமுள்ளவனாக இருந்தும் எதையும் குடிப்பதில்லை. இச்சை இருந்தும் அதை நிறைவேற்றுவதில்லை. இதற்கெல்லாம் காரணம் நான் தனிமையில் இருந்தாலும் இந்த நோன்பை கடமையாக்கிய அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணத்தினால்தான். இதுதான் ”இறையச்சத்தின் உண்மையான தோற்றமாகும்”". இத்தன்மை நோன்போடு முடிந்துவிடக்கூடாது. வாழ்க்கை முழுவதிலும் ஒவ்வொரு வினாடியும் இதே எண்ணத்தோடு ஒவ்வொரு முஸ்லிமும் வாழவேண்டும். இந்த எண்ணத்தோடு வாழ்ந்தால் தான் தொழாதவர் ஏன் தொழவில்லை? இத்தொழுகையைக் கடமையாக்கிய இறைவன் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று நினைத்து தொழ ஆரம்பித்து விடுவார். பாவங்களில் ஈடுபடக்கூடியவர் அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவன் என்னைத் தண்டிப்பான் என்று நினைத்து அதை விட்டுவிடுவார். இதனால்தான் அல்லாஹ் குர்ஆனின் பல இடங்களில் ஈமான் கொண்டவர்களே அல்லாஹுவைப் பயந்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றான். ஆகவே அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது(ஸல்)அவர்களும் ஏவியதில் முடியுமானவைகளைச் செய்தும், தடை செய்தவைகளை முற்றிலுமாக தவிர்ந்து நடப்பதற்கு உறுதியான முடிவெடுங்கள், அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!
நோன்பில் இந்த உயரிய பண்பு இருப்பதினால்தான் அல்லாஹ் அதனை ஒரு தனிப்பட்ட வணக்கமாகக் கூறுகின்றான். ஹதீதுல் குத்ஸியில் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள், “நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யக்கூடிய எல்லா வணக்கங்களும் அவனுக்குரியதே” அது (நோன்பு)எனக்குரியது, அதற்கு நானே கூலிகொடுக்கின்றேன், (காரணம்)அவன் தன் இச்சையையும், உணவையும், குடிபானத்தையும் எனக்காகவே விட்டுவிடுகின்றான். எல்லா வணக்கங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. அவனே எல்லா வணக்கங்களுக்கும் கூலி கொடுக்கின்றான். அப்படி இருந்தும் நோன்பை மட்டும் அல்லாஹ் தனித்துவப்படுத்திச் சொல்வதற்குக் காரணம், அது உண்மையான இறையச்சத்தோடும், இக்லாஸ்(மனத் தூய்மை) உடனும் நோற்கப்படுவதினால் தான். எனவே நோன்பு விஷயத்தில் அல்லாஹ்விற்கு நாம் அஞ்சுவது போன்று மற்ற எல்லா விஷயங்களிலும், எல்லாக் காலங்களிலும் அல்லாஹ்வை அஞ்சிவாழ்வோமாக..!
யார் நோன்பை இந்த உயரிய நோக்கமின்றி வெறும் சடங்குக்காக நோற்கின்றாரோ அதில் எந்தவித பிரயோஜனமும் இல்லை. யார் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டு விடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
பசியோடும், தாகத்தோடும் இருப்பது மாத்திரம் நோன்பாகாது. இவைகளைக் கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லாப் பாவங்களையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ரமளான் மாதம் இஸ்லாம் கூறக்கூடிய எல்லா நற்செயல்களையும் ஞாபகப்படுத்தக்கூடிய ஒரு மாதமாகும். தொழாதவர்கள் தொழ ஆரம்பித்து விடுகின்றனர். தர்மமே செய்யாதவர்கள் தர்மம் செய்கின்றனர். உம்ராச் செய்யாதவர்கள் உம்ராச் செய்கின்றனர். குர்ஆன் ஓதாதவர்கள் ஓத ஆரம்பித்துவிடுகின்றனர். தவறான செயல்களில் ஈடுபட்டவர்கள் அதை நிறுத்திக் கொள்கின்றனர். இன்னும் இது போன்ற பல நல்ல செயல்களையும் கற்றுத்தருகின்றது இந்த நோன்பு. ஏன் இந்த நல்ல பண்புகளை நோன்பு அல்லாத மாதங்களிலும் தொடரக்கூடாது? நோன்பு மாதத்தில் எந்த இறைவனை அஞ்சி இந்த நல்ல செயல்களில் ஈடுபட்டோமோ அவன் நோன்பு அல்லாத மாதங்களில் நம்மைக் கண்காணிப்பதில்லையா? நோன்பு அல்லாத மாதங்களில் நாம் மரணிப்பதற்கு வாய்ப்பில்லையா? ஏன் நோன்பு மாதத்தோடு இந்த நல் அமல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்? சிந்தியுங்கள்! விடை கிடைக்கும். நல் அமல்களை, தொடர்ந்து செய்வதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக…!

4. பிறை கண்ட பின்பே நோன்பும் பெருநாளும்

1) பிறையைக் காணாத வரை நீங்கள் நோன்பு நோற்கவும் வேண்டாம், நோன்பை விடவும் வேண்டாம். பிறை தெரியாமல் மேகம் மறைத்துவிட்டால்(அம்)மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) பிறையைக் கண்டே நோன்பு நோறுங்கள், நோன்பை விடவும் செய்யுங்கள். மேகம்(பிறையை) மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
விளக்கம்: ரமளான் மாதத்தின் ஆரம்பத்தையும், முடிவையும் தெரிந்து கொள்வதற்கு பிறைதான் அடையாளமாகும். ஆனால் மேகம் தெளிவில்லாமல் இருந்து ரமளான் மாதத்தின் பிறை தென்படவில்லையானால் நோன்பு மாதத்துக்கு முந்திய ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக கணக்கிட்டு அதற்கு அடுத்த நாள் ரமளான் நோன்பை நோற்க வேண்டும். காரணம் சந்திர மாதத்தில் முப்பது நாளை விட அதிகமாக ஒரு மாதமும் வரமுடியாது. “முப்பது நாட்களாகவும் இருபத்தி ஒன்பது நாட்களாகவும் தான் மாதம் வரும் என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.”

5. சந்தேகமான நாட்களில் நோன்பு நோற்கக்கூடாது

1) ரமளான் மாதத்தை விட ஒரு நாள் அல்லது இரண்டு நாளைக்கு முன்னால் உங்களில் யாரும்(சுன்னத்தான) நோன்பு நோற்கக்கூடாது. வழமையாக அந்த நாளில் நோன்பு நோற்பவர் நோற்றுக் கொள்ளட்டும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
விளக்கம்: ரமளான் மாதத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் சுன்னத்தான எந்த நோன்பையும் நோற்கக்கூடாது. காரணம் அந்த இரு நாட்களும் ரமளான் மாதமாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது. இதற்கு “சந்தேக நாட்கள்“ என்று சொல்லப்படும். உதாரணமாக ஒவ்வொரு வாரத்திலும் திங்கள், வியாழன் இரு நாட்களும் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். இந்த இரு நாட்களில் வழமையாக நோன்பு நோற்று வருபவருக்கு ரமளான் மாதத்துக்கு முந்திய ”சந்தேகமான நாட்களிலும்” நோன்பு நோற்க அனுமதியுள்ளது.

6. ஸஹர் உணவு உண்பதின் சிறப்பு

1) ஸஹர் செய்யாமலும், நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாம் என நபி(ஸல்)அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே? என ஸஹாபாக்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றல்ல, எனக்குக் குடிக்கவும், உணவும் கொடுக்கப்படுகின்றது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். இன்னும் சில அறிவிப்பில்: என் இறைவன் எனக்கு உணவளிக்கின்றான்; மேலும் பானமும் புகட்டுகின்றான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) ஸஹர் உணவை உண்ணுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவில் அல்லாஹ்வின் அருள் இருக்கின்றது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
3) நபி(ஸல்)அவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நபித்தோழர் நுழைந்தார். ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்களித்த அருளாகும். அதை விட்டு விடாதீர்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
4) நீங்கள் ஸஹர் உணவை உண்ணுங்கள். அது அருள் நிறைந்த உணவாகும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
5) நமது (முஸ்லிம்களின்) நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் நோன்புக்கும் உள்ள வித்தியாசம் ”ஸஹர் உணவு உண்பதுதான்” என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
விளக்கம்: ஸஹர் உணவென்பது நோன்பு நோற்பதற்காக இரவின் கடைசிப்பகுதியில் உண்ணும் உணவாகும். நோன்பு நோற்பவர் இந்த உணவை உண்பது “வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்”. இதனால் நோன்பாளி நோன்பைச் சிரமமின்றி நோற்பதற்கு வாய்ப்புள்ளது. ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் தொடர் நோன்பு நோற்பதை நபி(ஸல்)அவர்கள் தடுத்துள்ளார்கள். இன்னும் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் நோற்கும் நோன்பிற்கும் நாம் நோற்கும் நோன்பிற்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் ஸஹர் உணவு உண்பதுதான். அவர்கள் ஸஹர் உண்ணாமலேயே நோன்பு நோற்பார்கள். ஆகவே அல்லாஹ் நமக்களித்த அருளைப் பெற்று நபிமார்களின் சுன்னத்தைக் கடைபிடிப்போமாக..!

7. ஸஹர் உணவை தாமதப்படுத்துதல்

1) நான் நபி(ஸல்)அவர்களுடன் ஸஹர் உணவு உண்டேன். பின்பு தொழுகைக்காக நபியவர்கள் எழுந்து சென்று விட்டார்கள் என ஸைத் இப்னு ஸாபித்(ரலி)அவர்கள் கூறினார்கள். (ஸுப்ஹுடைய) பாங்குக்கும் ஸஹர் உணவுக்கும் மத்தியில் எவ்வளவு இடைவெளி இருந்தது என அனஸ்(ரலி)அவர்கள் கேட்டதற்கு ஐம்பது ஆயத்து ஓதும் அளவென்று விடையளித்தார்கள். (ஆதாரம்: புகாரி)
விளக்கம்: ஸஹர் உணவை இரவின் கடைசிப்பகுதி வரை, பிற்படுத்துவது சுன்னத்தாகும், அதாவது ஸஹர் உணவுக்கும் ஸுப்ஹுடைய பாங்குக்கும் மத்தியில் ஐம்பது ஆயத்து ஓதுவதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுமோ அவ்வளவு நேரம் பிற்படுத்த வேண்டும். இதுவே நபிவழியாகும். ஆனால் ஃபஜ்ருடைய நேரம் வந்த பின்(அதாவது ஸுப்ஹுடைய பாங்கு சொல்லப்பட்டதும்) உண்ணவோ குடிக்கவோ கூடாது.

8. குளிப்பு கடமையான நிலையில் நோன்பு

1) நபி(ஸல்)அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் பஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
விளக்கம்: நோன்பு நோற்பதற்கு முன் அதாவது இரவில் ஒருவர் முழுக்காளியாக இருந்து ஸப்ஹுடைய பாங்குக்குப் பின் குளிப்பதில் எந்த குற்றமுமில்லை. அந்த நோன்பு பரிபூரணமானதுதான். அதே போல் பகல் நேரத்தில் நோன்பு நோற்றவர் தூக்கத்தினால் குளிப்பு கடமையாகிவிட்டால் குளித்துக் கொண்டால் மாத்திரம் போதும். ஆனால் வேண்டுமென்றே ஒருவர் நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் முழுக்காளியாவது அல்லாஹ்விடத்தில் பெரும் குற்றமாகும். அது நோன்பையும் முறித்துவிடும்.

9. நோன்பை விட அனுமதிக்கப்பட்டவர்கள்

أَيَّامًا مَعْدُودَاتٍ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنتُمْ تَعْلَمُونَ. شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنْ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمْ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمْ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمْ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்கவேண்டும். எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக ஃபித்ராவாக ஒரு மிஸ்கீனுக்கு(ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். இன்னும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது. ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). ரமளான் மாதம் எத்தகைய தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (மழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களில் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). அல்குர்ஆன் 2:184,185)
1) ஹம்ஸா இப்னு அம்ருல் அஸ்லமி என்னும் நபித்தோழர் நான் பிரயாணத்தில் நோன்பு நோற்கலாமா? என நபி(ஸல்)அவர்களிடத்தில் கேட்டார்கள். (அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார்) நீங்கள் விரும்பினால் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் விரும்பினால் நோன்பை விட்டுவிடுங்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
2) நாங்கள் நபி(ஸல்)அவர்களுடன் ஒரு யுத்தத்துக்குச் சென்றிருந்தோம். எங்களில் நோன்பு நோற்றவர்களும் நோன்பை விட்டவர்களும் இருந்தனர். நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை கூறவில்லை. யாருக்கு சக்தி இருக்கின்றதோ அவர் நோன்பு நோற்பது அவருக்குச் சிறந்ததென்றும், யாருக்கு அதற்கு சக்தி இல்லையோ அவர் நோன்பை விடுவது சிறந்ததென்றும் அவர்கள் கருதினார்கள் என அபூ சயீதுல் குத்ரி(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
3) நபி(ஸல்) அவர்கள் ஒரு பிரயாணத்தின் போது நிழலிலே ஒருவரைச் சூழ்ந்து மக்கள் கூடியிருப்பதைக் கண்டு இந்த உங்களின் நண்பருக்கு என்ன ஏற்பட்டு விட்டது? என கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர் நோன்பாளி என கூறினார்கள். பிரயாணத்தில் நோன்பு நோற்பது நல்ல செயலில்லை. அல்லாஹ் உங்களுக்கு அளித்த அனுமதியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
இன்னும் ஒரு அறிவிப்பில் ஒரு மரத்தின் நிழலிலே ஒருவர் மீது தண்ணீர் தெளிக்கப்படுவதை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். ஆதாரம்: நஸயீ
4) நபி(ஸல்) அவர்களுடன் கோடைகாலத்தில் நாங்கள் ஒரு பிரயாணம் செய்தோம். எங்களில் நோன்பு நோற்றவர்களும் நோன்பு நோற்காதவர்களும் இருந்தார்கள். நாங்கள் (வெப்பத்தின் காரணமாக அப்பிரயாணத்திலே) நிழலில் உட்கார்ந்தோம். நோன்பு நோற்றவர்கள்(களைத்து) விழுந்துவிட்டார்கள். நோன்பில்லாதவர்கள் எழுந்து பிரயாணிகளுக்குத் தண்ணீர் புகட்டினார்கள். இதைப் பார்த்த நபியவர்கள் ”நோன்பில்லாதவர்கள் இன்று அதிக நன்மை பெற்றுவிட்டார்கள்” எனக் கூறினார்கள். ஆதாரம்: நஸயீ
5) நிச்சயமாக அல்லாஹ் பிரயாணிக்கு தொழுகையில் பாதியையும்(அதாவது நாலு ரக்அத் தொழுகையை இரண்டு ரக்அத்தாக சுருக்குவதற்கும்) நோன்பை விடுவதற்கும் பாலூட்டும் தாய்க்கும் நோன்பை விடுவதற்கு அனுமதித்து விட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்;: நஸயீ
6) மக்கா வெற்றி பெற்ற வருடம் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றவர்களாக நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். கதீத் என்னும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டுவிட்டார்கள். ஆதாரம்: முஸ்லிம்
7) கோடைகாலத்தின் போது நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் சென்றிருந்தோம். ஒரு மனிதர் தன் தலைக்கு மேல் கையை வைக்கும் அளவுக்கு அந்த சூடு இருந்தது. எங்களில் நபியவர்களையும், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களையும் தவிர வேறு யாரும் நோன்பு நோற்கவில்லை என அபூதர்தா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
விளக்கம்: ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது முஸ்லிமான புத்தியுள்ள, வயதுவந்த ஆண், பெண் ஒவ்வொருவருக்கும் கடமையாகும். ஆனால், பிரயாணி, நோயாளி, கர்ப்பிணிப்பெண், பாலூட்டும் தாய், நோன்பு நோற்க இயலாத வயோதிகர்கள், நோயிலிருந்து குணமாவதற்கு வாய்ப்பில்லாத நோயாளிகள் இவர்களுக்கு நோன்பை விடுவதற்கு அனுமதி உண்டு. ஆனால் பிரயாணி தன் பிரயாணத்தை முடித்துக் கொண்டதும் நோயாளியின் நோய் குணமானதும் விட்ட நோன்புகளை நோற்க வேண்டும். கர்ப்பிணிப்பெண் மற்றும் பாலூட்டும் தாய் இவ்விருவரும் நோன்பு நோற்பதினால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதும் ஆபத்து ஏற்படுமென்று பயந்தால் நோன்பை விட்டுவிடலாம், இவர்களும் குழந்தையை பெற்றெடுத்ததற்குப் பிறகு அல்லது பாலூட்டியதற்குப் பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். நோன்பு நோற்கவே முடியாத வயோதிகர்கள் மற்றும் நோய் குணமாவதற்கு வாய்ப்பில்லாத நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு வீதம் உணவளித்தால் போதும்; விடுபட்ட நோன்புகளை நிறைவேற்ற வேண்டியதில்லை. அல்லாஹ் நன்கறிந்தவன்.

10. நோன்பு நேரத்தில் தவறிலிருந்து விலகி இருத்தல்

1) யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
2) எத்தனையோ நோன்பாளிகள் அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை, இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர் இரவில் கண்விழித்திருப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றிருப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: நஸயீ, இப்னுமாஜா
3) உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடல் உறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் “நோன்பாளி” என்று கூறிக்கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
விளக்கம்: நோன்பு நோற்பதென்பது வெறும் பசி, தாகத்தோடு இருப்பது மட்டுமல்ல, பசி தாகத்தை கட்டுப்படுத்துவதைப் போல மற்ற எல்லாத் தவறுகளையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். யார் நோன்புநோற்றுக் கொண்டு தவறான பேச்சுக்கள் இன்னும் தவறான செயல்களைச் செய்கின்றாரோ அவர் பசித்திருந்ததையும் தாகித்திருந்ததையும் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளமாட்டார். ஆகவே நோன்பு மாதத்தில் எல்லாத் தவறுகளையும் விட்டுவிடுங்கள். ஆனால் இன்று நோன்பு காலத்தில்தான் நோன்பு நோற்றவர்கள் இரவெல்லாம் வீணாக விழித்திருந்து சுப்ஹு தொழுகையின்றி தூங்கிவிடுகிறார்கள். இன்னும் சிலரோ பகலையெல்லாம் தூக்கத்திலேயே கழித்து, தொழுகைகளை விட்டு விடுகின்றார்கள். அல்லாஹ் நம்மீது நோன்பைக் கடமை யாக்கியது நாம் பாவங்களைச் செய்வதற்கும் ஃபர்லான தொழுகைகளை விடுவதற்குமா? நிச்சயமாக இல்லை! நாம் எல்லாப் பாவங்களையும் விட்டு தொழுகைகள் மற்றும் நல்அமல்களைச் செய்வதற்குத்தான் அல்லாஹ் அம்மாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றான். ஆகவே தவறுகளை முற்றாக விட்டு தொழுகைகளை உரிய நேரத்தில் தொழுது எல்லா நல்அமல்களையும் செய்யுங்கள், அல்லாஹ் நம் அனைவருக்கும் எல்லா தவறுகளையும் முற்றாக விடுவதற்கு வாய்ப்பளிப்பானாக!

11. நோன்பாளி மறதியாக சாப்பிட்டால் குடித்தால்

1) (யாராவது) மறந்துபோய் சாப்பிட்டால் அல்லது குடித்தால் அவர் அவருடைய நோன்பை பரிபூரணப்படுத்தட்டும், நிச்சயமாக அல்லாஹ்தான் அவரை சாப்பிடவும், குடிக்கவும் வைத்தான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
விளக்கம்: யாராவது நோன்பு நேரத்தில் மறதியாக சாப்பிட்டால் அல்லது குடித்தால் குற்றமில்லை. ஞாபகம் வந்ததும் சாப்பிடுவதை குடிப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும். அவருடைய நோன்பு பரிபூரணமானதே. யார் வேண்டுமென்றே சாப்பிடுகின்றாரோ அல்லது குடிக்கின்றாரோ அவரின் நோன்பு முறிந்துவிடும், இன்னும் அது பெரும் குற்றமாகும். அந்த நோன்பைப் பிறகு நோற்க வேண்டும்.

12. நோன்பாளி குளிப்பதில் தவறில்லை

1) நபி(ஸல்) அவர்கள் (உடலுறவின் காரணமாக) முழுக்கான நிலையில் பஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
2) நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டிருக்கும் போது வெப்பம் அல்லது தாகத்தின் காரணமாக தன் தலைமீது தண்ணீரை ஊற்றியதாக சில நபித்தோழர்கள் மூலமாக அபூபக்ர் இப்னு அப்துர்ரஹ்மான்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத், முஅத்தா, அபூதாவூத்
3) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது ஈரத்துணியை தன்மீது போடுவார்கள். ஆதாரம்: புகாரி
விளக்கம்: தேவைப்படும் போது நோன்பாளி குளித்துக் கொள்வதில் தவறில்லை. புகாரி(ரஹ்) அவர்கள் தன் புகாரி கிரந்தத்திலே நோன்பாளி குளிக்கும் பாடம் என தலைப்பிட்டு மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களைக் கூறுகின்றார்கள்.

13. நோன்பாளி பல்துலக்குதலில் குற்றமில்லை

1) என் உம்மத்தின் மீது கஷ்டம் இல்லையென்றிருந்தால் ஒவ்வொரு முறை உளுச் செய்யும் போதும் பல் துலக்குவதற்கு நான் கட்டளையிட்டிருப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ, நஸயீ
2) நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது கணக்கிட முடியாத அளவுக்கு பல் துலக்குவதை நான் பார்த்திருக்கிறேன் என ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
3) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பகலின் ஆரம்பம் இன்னும் கடைசி நேரத்தில் பல் துலக்குவார்கள். ஆதாரம்: புகாரி
விளக்கம்: பல் துலக்குவது நபியவர்கள் மிகவும் வலியுறுத்துகின்ற நடைமுறையாகும். இதனை நோன்பிலும் நோன்பு அல்லாத காலங்களிலும் செய்துள்ளார்கள். சிலர் நோன்பு நோற்றவர் பல் துலக்குவது கூடாது, அல்லது லுஹர் நேரத்திற்குப்பின் செய்யக்கூடாது என்று கூறுவது ஆதாரமற்றதாகும்.

14. நோன்பாளியின் உளு

1) அல்லாஹ்வின் தூதரே! உளுவைப் பற்றி எனக்குக் கற்றுக்கொடுங்கள் என நபி(ஸல்)அவர்களிடத்தில் நான் கேட்டேன். உளுவைப் பரிபூரணமாகச் செய்து கொள்ளுங்கள் என கூறினார்கள். இன்னும் விரல்களுக்கு மத்தியில் கோதிக் கழுவுங்கள், நோன்பில்லாத நிலையில் மூக்குக்குத் தண்ணீர் செலுத்துவதை அதிகப்படுத்துங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என லகீத் இப்னு சபீரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ, அபூதாவூத்
விளக்கம்: நோன்புநோற்றவர் உளுச் செய்தால் நாசிக்கும் வாய்க்கும் தண்ணீர் செலுத்தும்போது அடித்தொண்டை இன்னும் அடிமூக்கு வரைக்கும் தண்ணீரைச் செலுத்தாமல் நோன்பில்லாத நேரத்தில் செய்வதை விட குறைத்துச் செய்ய வேண்டும். அடிமூக்கு அடித்தொண்டை வரைக்கும் தண்ணீரைச் செலுத்தினால் வாய்க்குள் தண்ணீர் செல்வதற்கு வாய்ப்பிருக்கின்றது.

15. நோன்பின் நிய்யத்தை பஜ்ருக்கு முன் வைப்பது அவசியம்

1) அமல்களுக்குக் கூலி கொடுக்கப்படுவது எண்ணங்களைப் பொறுத்துத்தான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
2) பஜ்ருக்கு முன்னால் யார் நிய்யத்து வைக்கவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ
விளக்கம்: நிய்யத் என்பது உள்ளத்தில் நினைப்பதற்குச் சொல்லப்படும். இன்றைய நோன்பை நோற்க வேண்டும் என்று நினைத்து ஸஹர் உணவு உண்பதே நிய்யத்தாகும். ஆனால் இன்று நிய்யத் என்ற பெயரில் சில வார்த்தைகள் (இந்த வருடத்து ரமளான் மாதத்தின் பர்ளான நோன்பை நாளைப்பிடிக்க அல்லாஹ்வுக்காக நிய்யத் வைக்கின்றேன் என்று) சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. இப்படி நபியவர்கள் செய்யவுமில்லை. சொல்லித்தரவுமில்லை. இதற்கு நிய்யத் என்று சொல்லப்படவும் மாட்டாது. மேலும், இன்றைய நோன்பை ஒருவர் நோற்க வேண்டும் என்று நிய்யத் இல்லாமல் (எண்ணமில்லாமல்) பஜ்ர் வரைக்கும் தூங்கிவிட்டால், அவருக்கு அன்றைய நோன்பை நோற்க முடியாது. காரணம் அவர் இரவில் நிய்யத் (எண்ணம்) வைக்கவில்லை. ஆனால் இன்றைக்கு நோன்பு நோற்க வேண்டும் என்று எண்ணி பஜ்ர் வரைக்கும் ஒருவர் தூங்கிவிட்டால், ஸஹர் உணவை உண்ணாவிட்டாலும் அவர் அன்றைய நோன்பை நோற்கலாம்.

16. பெருந்தொடக்குள்ள பெண்கள்

1) நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் வாழும்போது(மாதவிடாய் காரணமாக) சுத்தம் இல்லாமல் இருந்தால் (தொழவும் மாட்டோம், நோன்பு நோற்கவும் மாட்டோம்) சுத்தமானதும் நாங்கள் (விட்ட) நோன்புகளை நோற்கும்படி நபியவர்கள் எங்களுக்கு ஏவுவார்கள். ஆனால் விடுபட்ட தொழுகைகளைத் தொழும்படி ஏவமாட்டார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ
விளக்கம்: பெண்கள் மாதவிடாய் மற்றும் பிள்ளைப் பேறினால் சுத்தம் இல்லாத காலங்களில் நோன்பு நோற்கக் கூடாது, சுத்தமானதும் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். அதற்காக எந்தப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை.

17. விரைவாக நோன்பு திறப்பது சுன்னத்தாகும்

1) நோன்பு திறப்பதை, (தாமதிக்காது) அவசரப்படுத்தும் காலம் வரைக்கும் என் உம்மத்தினர் நலவிலேயே இருப்பார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
2) நானும், மஸ்ரூக் என்பாரும் ஆயிஷா(ரலி) அவர்களிடத்தில் சென்று மூஃமின்களின் தாயே! நபி(ஸல்) அவர்களின் இரு தோழர்கள் நன்மை தேடும் விஷயத்தில் குறைவு செய்வதில்லை, ஒருவர் நோன்பு திறப்பதை அவசரப்படுத்தி நேரத்தோடு தொழுதும் விடுகின்றார். மற்றவர் நோன்பு திறப்பதைப் பிற்படுத்தி தொழுகையையும் பிற்படுத்துகின்றார் என்றனர். யார் நோன்பு திறப்பதையும் தொழுகையையும் அவசரப்படுத்துகின்றார்? என ஆயிஷா(ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) என்று நாங்கள் கூறினோம். அப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
இன்னும் ஒரு அறிவிப்பில், மற்ற நபித்தோழர் அபூ மூஸா அல் அஷ்அரி(ரலி) அவர்கள் என்று வந்திருக்கின்றது. ஆதாரம்: திர்மிதீ
விளக்கம்: மஃரிப் நேரம் வந்ததும் நோன்பு திறப்பதே சுன்னத்தாகும். இன்று சிலர் மஃரிப் நேரம் வந்த பின்பும் நோன்பு திறக்காமல் பேணுதல் என்று சொல்லிக் கொண்டு சூரியன் மறைந்த பின்பும் நோன்பு திறப்பதைப் பிற்படுத்துகின்றார்கள். ஆனால் நபியவர்களோ மஃரிப் நேரம் வந்ததும் நோன்பை திறக்கச் சொல்லியிருக்கின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறியதற்கு மாறாகச் செய்வது பேணுதலாகுமா? இது இஸ்லாத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பித்அத்தாகும் என இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (பத்ஹுல் பாரி 2:235)

18. பேரீத்தம் பழத்தால் நோன்பு திறப்பது சிறந்தது

1) நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வதற்கு முன் கனிந்த பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அது இல்லையென்றால் சாதாரண சில பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அதுவும் இல்லையென்றால் சில மிடர் தண்ணீர் குடித்துக்கொள்வார்கள். ஆதாரம்: திர்மிதீ
2) உங்களில் ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு திறக்கட்டும், அது கிடைக்கவில்லையென்றால் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ, அபூதாவுத்

19. நோன்பு திறந்த பின் ஓதும் துஆ

ذَهَبَ الظَّمَأُ وَ ابْتَلَّتِ الْعُرُوقُ، وَ ثَبَتَ الأجْرُ إنْ شَاءَ اللَّهُ
தஹபள்ளமஊ வப்தல்லதில் உரூக்கு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்.
பொருள்: தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் உறுதியாகிவிட்டது. ஆதாரம்: அபூதாவூத்

20. நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்

1) நோன்பாளி நோன்பு திறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை தட்டப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: இப்னுமாஜா
2) நோன்பாளி நோன்பைத் திறக்கும் வரைக்கும், நீதியான அரசன், அநியாயம் செய்யப்பட்டவன் இம்மூவரின் பிரார்த்தனைகள் தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ
விளக்கம்: நோன்பாளி நோன்பு நேரத்தில் கேட்கும் பிரார்த்தனைகளையும், இன்னும் நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனைகளையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். ஆகவே நோன்பு காலங்களில் அதிக பிரார்த்தனைகளைச் செய்யுங்கள்.
இன்று முஸ்லிம்களில் பலர் நோன்பு திறக்கும் நேரத்தில் வீண் பேச்சுக்களிலும், வீண் வேலைகளிலும் ஈடுபடுகின்றார்கள். இப்படி இந்த சிறப்பான நேரங்களை வீணாகக் கழிக்காமல் அல்லாஹ்விடம் நமது ஈருலக வெற்றிக்காகவும், எல்லா முஸ்லிம்களுக்காகவும் பிரார்த்தியுங்கள். நமது சகல தேவைகளையும் பூர்த்தியாக்கித் தருவதற்கு அவன் போதுமானவன்.

21. நோன்பு திறக்க வைப்பதின் சிறப்புகள்

1) யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ நோன்பு நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையிலும் எதுவும் குறையாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ
விளக்கம்: நோன்பு திறக்க வைப்பது சிறந்த அமலாகும். நோன்பு திறக்க வைப்பதென்பது பெரிய அளவுக்கு உணவளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு பேரீத்தம் பழத்தைக் கொடுத்து நோன்பு திறக்க வைத்தாலும் இந்த நன்மை கிடைத்துவிடும். ஒவ்வொருவரும் அவரவரின் வசதிக்கு ஏற்றவாறு செய்து கொள்ளலாம்.

22. லைலத்துல் கத்ரின் சிறப்புகள்

إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ. وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ. لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ. تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ. سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ.

நிச்சயமாக நாம் அதை(குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க(அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும்(ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி(நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1,5)
1) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை ஏதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
2)ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
3) நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கத்ரின் இரவை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது நபியவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதைப் பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்று கூறி அது உங்களுக்கு நலமாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே அதை இருபத்தி ஒன்று, இருபத்தி மூன்று, இருபத்தி ஐந்து, இருபத்தி ஏழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப்பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
4) அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல்கத்ரின் இரவை நான் அறிந்து கொண்டால் அதில் என்ன கூறவேண்டும் என்று கேட்டேன். இவ்வாறு கூறுமாறு நபியவர்கள் கூறினார்கள்.

அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக.அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ஆதாரம்: திர்மிதீ
விளக்கம்: லைலத்துல் கத்ர் என்பது ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஒரு இரவுக்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மை கிடைக்கும் என்று அல்லாஹ் சூரத்துல் கத்ரில் கூறுகின்றான். அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மை கிடைக்கின்றது. இதனால்தான் நபி(ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப்; பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். “83 வருடம் நாம் வாழ்வோமா?“ என்பதே கேள்விக்குரியானது! ஆனால் ஒருநாள் அமல் செய்வதினால் அந்த நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகின்றான். இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட இந்தப்பத்து நாட்களில் நபியவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுவடுவார்கள். முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி(ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள் செய்திருக்கும் போது நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் எவ்வளவு அதிகமாக அமல்களில் ஈடுபட வேண்டும். சிந்தித்துப்பாருங்கள்! ஆகவே அச்சிறப்பான இரவில் தொழுகை, குர்ஆன் ஒதுவது, திக்ர் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, தர்மம் செய்வது போன்ற நற்கருமங்களை அதிகமதிகம் செய்துவிட்டு மற்ற நாட்களை விட்டுவிடக்கூடியவர்கள் நம்மில் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள். இது நல்ல முடிவல்ல. நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவைப் பற்றி சொல்வதற்காக வெளியில் வந்தார்கள். அல்லாஹ் அதை மறக்கடித்து விட்டான். ஆனால் அந்த இரவை நாம் தெரிந்து கொள்வதற்கு நபி(ஸல்) அவர்கள் சில அடையாளங்களைக் கூறினார்கள். “ரமளான் மாதத்தின் கடைசிப்பத்து நாட்களின் ஒற்றைப்படை நாட்கள்” இப்படி கூறுவதினால் “ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களில் அமல்கள் செய்யப் தேவையில்லை” என்று விளங்கிக்கொள்ளக்கூடாது. மற்ற 20 நாட்களை விட இந்த நாட்களில் அதிக அமல்களை செய்யவேண்டும் என்பதுதான்.

23. இஃதிகாஃப்

وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ
இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து(இஃதிகாஃபில்) இருக்கும்போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள். இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அதை(வரம்புகளை மீற) நெருங்காதீர்கள். இவ்வாறே (கட்டுப்பாட்டுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (அல்குர்ஆன் 2:187)
1) ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தில் நபி(ஸல்)அவர்கள் இஃதிகாஃப் இருப்பார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
2) நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரைக்கும் ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். ஆதாரம்: புகாரி
3) நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
4) (நோன்பின்) கடைசிப்பத்து வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல்செய்வார்கள். தன் குடும்பத்தையும் அமல் செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள். தன் மனைவிமார்களிலிருந்து தூரமாகி விடுவார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
விளக்கம்: இஃதிகாஃப் என்றால் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்காக பள்ளியில் தங்கியிருப்பதற்குச் சொல்லப்படும், நோன்பு காலத்திலும் நோன்பு இல்லாத காலத்திலும் இஃதிகாஃப் இருக்கலாம். நோன்பு காலத்தில் இஃதிகாஃப் இருப்பது மிகச் சிறந்தது. நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் நோன்பு மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இஃதிகாஃப் இருப்பவர் குளிப்பது, மலஜலம் கழிப்பது போன்ற அவசியத் தேவைக்கின்றி வெளியில் செல்லக்கூடாது, நோன்பின் கடைசிப்பத்தில்; இஃதிகாஃப் இருப்பதனால் லைலத்துல் கத்ரின் இரவை அடைந்து கொள்ளலாம். எவருக்கெல்லாம் இஃதிகாஃப் இருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதோ பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

24. குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்

1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ”பரிந்துரை” செய்யும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும் குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும். குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆல இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
3) உங்களில் சிறந்தவர்கள் குர்ஆனைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து(குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால் அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ
6) “எவருடைய உள்ளத்தில் குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ
விளக்கம்: குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத் தெரிந்து கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும் அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள் அதைப்படிப்பது மிகவும் இலகுவானது.
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ
திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)
நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நம்மை நோக்கி சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜுமதுல் குர்ஆனில் விளங்கிப்படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளைக்கு எத்தனை எழுத்துக்கள் படிக்க நமக்கு வாய்ப்பிருக்கிறது. அதன் நன்மைகளை நம்மால் கணக்கிட முடியுமா? சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள். குர்ஆனைப் படித்து அதன்படி நடந்து ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!

25. ஸதகத்துல் ஃபித்ர்

1) முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமானவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரீத்தம் பழம் ஆகியவற்றை ”தர்மமாக” கொடுக்கும்படி நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
2) நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்) அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். ஆதாரம்: அபூதாவூத்
3) ரமளானின் இறுதியில் உங்கள் நோன்புத் தர்மத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கூறி இத்தருமத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அபூதாவூத், நஸயீ
4) நபி(ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி “தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்ற வாசகத்தை சொல்லச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி
விளக்கம்: ரமளான் மாத வழிபாடுகளில் ஸதகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். இஸ்லாத்தில் இரு பெருநாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. வருடம் முழுவதும் வறுமையில் வாடி வதங்கி உணவிற்கு வழியின்றித் திண்டாடும் நம் முஸ்லிம் சகோதரர்கள் எத்தனை எத்தனையோ பேர்!!! இவர்கள் பெருநாளில் மட்டுமாவது தம் வறுமையை மறந்து மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நம் ஏழைச் சகோதரர்களின் துயர் துடைக்க இஸ்லாம் அத்தருமத்தைக் கடமையாக்கியுள்ளது. இத்தர்மம் ஏழைகளின் உணவாகப் பயன்படுவதோடு அத்தர்மம் செய்தவர் நோன்பு நோற்றிருக்கும் போது செய்த தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமைகின்றது. இது இரக்கப்பட்டு நாம் விரும்பிய அளவு கொடுக்கும் தர்மமல்ல. மாறாக “தகுதியுள்ள ஒவ்வொருவரும் இதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என வலியுறுத்தப்பட்ட கட்டளையாகும்“ ஏழைகளின் துயர்துடைக்கவும் சகோதர வாஞ்சையை நினைவூட்டவும் கடமையாக்கப்பட்டுள்ளது. இத்தர்மத்தை நாம் அனைவரும் முறையாக நிறைவேற்றுவோமாக!
ஸதக்கத்துல் ஃபித்ராவின் சட்டங்கள்
கடமை: இது முஸ்லிம்களான ஆண், பெண், சிறியோர், பெரியோர், ஆகிய அனைவர் மீதும் கடமையாகும். எனவே குடும்பப் பொறுப்பாளர் அவர் குடும்பத்திலுள்ள அனைவருக்காகவும் இத்தர்மத்தைக் கொடுக்க வேண்டும். பெருநாள் அன்று தன்னுடைய செலவு போக மீதம் பொருள் மற்றும் தானியம் இருப்பின் அவர்கள் இத்தருமத்தைக் கொடுக்க தகுதி பெற்றவர். பெருநாள் அன்று செலவிற்கு பொருள் மற்றும் தானியம் இல்லாதவர்கள் இத்தர்மத்தைப் பெற்றுக் கொள்ள தகுதி பெறுவார்கள். அப்படிக் கொடுக்கும்படிதான் நம்மை நபி(ஸல்) அவர்கள் ஏவியிருக்கின்றார்கள்.
அளவு: இரண்டு கைகள் நிறைய அள்ளும் அளவு ஒரு முத்து எனப்படும். இவ்வாறு நான்கு மடங்கு சேர்ந்தது ஒரு ஸாவு எனப்படும். நபியவர்கள் ஒரு ஸாவு கொடுத்துள்ளனர். இதன் எடை தானியத்திற்கேற்ப வேறுபடும். எனவே கை அளவை அடிப்படையாகக் கொள்வதே பேணுதலாகும்.
நாள்: இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்கு முன்னர் பங்கீடு செய்து விட வேண்டும். தொழுகைக்குப் பிறகு கொடுத்தல் இக்கடமை நிறைவேற்றியவராக மாட்டார். ஷவ்வால் மாதத்தின் பிறை கண்டதிலிருந்து பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன் இத்தர்மத்தை கொடுத்துவிட வேண்டும். பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் இத்தர்மத்தை பங்கீடு செய்வதில் தவறில்லை.

26. பெருநாள் தொழுகை

1) நபி(ஸல்) அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ
2) ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிடாமல் நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
3) நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதலி ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா
4) நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் சென்றனர் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி
விளக்கம்: நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன் ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாகச் சாப்பிட்டுவிட்டுச் செல்வதும், ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையைத் தொழுதுவிட்டு உணவை உண்பதும் சுன்னத்தாகும். பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்தாகும். முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும். ஈதுத் தொழுகைக்கு அதானோ, இகாமத்தோ கிடையாது. ஈதுத் தொழுகைக்கு முன் பின் சுன்னத்தும் கிடையாது.

27. நோன்பின் கடமைகள்(பர்ளுகள்)

1) பருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும். பருவமடையாதவர்களின் மீது நோன்பு நோற்பது கடமையில்லை என்றாலும் பழக்கப்படுத்துவதற்காக நோன்பு நோற்குமாறு ஏவலாம்.
2) பைத்தியக்காரர்கள், நன்மை, தீமையை பிரித்தரிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர்கள் மீது நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்புக்குப் பகரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியதுமில்லை.
3) முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
4) சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியள்ளது. நோய் நீங்கி பின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
5) பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பிய பின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
6) கர்ப்பமாக இருக்கும் பெண், அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் பெண் நோன்பு நோற்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என்று பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. அந்தப் பயம் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
7) மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோற்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
8 ) நீரில் மூழ்குதல் மற்றும் தீ விபத்துப் போன்ற ஆபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பிறகு அந்த நோன்பை நோற்க வேண்டும்.

28. நோன்பை முறிக்கும் செயல்கள்

1) சாப்பிடுதல், குடித்தல், புகைபிடித்தல் போன்றவற்றால் நோன்பு முறிந்துவிடும்.
2) முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்துவிடும். தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.
3) உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை(மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்புக்குள் செலுத்தினால் நோன்பு முறிந்துவிடும்.
4) மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்துவிடும்.

29. அனுமதிகள்

1) நோன்பின் போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல் பிடுங்குதல், கண் காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்றவற்றிற்கு அனுமதியுள்ளது.
2) நோன்பு நாட்களின் பகற்பொழுதில் பல்துலக்குவது தவறில்லை. அது நோன்பல்லாத நாட்களின் சுன்னத்தாக இருப்பது போன்றே நோன்பு நாட்களிலும் சுன்னத்தாகும்.
3) குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்வது தவறில்லை. சுப்ஹு தொழுகைக்காக, குளித்துக் கொண்டாலே போதுமானது.
4) கடும் வெயிலின் காரணமாக, குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக் கொள்வதிலோ, அல்லது பகல் மற்றும் மாலைப் பொழுதில் குளித்துக் கொள்வதிலோ தவறில்லை.
5) நோன்பு திறக்க எதுவும் கிடைக்காவிட்டால். நோன்பு திறக்கும் நேரத்தில், நோன்பு திறப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டும். பிறகு வாய்ப்பு கிடைக்கும்போது சாப்பிட்டுக் கொண்டால் போதுமானது.
6) வாய்க் கொப்பளிக்கும் போது தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கி விட்டால் நோன்பு முறியாது. ஆனால் அடித்தொண்டை வரை தண்ணீரை செலுத்தாமல் இருக்க வேண்டும்.
7) நேரம் தெரியாது சூரியன் மறைந்துவிட்டது என்று நினைத்து, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது பஜ்ரு நேரம் வரவில்லை என்று நினைத்து, பஜ்ர் நேரம் வந்ததற்குப் பின்னரோ சாப்பிட்டு விட்டால் நோன்பு முறியாது. எனினும் சரியான நேரம் தெரிந்து விட்டால் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
8 ) காயங்கள், சிறு மூக்கு உடைதல், பல் பிடுங்குதல் போன்றவற்றால் இரத்தம் வெளியானால் நோன்பு முறியாது.
9) மறந்து அல்லது தெரியாமல் சாப்பிட்டால், அல்லது குடித்தோவிட்டால் நோன்பு முறியாது, ஆனால் நோன்பின் நினைவு வந்தவுடனேயே நிறுத்திக் கொள்ளவேண்டும்.

30. ஒழுக்கங்கள்

1) பஜ்ருக்கு சற்று முன்பு ஸஹர் உணவு உண்பதும், சூரியன் மறைந்தவுடனேயே தாமதப்படுத்தாது நோன்பு திறப்பதும் சுன்னத்தாகும்.
2) பேரீத்தம்பழத்தைக் கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.
3) ஸஹர் நேரத்தில் தாமதமாக எழுந்து பஜ்ருடைய நேரம் வந்துவிட்டது எனத் தெரிந்தும் கூட விடி ஸஹர் என்ற பெயரில் எதையேனும் உண்பதும் தவறாகும். பஜ்ர் நேரம் வந்து விட்டால் எதையும் உண்ணக்கூடாது. இதுபோன்ற நிலைகளில் ஸஹர் செய்யாமலேயே நோன்பு நோற்க வேண்டும்.
4) ஹலாலான உணவையே உட்கொள்ள வேண்டும். இதை எல்லாக் காலங்களிலும் கடைபிடிக்கவேண்டும்.
5) நோன்பாளி அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும், அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாக தவிர்ந்து கொள்ளவேண்டும். பொய், புறம், கோள் சொல்லுதல், ஏமாற்றுதல், ஹராமான வழியில் பொருள் ஈட்டல் போன்ற தவறான அனைத்து சொல், செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல் கட்டாயக் கடமையாகும்.
6) கடைசிப் பத்து நாட்களில் அதிலும் குறிப்பாக ஒற்றைப்படை இரவுகள் அனைத்திலும் இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவை தேடிக் கொள்ளவேண்டும்.
7) பெருநாள் தொழுகைக்கு முன்பு(ஸதகத்துல் ஃபித்ர்) எனும் பெருநாள் தர்மத்தை முறையாக கொடுக்க வேண்டும்.

31. ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்

1) “யார் ரமளான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம்”. என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்: முஸ்லிம்

நன்றி: இஸ்லாம்கல்வி.கொம் / சத்தியமார்க்கம்.கொம்

நபி மூஸா (அலை) அவர்களின் சிறப்புகள்..

நபி மூஸா (அலை) அவர்களின் சிறப்புகள்..

1532. 'இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா (அலை) அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா விரை வீக்கமுடையவர். எனவே அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை' என இஸ்ரவேலர்கள் கூறினார்கள். ஒரு முறை மூஸா (அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தங்களின் ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார்கள். அவர்களின் ஆடையோடு அந்தக்கல் ஓடிவிட்டது. உடனே மூஸா (அலை) அவர்கள் அதைத் தொடர்ந்து 'கல்லே! என்னுடைய ஆடை!' என்று சப்தமிட்டுச் சென்றார்கள். அப்போது, இஸ்ரவேலர்கள் மூஸா (அலை) அவர்களின் மர்மஸ்தலத்தைப் பார்த்துவிட்டு 'அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸாவிற்கு எந்தக் குறையுமில்லை' என்று கூறினார்கள். மூஸா (அலை) அவர்கள் தங்களின் ஆடையை எடுத்துக் கொண்டு அந்தக் கல்லை அடிக்க ஆரம்பித்தார்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.''அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா(அலை) அவர்கள் கல்லைக் கொண்டு அந்த கல்லின் மீது ஆறோ ஏழோ அடி அடித்தார்கள்'' என அபூஹுரைரா (ரலி) கூறினார்.
புஹாரி : 278 அபூஹுரைரா (ரலி).

1533. உயிர் பறிக்கும் வானவர் ஒருவர் மூஸா (ரலி) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்தபோது மூஸா (அலை) அவர்கள் அவரின் கண் பிதுங்கும் அளவுக்கு அடித்து விட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்விடம் போய், 'இறைவா! மரணிக்க விரும்பாத ஓர் அடியானிடம் நீ என்னை அனுப்பிவிட்டாய்' என்றார். பிறகு அல்லாஹ் அவரின் கண்ணைச் சரிப்படுத்திவிட்டு, 'நீர் மீண்டும் அவரிடம் சென்று, அவரை ஒரு மாட்டின் முதுகில் கையைவைக்கச் சொல்லி, அவரின் கை எத்தனை ரோமங்களை அடக்கிக் கொள்கிறதோ அத்தனை ஆண்டுகள் அவர் உயிர் வாழலாம் என்பதையும் கூறும்'' என அனுப்பி வைத்தான். (அவ்வாறே அவர் மூஸா (அலை) அவர்களிடம் வந்து கூறியபோது,) மூஸா (அலை) 'இறைவா! அதற்குப் பிறகு?' எனக் கேட்டதும் அல்லாஹ், 'பிறகு மரணம் தான்' என்றான். உடனே மூஸா (அலை) அவர்கள் 'அப்படியானால் இப்பொழுதே (தயார்)' எனக் கூறிவிட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும் புனிதத்தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள (புனிதத் தலத்திற்கு மிக அருகிலுள்ள) இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, 'நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணற் குன்றிற்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூஸா (அலை) அவர்களின் கப்ரைக் காட்டியிருப்பேன்'' எனக் குறிப்பிட்டார்கள்.
புஹாரி : 1339 அபூஹூரைரா (ரலி).

1534. ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், 'உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். அந்த யூதர், 'உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். அந்த யூதர், நபி (ஸல்) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். (நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்) நபி (ஸல்) அவர்கள், 'மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூஸா (அலை), (அல்லாஹ்வின்) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள்.
புஹாரி : 2411 அபூஹூரைரா (ரலி).

1535. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, 'அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், '(அந்தத் தோழர்) யார்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'அன்சாரிகளில் ஒருவர்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்'' என்று உத்திரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், 'இவரை நீர் அடித்தீரா?' என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, 'இவர் கடைவீதியில், 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததை செவியுற்றேன். உடனே நான், 'தீயவனே! முஹம்மதை விடவா (மூஸா மேன்மை வாய்ந்தவர்)?' என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட, இவரின் முகத்தில் அறைந்து விட்டேன்'' என்று கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், 'நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூஸாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். 'மூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்டபோது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதுமென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு) விட்டதா என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள்.
புஹாரி : 2412 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

உமர்(ரலி)அவர்களின் சிறப்புகள்

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
1545. உமர் (ரலி) (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார்கள். அப்போது மக்கள், அவரைச் சுற்றிலும் (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து பிரார்த்திக்கலாயினர். அவரின் ஜனாஸா (சடலம்) எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழலாயினர். அப்போது நான் அவர்களிடையே இருந்தேன். என் தோளைப் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் தான் என்னை திடுக்கிடச் செய்தார். (யாரென்று திரும்பிப் பார்த்த போது) அது அலீ இப்னு அபீதாலிப் (ரலி) தாம். அவர்கள், 'உமர் அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!'' என்று பிரார்த்தித்துவிட்டு, '(உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத் தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள் தாம் அத்தகைய மனிதர்.) அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்க(ளான நபி - ஸல் - அவர்கள் மற்றும் அபூபக்ர் - ரலி - அவர்)கள் இருவருடனும் தான் (அவர்களின் மண்ணறைக்கு அருகில் தான்) அடங்கச் செய்வான் என்று எண்ணியிருந்தேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், 'நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்'' என்றும் 'நானும் அபூபக்ரும் உமரும் (இந்த இடத்திற்கு) உள்ளே புகுந்தோம்'' என்றும் 'நானும் அபூபக்ரும் உமரும் புறப்பட்டோம்'' என்று சொல்வதை நான் நிறையச் செவியுற்றிருக்கிறேன் எனக் கூறினார்கள்.
புஹாரி : 3685 இப்னு அப்பாஸ் (ரலி).

1546. 'நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன. இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் இப்னு கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்? எனக் கேட்டதற்கு 'மார்க்கம்' 'என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்''.
புஹாரி : 23 அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி)

.1547. 'நான் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் (என்னுடைய கனவில்) ஒருபால்கோப்பை என்னிடம் கொண்டு வரப்பட்டது. உடனே (அதிலிருந்த பாலை நான்) தாகம் தீருமளவு குடித்து அது என்னுடைய நகக் கண்கள் வழியாக வெளியேறுவதைப் பார்த்தேன். பின்னர் மீதமிருந்ததை உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது நபித் தோழர்கள் இறைத்தூதர் அவர்களே! அந்தப்பாலுக்குத் தாங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள்?' என்று கேட்டதற்கு 'கல்வி' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''.
புஹாரி: 82 இப்னு உமர் (ரலி).

1548. நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை, வாளி தொங்கிக்கொண்டிருந்த ஒரு கிணற்றின் அருகே கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவிற்கு(த்தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூ குஹாஃபாவின் மகன் (அபூபக்ர் அவர்கள்) அதை எடுத்துக் கொண்டு அதிலிருந்து ஒரு வாளி நீரை.. அல்லது இரண்டு வாளிகள் நீரை.. இறைத்தார். அவர் (சிறிது நேரம்) இறைத்தபோது சோர்வு தெரிந்தது. அல்லாஹ் அவரின் சோர்வை மன்னிப்பானாக! பிறகு, அது மிகப் பெரிய வாளியாக மாறிவிட்டது. அப்போது அதை கத்தா பின் மகன் உமர் எடுத்தார். உமர் இறைத்தைப் போன்று இறைக்கிற (வலிமை மிக்க) ஒரு புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை மக்களில் நான் பார்த்ததில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டி வைக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3664 அபூஹுரைரா (ரலி).

1549. கனவில் இப்படி எனக்குக் காட்டப்பட்டது: நான் ஒரு சுற்றுச் சுவர் இல்லாத கிணற்றின் மீதிருந்த ஒரு வாளியால் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ர் அவர்கள் வந்து ஒரு வாளி... அல்லது இரண்டு வாளிகள்... தண்ணீரை(சற்று) சோர்வான நிலையில் இறைத்தார்கள். அல்லாஹ் அவர்களை மன்னிப்பானாக! பிறகு உமர் இப்னு கத்தாப் அவர்கள் வந்தார்கள். உடனே அந்த வாளி மிகப் பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான ஒரு (அபூர்வத்) தலைவரை நான் கண்டதில்லை. மக்கள் தாகம் தீர்ந்து, (தங்கள் ஒட்டகங்களுக்கும் நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3682 இப்னு உமர் (ரலி).

1550. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், '(கனவில்) 'நான் சொர்க்கத்தினுள் நுழைந்தேன்' அல்லது 'சொர்க்கத்திற்குச் சென்றேன்' அங்கு ஒரு மாளிகையைக் கண்டேன். நான், 'இது யாருடையது?' என்று கேட்டேன். அவர்கள் (வானவர்கள்), 'இது உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குரியது'' என பதிலளித்தார்கள். அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன். ஆனால், (உமரே!) உம்முடைய ரோஷம் குறித்து நான் அறிந்திருந்தது என்னை (உள்ளே செல்லவிடாமல்) தடுத்துவிட்டது'' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உமர் இப்னு கத்தாப் (ரலி), 'என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்டார்கள்.
புஹாரி :5226 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

.1551. நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோதுஅவர்கள், 'நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) அரண்மனை ஒன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலகில் இறைவணக்கம் புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையில் தன் அழகையும் பொலிவையும் இன்னும் அதிகரித்துக் கொள்ளவும்) உளூச் செய்து கொண்டிருந்தாள். நான், 'இந்த அரண்மனை யாருடையது?' என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். 'உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குரியது. ஜிப்ரீல் அவர்களும் மற்றும் அங்கிருந்த வானவர்களும்) பதிலளித்தார்கள். அப்போது எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. உடனே, அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டேன்'' என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அழுதார்கள். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்?' என்று கேட்டார்கள்.
புஹாரி : 3242 அபூஹூரைரா (ரலி).

1552. (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களின் மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்)அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவரச அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள். உமர் (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், 'என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவரச அவசரமாகப் பர்தா அணிந்தார்களே'' என்றார்கள். உமர் (ரலி), 'எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) 'தமக்குத் தாமே பகைவர்களாகி விட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்கள், 'ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் அதிகக் கடுமை காட்டக்கூடியவராகவும் இருக்கிறீர்கள்'' என்று பதிலளித்தார்கள். (அப்போது) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில் தான் அவன் செல்வான்'' என்று கூறினார்கள்.
புஹாரி :3294 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி)

.1553. (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்து விட்டபோது, அவரின் புதல்வர் அப்துல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் (ரலி), இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தம் தந்தைக்குக் கஃபனிடுவதற்காக நபி (ஸல்) அவர்களின் சட்டையைக் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் தம் சட்டையைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) தம் தந்தைக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தும்படி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகை நடத்துவதற்காக எழுந்தார்கள். உடனே உமர் (ரலி) எழுந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, 'இறைத்தூதர் அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்த வேண்டாமென்று உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தடை விதித்திருக்க, இவருக்கா தொழுகை நடத்தப்போகிறீர்கள்!'' என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , '(பாவமன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் உரிமையளித்துள்ளான்'' என்று கூறிவிட்டு, '(நபியே!) நீங்கள் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்; அல்லது கோராமலிருங்கள். (இரண்டும் சமம்தான். ஏனெனில்,) அவர்களுக்காக நீங்கள் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் சரி அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான்'' என்று கூறுகிறான். நான் எழுபது முறையை விட அதிகமாக (இவருக்காகப்) பாவமன்னிப்புக் கோருவேன்'' என்று கூறினார்கள். உமர் (ரலி), 'இவர் நயவஞ்சகராயிற்றே!'' என்று கூறினார்கள். இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்போது உயர்ந்தோனான அல்லாஹ், 'அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) தொழுகை நடத்தாதீர். அவரின் மண்ணறை அருகேயும் நீங்கள் நிற்க வேண்டாம்'' எனும் (திருக்குர்ஆன் 09:84 வது) வசனத்தை அருளினான்.
புஹாரி : 4670 இப்னு உமர் (ரலி).
நன்றி.. அல்லுஃலுவு வல்மர்ஜான்