அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Thursday, December 18, 2008

மறுமலர்ச்சியை எதிர்நோக்கி மற்றுமோர் புதுவருடம் (முன்னுரை)

இன்று உலக மக்களிடையே புதுவருடப்பிறப்பு என ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையிலான ஜனவரி மாதத்தின் முதல் நாள் பல்வேறு அனாச்சார களியாட்டங்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் அதிவேக வளர்ச்சியில் தங்களையும் பிணைத்துக் கொண்ட, இந்நவீன உலகின் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்களும் அதேதினத்தை புதுவருடப்பிறப்பாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவதும், இஸ்லாமிய வருடப்பிறப்பான இச்சிறப்புமிகு முஹர்ரம் மாதத்தில் எம்பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட ஆஷூரா தின நோன்புகளை நோற்காமல் அல்லது இம்மாதத்தின் மகத்துவத்தை உணராமல் ஏதோ ஓர் கடமைக்காக செய்வது போல் நோன்பு வைப்பதும் எங்கும் பரவலாக இன்று காணமுடிகிறது.

இஸ்லாமிய சமூகத்தின் ஒரு பெரும்பகுதி ஒருபுறம் அன்னியகலாச்சாரத்தில் வீழ்ந்து இஸ்லாமிய கலாச்சாரத்தை மறந்து கொண்டிருக்கும் அதேவேளை, இச்சமூகத்தின் மற்றொரு பெரும்பகுதியோ இஸ்லாம் வெறுக்கும் பல்வேறு அனாச்சார செயல்களில் தன்னை ஈடுபடுத்தி மற்றவர்களின் முன் இறைவனின் உயர்ந்த வாழ்க்கை நெறியை கேலிக்குள்ளாக்கிக் கொண்டு வருகின்றது.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்தை மேற்கத்திய கலாச்சாரங்கள் கொள்ளைக் கொண்டு சென்றுக் கொண்டிருக்கும் இந்நவீன காலகட்டத்தில் ஒவ்வொரு முஹர்ரம் மாதத்தின் பிறப்பும், இஸ்லாமிய உலகை நோக்கி இழந்து போன தங்களின் கலாச்சாரத்தை மீண்டெடுக்க அழைப்பு விடுத்துக் கொண்டு அமைதியாக சென்று கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு முஹர்ரம் மாதத்தின் பிறப்பும் இஸ்லாமிய உலகிற்குப் புத்துணர்ச்சியைத் தந்து வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கு பதில் எவ்வித உணர்வும் இன்றி அது சாதாரணமாக கடந்து செல்வதற்கு இம்முஸ்லிம் சமூகம் சங்கைமிக்க முஹர்ரம் மாதத்தின் மகத்துவத்தை சரியாக உணராததும், இஸ்லாமிய கலாச்சாரத்தை பேணுவதன் அவசியத்தை சரிவர அறியாததும் முக்கிய காரணங்களாகும்.

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு:

இம்முஹர்ரம் மாதம் அல்லாஹ்வின் மாதம் என எம்பெருமானா(ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட சிறப்புமிகு மாதம் ஆகும்.

முஹர்ரம் மாதத்திற்கென்று பல்வேறு தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் தலையாயவை இரண்டாகும்.

1. இம்மாதம் இஸ்லாமிய வருடப்பிறப்பின் ஆரம்ப மாதமாகும்.

2. இம்மாதத்தின் 10 ஆம் நாள் இறைத்தூதரான மூஸா(அலை) அவர்களையும் அவர்களின் சத்திய அழைப்பிற்கு செவிசாய்த்து ஏக இறைவன் மீது நம்பிக்கைக் கொண்ட சமூகத்தினரையும்(பனூ இஸ்ரவேலர்), அவர்களை அழித்தொழிக்கப் புறப்பட்ட ஃபிர்அவ்னிடமிருந்து வல்ல இறைவன் பாதுகாத்த நாளாகும்.

ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.

மேற்கண்ட ஹதீஸில் இம்மாதத்தை அல்லாஹ்வின் மாதமாக நபி(ஸல்) அவர்கள் சிலாகித்து குறிப்பிடுகின்றார்கள். மட்டுமல்ல முஹர்ரம் மாதம் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் அனுசரிக்கப்படும் நோன்புகள் ரமலான் மாத நோன்புகளுக்கு அடுத்தபடியான சிறந்த நோன்புகளாக நபி(ஸல்) அவர்களால் இங்கு அடையாளப்படுத்தப்படுகிறது.

"ஆஷூரா நோன்பைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது ,(அதற்கு) சென்ற வருடத்தின் பாவங்களுக்கு (அது)பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள்." அறிவிப்பவர் : அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம்.

ஒரு வருட பாவங்களுக்குப் பரிகாரமாக விளங்கும் இந்த ஆஷூரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் 10 ஆம் நாள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.

முஸா(அலை) அவர்களை மகிமைப் படுத்துவதற்கு யூதர்களை விட நான் அதிக தகுதி வாய்ந்தவன் எனக் கூறி அவ்வருடம் முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்ற நபி(ஸல்) அவர்கள், "எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்" (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.) எனக் கூறிச்சென்றாrகள்

இதன் அடிப்படையில் முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பை முஸ்லிம் உலகம் அனுஷ்டித்து வருகின்றது.

முஹர்ரம் மாத படிப்பினைகள்:

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உயிரோடு இருந்து முஹர்ரம் 10 அன்று மட்டும் நோன்பு வைத்திருந்தாலும் அவர்களின் எண்ணத்திற்கியைந்து 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பு வைக்கும் முஸ்லிம் சமூகம் அதன் பின்னணியில் உள்ள நபி(ஸல்) அவர்களின் உறுதியான சமுதாய சிந்தனையைக் குறித்து ஏனோ சிந்திப்பதே இல்லை.

நபி(ஸல்) அவர்கள், அடுத்த வருடம் தான் உயிருடன் இருப்பின் 9 அன்றும் நோன்பு வைப்பேன் என்று ஏன் கூறினார்கள்?

அதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் விரவிக் கிடக்கும் பல்வேறு நிகழ்வுகள் தெளிவான பதிலை தருகின்றன.

யூதர்களைப் பொறுத்தவரை, உலகில் சமூகத்தை நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்களின் எண்ணிக்கையை வைத்து மிகவும் அதிகமான நபிமார்களைப் பெற்றுக் கொண்ட சமுதாயமாகும். எனினும் தங்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களை நிராகரித்தது மட்டுமன்றி அவர்களில் அதிமானோரையும் கொடூரமாக கொலை செய்தவர்களாவர். இதனால் இறைவனின் கடும் சினத்திற்குரியவர்களாகி இறைவனால் சபிக்கப்பட்ட கூட்டமாக இறைவனின் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் கூட்டமாக அவர்கள் இருக்கின்றனர்.

இந்த காரணத்தினால் எப்பொழுதுமே தன்னுடைய செயல்களில் எதுவும் யூதர்களுக்கு ஒப்பாக எவ்விஷயத்திலும் இருந்து விடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டனர்.

அதோடு தன் தோழர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் யூதர்களுக்கு மாறு செய்யும் படி வலியுறுத்தவும் செய்தனர். இதற்கு உதாரணமாக பல்வேறு சம்பவங்களைக் குறிப்பிடலாம்.

அவற்றில் ஒன்று தான் இந்த ஆஷூரா 9 ஆம் நாள் நோன்பும். எவ்விஷயத்தில் யூதர்களின் செயலுக்கு தான் ஒப்பாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய நபி(ஸல்) அவர்கள் நன்மைகள் செய்வதிலும் நன்றி செலுத்துவதிலும் அவர்களை விட மேலதிகமாக இருக்கும் முகமாக ஆஷூரா 9 அன்றும் நோன்பு வைக்க விழைந்தார்கள்.

இவ்வாறு தனது ஒவ்வொரு அசைவிலும் மாற்றார்களின் கலாச்சாரத்தைப் பின்பற்றிவிடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் கவனமாக இருந்ததன் காரணம், இஸ்லாமிய கலாச்சாரம் எவ்விதத்திலும் மற்ற கலாச்சாரங்களோடு ஒன்றி அழிந்து விடக்கூடாது என்று கருதியேயாகும்.

ஆனால் இன்று நடப்பது என்ன?

முஸ்லிம்களுக்கும் புதுவருடப்பிறப்பு எனில் அது ஜனவரி 1 தான்.
முஸ்லிம்கள் தினசரி உபயோகிக்கும் நாள்காட்டியும் மாற்றார்களின் கடவுள்களை மகிமைபடுத்தும் அல்லது நினைவுறுத்தும் முகமாக பெயரிடப்பட்ட கிழமைகளைக் கொண்ட நாட்காட்டி தான்.
முஸ்லிம்கள் உடுத்தும் ஆடை முறையும் கரண்டைக்கு கீழே இழுபடும் அல்லது உடல் பாகங்களை வெளிப்படுத்தும் விதமான மேற்கத்திய ஆடைமுறை தான்.
முஸ்லிம்கள் இறந்தவர்களை நினைவுறும் முறையும், மாற்றார்கள் தன்னிலை மறந்து தரையில் விழுந்து அழுது புரண்டு தங்களது அங்கங்களையே காயப்படுத்திக் கொள்ளும் "பஞ்சா" போன்ற முறைகள் தான்.
இன்னும் அடுக்கிக் கொள்ள இச்சமுதாயத்தில் அனாச்சார விஷயங்கள் எண்ணற்று மலிந்து நிறைந்துள்ளன.

இவ்விதம் அனாச்சாரங்களின் கூடாரமாக கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கு முஹர்ரம் மாத துவக்கம் தரும் மகத்தான மற்றொரு சிந்தனை என்ன?

முஹர்ரம் மாதம் இஸ்லாமிய வருடத்தின் ஆரம்ப மாதம் என்பதோடு நிற்காமல் சற்று அதன் ஆழத்திற்கு இறங்கிச் சென்றால் புதுவருடம் தரும் மகத்தான சிந்தனையை எளிதில் அறிந்து கொள்ளலாம்.
இறைவன் நாடினால் தொடரும்..

ஆக்கம்: முன்னா
-நன்றி சத்தியமார்க்கம்.காம்