அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Saturday, November 8, 2008

சொத்தும் வேண்டாம்: சுகமும் வேண்டாம்!

ஸூஹைப் என்பது அவருடைய பெயர்.

அப்லா என்ற ஊரில் அவருடைய தந்தை பாரசீக நாட்டின் அதிகாரியாக இருந்தார்.

ஒருமுறை ரோம நாட்டினர் அந்த ஊரின் மீது படை எடுத்தார்கள்.

பாரசீக நாட்டுப் படையைத் தோற்கடித்து ஸூஹைபை கைதியாக பிடித்துக் கொண்டார்கள்.

மக்கா மாநகரில் அடிமையாக ஸூஹைபை விற்றுவிட்டார்கள்.

பின்னர் எப்படியோ ஒருவழியாக விடுதலையாகி அங்கேயே வாழ்ந்து வந்தார்.
தங்க நகைகள் செய்யும் தொழிலை செய்து வந்தார்.புகழ்பெற்ற ஆசாரியாக மாறிவிட்டார்.
ஏராளமான செல்வத்திற்கும் சொத்துக்களுக்கும் சொந்தக் காரராக மாறினார்.

இஸ்லாமியப் பிரச்சாரத்தை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் ஆரம்பித்தபோது அதுதான் சத்தியம் என்பதை உணர்ந்து எற்றுக் கொண்டார்.முஸ்லிமாக மாறிவிட்டார்.

மக்கா நகரத்து மக்கள் முஸ்லிம்களை நிம்மதியாக வாழ விடவில்லை.தொந்தரவுகளையும் தொல்லைகளையும் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.
முஸ்லிம்களாக வாழவேண்டுமென்றால் அடி உதைகளை சகித்துக் கொண்டே ஆகவேண்டும் என்ற நிலையே நிலவியது.

எத்தனை நாளுக்குத்தான் கஷ்டங்களையும் அடி உதைகளையும் தாங்கிக் கொண்டு இருப்பது?
முஸ்லிம்கள் வசிப்பதற்காக வேறு இடங்களுக்கு செல்லத் தொடங்கினர்.
முதலில் அபிசீனியாவுக்கு சென்றார்கள்.பிறகு, மதீனாவுக்குக் கிளம்பினார்.
ஸூஹைபும் மதீனாவுக்குக் கிளம்பினார்.தன்னுடைய எல்லா சொத்துக்களையும் விற்று மூட்டையாகக் கட்டிக் கொண்டார்.

ஒட்டகத்தின் மீது சாமான் செட்டுகளை வைத்துக் கட்டிக் கொண்டு ஊரை விட்டுக் கிளம்பிவிட்டார்.
மக்கா நகரைத் தாண்டி மதீனா நகரை நோக்கி போகலானார்.
திடீரென்று குதிரைகளின் குளம்பு ஒலி கேட்டது.
அவரை நோக்கி வெகுதூரத்தில் பல குதிரைகள் வந்துகொண்டிருந்தன.
இதோ, குதிரைகள் அவரை நெருங்கி வந்து நின்றுகொண்டன.

எங்கே போகிறீர்கள் ஸூஹைப்? என்று வந்தவர்களில் ஒருவன் ஸூஹைபைப் பார்த்துக் கேட்டான்.
நானா? நான் மதீனாவுக்குப் போய்க் கொண்டுள்ளேன்!

நான் முஸ்லிமாக வாழ விரும்புகிறேன்.

என்னால் இங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை.

ஆகையால் தான் மதீனாவுக்குக் கிளம்பி விட்டேன்.

என்றார் ஸூஹைப்.

அப்படியா! அப்படியென்றால் இந்த சொத்துகளை எல்லாம் இங்கேயே இறக்கி வைத்துவிட்டுச் செல்!

-என்றான் இரண்டாவதாக இன்னொருவன்.

ஒன்றும் புரியாமல் அவனையே உற்றுப் பார்த்தார் ஸூஹைப்.

என்ன நான் சொல்வது உனக்கு விளங்கவில்லை?

நீ ஓர் அடிமையாக எங்கள் ஊருக்கு வந்தாய்.

இங்கேயே தொழிலைக் கற்றுக் கொண்டாய்.

ஏராளமான பணங்காசுகளை சம்பாதித்தாய்.

இப்போது எங்கள் சமயத்தை விட்டுவிட்டு வேறு ஒரு சமயத்தை ஏற்றுக் கொண்டுள்ளாய்.

நீ சம்பாதித்த காசெல்லாம் எங்களுடையவை.

எங்களுக்கே சொந்தமானவை.

எங்கள் மதத்தைப் பின்பற்றுவதாக இருந்தால் இவ்வளவு சொத்து சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு எங்களுடனேயே இருந்துவிடலாம்.

இல்லை, மதீனாவுக்குப் போவதாக இருந்தால் எங்கள் ஊரில் சம்பாதித்த சொத்துகளை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போ!!

---என்றார்கள் வந்தவர்கள் அத்தனைபேரும்!!

ஒரு நிமிடம் நின்றார் ஸூஹைப்.
அவர்கள் சொன்னதை எல்லாம் மனதில் அசை போட்டுப் பார்த்தார்.
கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவராகக் கூறினார்:
இதோ! இந்த இனைத்து சொத்துகளையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.
நான் ஒருக்காலும் என்னுடைய சமயத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக மாட்டேன்.
வெட்டுஒன்று துண்டுஇரண்டு என்பதைப்போல தெளிவாக தன்னுடைய கருத்தை கூறிவிட்டார்.
அவருடைய சொத்துகளை எல்லாம் அந்தக் காஃபிர்கள் பறித்துக் கொண்டார்கள்.
வெறுங்கையோடு ஸூஹைபை அனுப்பிவிட்டோம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டடார்கள்.

ஆனால், உள்ளம் முழுக்க ஈமானை நிரப்பிக் கொண்டு ஸூஹைப் போனார்.

அவருடைய கைகள் காலியாக இருந்தன.

சொர்க்கமே அவருக்காக காத்துக் கொண்டு இருந்தது.

நான் சம்பாதித்த பொருள்: இதைக் காட்டிக் காப்பது என்னுடைய உரிமை என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை.

உரிமையை மீட்பதற்காக இஸ்லாமை இழந்துவிட அவர் தயாராக இல்லை.

இஸ்லாமுக்குப் பதிலாக இந்த உலகமே கிடைத்தாலும் அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய?

அல்லாஹ்வுடைய திருப்தியைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக தங்களுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்து விடுபவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்! (அல்குர்ஆன் 2:207)

No comments: