அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே... (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;. தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்;. இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்;. இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; - மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் - 2:3-5)"எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்" என்று முஹம்மது நபி (ஸல்..) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரதி) -ஆதாரம் : திர்மிதி

Thursday, July 2, 2009

சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார்?

"சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார்?; நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார்? என்று நான் நன்கறிவேன். மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்படுவார். அப்போது, 'இவர் புரிந்த சிறு பாவங்களை இவருக்கு எடுத்துக் காட்டுங்கள்! இவர் புரிந்த பெரும்பாவங்களை இவரை விட்டு நீக்கிவிடுங்கள்!' என்று கூறப்படும். அவ்வாறே அவருக்கு அவர் புரிந்த சிறுபாவங்கள் எடுத்துக் காட்டப்பட்டு, 'நீ இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன(பாவத்)தைச் செய்திருக்கிறாய்; இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன(பாவத்)தைச் செய்திருக்கிறாய்' என்று கூறப்படும். அவரும் 'ஆம்' என்று கூறுவார்; அவரால் எதையும் மறுக்க முடியாது. தாம் செய்த பெரும் பாவங்கள் தம்மிடம் எடுத்துக் காட்டப்படுமோ என்றும் அஞ்சிக் கொண்டிருப்பார். அந்நிலையில் அவரிடம், 'நீ செய்த ஒவ்வொரு (சிறு) தீமைக்கும் ஈடாக ஒரு நன்மை உனக்கு உண்டு' என்று கூறப்படும். அப்போது அவர், 'இறைவா! நான் இன்னும் பல (பெரும் பாவச்) செயல்களைப் புரிந்திருந்தேனே! அவற்றையெல்லாம் இங்கு நான் காணவில்லையே!' என்று கேட்பார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

இதைக் கூறும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி).
முஸ்லிம்=அத்தியாயம்: 1, பாடம்: 1.84, ஹதீஸ் எண்: 277

"மறுமை நாளில் நாம் இன்னின்னவாறு எல்லாருக்கும் உயரே வருவோம். அப்போது ஒவ்வொரு சமுதாயத்தாரும் அவரவர் வணங்கிய சிலைகளுடனும் வரிசையாக அழைக்கப்படுவர். பிறகு நம்மிடம் நம் இறைவன் வந்து, 'நீங்கள் யாரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்பான். அப்போது (ஓரிறை நம்பிக்கையுள்ள) மக்கள், 'நாங்கள் எங்கள் இறைவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்' என்று பதிலளிப்பார்கள். அவன், 'நான் தான் உங்கள் இறைவன்' என்பான். மக்கள், 'நாங்கள் உன்னைப் பார்க்காதவரை (உறுதி கொள்ள மாட்டோம்)' என்று கூறுவார்கள். ஆகவே, இறைவன் சிரித்தபடி அவர்களிடையே காட்சியளிப்பான். அப்போது அவர்களிலுள்ள நம்பிக்கையாளர் (முஃமின்), நயவஞ்சகர் (முனாஃபிக்) ஆகிய ஒவ்வொருவருக்கும் ஓர் ஒளி வழங்கப்படும். அவர்கள் அந்த ஒளியைப் பின் தொடர்ந்து செல்வார்கள். நரகத்தின் (மேல் அமைக்கப்பட்டிருக்கும்) பாலத்தின் மீது கொக்கிகளும் முட்களும் இருக்கும். அவை அல்லாஹ் நாடிய சிலரை (அவரவர் தீமைக்கேற்ப) கவ்விப் பிடிக்கும். பிறகு நயவஞ்சகர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒளி அணைக்கப்பட்டு விடும். அதன் பிறகு நம்பிக்கையாளர்கள் மட்டும் (அந்தப் பாலத்தைக் கடந்து) தப்பிச் செல்வார்கள். தப்பிச் செல்லும் முதல்கூட்டத்தில், பௌர்ணமி இரவின் முழு நிலவைப் போன்று ஒளிரும் முகத்தவர் எழுபதாயிரம் பேர் இருப்பர். அவர்களிடம் எந்த விசாரணையும் நடத்தப்படாது. பிறகு அவர்களைத் தொடர்ந்து வரும் கூட்டத்தார் வானத்துத் தாரகைகள் போன்று ஜொலிப்பர். இவ்வாறே அடுத்தடுத்து வருபவர்களும் (அவர்களது நன்மைகளுக்கேற்ப இலங்குவர்).

பிறகு பரிந்துரை (ஷஃபாஅத்) நடைபெறும். 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை' என்று கூறிய எவரது உள்ளத்திலும் வாற்கோதுமையளவு நன்மை இருந்தாலும் அவர் நரகத்திலிருந்து வெளியேறும்வரை (பரிந்துரைக்கு அனுமதி பெற்றவர்கள்) அவருக்காகப் பரிந்துரைப்பார்கள். அவ்வாறு நரகத்திலிருந்து வெளியேற்றப்படுபவர்கள் சொர்க்கத்தின் தாழ்வாரத்தில் வைக்கப்படுவார்கள். அவர்கள் மீது சொர்க்கவாசிகள் (ஜீவ)நீரைத் தெளிப்பார்கள். வெள்ளத்தில் மிதந்து வரும் விதைப்பயிர் முளைப்பதைப் போன்று (பொலிவுடன்) அவர்கள் எழுகின்றவரையில் (ஜீவ)நீர் தெளிக்கப்பட்டு, அவர்கள் மீதிருந்த தீக்காயங்கள் மறைந்து விடும். தமக்கு உலகமும் இன்னும் அதைப் போன்று பத்து மடங்கும் (சொர்க்கத்தில்) கிடைக்கும்வரை வேண்டிக்கொண்டே இருப்பர்".
முஸ்லிம்=அத்தியாயம்: 1, பாடம்: 1.84, ஹதீஸ் எண்: 278

குறிப்பு:

"மேலும், உங்களில் எவரும் அதைக் கடக்காமல் முடியாது ..." என்ற 19:71 இறைவசனம் பற்றிய விளக்கம் கேட்கப் பட்டபோது ஜாபிர் (ரலி) அவர்கள் மேற்கண்டவாறு விளக்கம் கூறியதாக இடம்பெற்று உள்ளது. (நபி (ஸல்) அவர்களைப் பற்றி இதில் குறிப்பிடப் படவில்லை).


No comments: